Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Princiya Dixci / 2017 மார்ச் 28 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பஹா மாவட்ட சுகாதாரப் பணிமனையின் கீழ் இயங்கும் சகல வைத்தியசாலைகளிலும் பொலித்தின் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பாவனையை முற்று முழுதாகத் தடை செய்வதற்கு, ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டிருப்பதோடு, பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, வைத்தியசாலைகளின் வளவுகளுக்குள் செவ்விளநீர் எடுத்துச் செல்ல, தடை விதிக்கப்படல் வேண்டுமென்றும் செவ்விளநீரைக் கண்ணாடிப் போத்தல்களில் மாத்திரம் ஊற்றி, எடுத்துச் செல்வதற்கான பணிப்புரை விடுக்கப்படல் வேண்டுமென்றும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டத்தில் தற்போது பரவியுள்ள டெங்குத் தொற்று தொடர்பிலான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திலேயே, இத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டத்திலுள்ள மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை ஆகியவற்றின் அனைத்துப் பிரதேசங்களிலும் கழிவகற்றல் நடவடிக்கைகள் முறையாக ஒழுங்குபடுத்தப்படல் வேண்டுமென்றும், திண்மக் கழிவுகளைத் தரம் பிரித்து அகற்றும் செயற்பாடுகள் சீரான முறையில் கடைபிடிக்கப்படல் வேண்டுமென்றும் இதன்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, மாவட்டத்தின் போதனா வைத்தியசாலைகளிலும், சில மாவட்ட, தள வைத்திய சாலைகளிலும் பொலித்தின் உள்ளிட்ட பிலாஸ்டிக் பொருட்களின் பாவனைகள் மற்றும் வைத்தியசாலைகளின் வளவுகளுக்குள் செவ்விள நீரை கண்ணாடி போத்தல்களில் ஊற்றாமல் எடுத்துச் செல்லல், தற்போது முற்றிலும் தடை செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிலையில், ஏனைய மாவட்ட , ஆதார மற்றும் பிரதேச வைத்திய சாலைகளிலும் இந்நடைமுறை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொண்டுவரப்படல் வேண்டுமென்றும், அதிகாரிகளினால் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், கம்பஹா மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ச்சியான முறையில் முன்னெடுக்கப்படல் வேண்டுமென்றும், மாவட்டத்தின் கம்பஹா, மீரிகம, நீர்கொழும்பு, மினுவாங்கொடை, வத்தளை ஆகிய பிரதேசங்களில் டெங்கு தொற்று தாக்கத்தின் அளவு அதிகரித்துக் காணப்படுவதால், இப் பிரதேசங்களிலுள்ள மக்கள் மத்தியில் கூடுதலான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படல் வேண்டுமென்றும், இதையும் மீறும் பட்சத்தில், கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டுமென்றும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .