2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மீனவர் பலி; கடற்படை வீரர்கள் இருவர் கைது

George   / 2017 மார்ச் 24 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் விடத்தல் தீவு கடற்பரப்பில், குள்ளா படகு மூலம் மீன் பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் கடற்படை வீரர்கள் இருவர் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில்  இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர், விடத்தல் தீவு 7 ஆம் வாட்டாரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தாசன்   கில்மன் (வயது39) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, “மீனவர் குள்ளா படகு மூலம் விடத்தல் தீவு கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது, கடற்பாதுகாப்பில் ஈடுபட்ட கடற்படையினர் கடலில் படகு ஒன்று மூழ்கி கிடப்பதாகவும் அதனை சென்று பார்வையிடுமாறும் கரையில் உள்ள மீனவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இதன் போது சக மீனவர்கள் படகுகள் மூலம் குறித்த பகுதிக்குச் சென்று தேடுதல்களை மேற்கொண்ட போது முதலில் படகு மீட்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து,  மீனவர் பயன்படுத்திய டோர்ச் லைட், கடலில் மிதந்து வந்த நிலையில் மீட்கப்பட்டது.

தொடர்ச்சியாக மேற்கொண்ட தேடுதல்களின் போது, குறித்த மீனவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், தலை மற்றும் கழுத்து பகுதியில் பாரிய காயம் காணப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட மீனவரின் சடலம் பள்ளமடு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன், கடற்படையினரின் படகு, மீனவரின் படகுடன் மோதியதினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக  மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, விடத்தல் தீவு கிராம மக்கள், விடத்தல் தீவு கடற்படை முகாமை நேற்று  இரவு முற்றுகையிட்டனர். இதனால் விடத்தல் தீவு கிராமத்தில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

சம்பவ இடத்துக்கு, அருட்தந்தையர்கள், கிராம அலுவலகர்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோர் விரைந்து சென்று மக்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது, அடம்பன் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்த போது, கடற்படையினரை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், பொலிஸ் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, சந்தேகநபர்களான கடற்படை வீரர்கள் கைது செய்யப்படாமை குறித்து கேள்வி எழுப்பினர்.

இந்தநிலையில், இரண்டு கடற்படை வீரர்களை பொலிஸார் கைதுசெய்து, அடம்பன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

உயிரிழந்த மீனவரின் சடலம், பள்ளமடு வைத்தியசாலையில் இருந்து மன்னார் பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, விடத்தல் தீவு கடற்பரப்பில் தொடர்ச்சியாக மீனவர்களின் படகுகள் மீது கடற்படையினரின் படகு மோதி விபத்தை ஏற்படுத்தி வருவதாக, மீனவர்கள் தனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இந்த விபத்து சம்பவம் குறித்து, உரிய தரப்பினரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதுடன், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X