23-02-10 தொடக்கம் 01-03-10 வரை
மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய) மேஷ ராசிநாதன் செவ்வாய் கடகத்தில் நீச ராசியில் நின்றாலும் அது 4-ஆம் இடம் ராசிக்கு கேந்திரம் பெறுவதால் நீசபங்கம் ஆகிறது. செவ்வாய் மகரத்தில் உச்சம். மகரத்துக்கு அதிபதியான சனியின் நட்சத்திரத்தில் (பூச) செவ்வாய் நிற்பதாலும் நீசபங்கம் ஆவார். அத்துடன் வக்ரமாகவும் இருப்பதால் வக்ரத்தில் உக்ரபலம் என்பதால் மேஷத்துக்கும் விருச்சிகத்துக்கும் அதிபதியான செவ்வாய் அந்த பலனை கெடுக்க மாட்டார். ஆனால் 4-ல் நிற்பதால் நின்ற இடத்துப் பலனைக் கெடுப்பார். அதாவது தேக சுகம், தாய், படிப்பு, பூமி, வீடு, வாகனம் போன்ற 4-ஆம் வீட்டுப் பலனை நிர்ணயிக்கும்போது ஜாதக தசாபுக்தி பலன்களையும் இணைத்து நிர்ணயிக்க வேண்டும். ஆகவே சிலருக்கு தேக சுகத்தில் பிரச்சினை ஏற்படும். செவ்வாய் ரத்த காரகன். சனி நரம்பு காரகன். செவ்வாய் நிற்கும் வீடு சந்திரன் வீடு கடகம். மனோகாரகன் சளி, இருமல், தருமல் காரகன். ஆகவே இவை சம்பந்தப்பட்ட பிணி, பீடைகள் உங்களைத் தாக்கலாம். சிலருக்கு மனத்தளவிலே ஏதோ ஒரு குறை இருப்பதாக உணர்வீர்கள். செவ்வாய் 7-ஆம் இடத்தையும் 10-ஆம் இடத்தையும் 11-ஆம் இடத்தையும் பார்ப்பதால் மனைவி வகை உறவினர்களாலும் தொழில்துறையிலும் உங்களுக்கு ஏதோ குறையிருப்பதாகத் தோன்றலாம். உங்கள் கடமைகளைச் சரிவர செய்தாலும் அதற்குரிய பலாபலன் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் ஏற்படலாம். அல்லது கடமைகளைச் செய்ய முடியாதபடி ஒரு சோர்வு, அசதி, பிடிப்பின்மை காணலாம். படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் மறதி, கற்பனை பயம், எதிர்காலம் பற்றிய கவலை, ஆர்வக்குறைச்சல் இருக்கலாம். தாயார் இருப்பவர்கள் தாயின் உறவில் வருத்தம் அல்லது தாய்க்குப் பீடை அல்லது தாயின் கோபத்துக்கு ஆளாகலாம். அதேபோல வாகன சம்பந்தமான தேவையற்ற செலவுகளும் விரயங்களும் உண்டாகும்.
ரிஷபம் (கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய) ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 10-ல் இருக்கிறார். வாரத் தொடக்கத்தில் ராகு சாரத்திலும் பிறகு குரு சாரத்திலும் சஞ்சரிக்கிறார். ராகு ராசிக்கு 8-ல் இருப்பதால் தொடக்கத்தில் உங்கள் காரியங்களில் தடை, தாமதம், கௌரவப் போராட்டம், மனக்கவலை ஆகிய பலன்களை சந்திக்க நேரும். பிறகு குரு சுக்கிரனோடு சேர்ந்திருப்பதால் தொழில் மேன்மை, வேலையில் நிம்மதி, வாழ்க்கையில் மகிழ்சி ஆகிய நற்பலன்களை எதிர்பார்க்கலாம். அதாவது ஒரு கிரகத்திற்கு சாரம் கொடுத்த கிரகமும், வீடு கொடுத்த கிரகமும் எங்கிருக்கிறார்களோ அந்த பலனைச் செய்வார்கள் என்பது விதி. சுக்கிரனுக்கு வீடு கொடுத்த சனி சுக்கிரனுக்கு 8-ல் மறைந்தாலும் ரிஷப ராசிக்கு 5-ல் இருப்பதால் பிள்ளைகள் வகையில் தொல்லைகளையும் அனுபவிக்க நேரும். சில சமயம் அவை அன்புத் தொல்லையாகவும் அமையும். உங்கள் எண்ணம், திட்டங்கள் ஈடேறும் என்றாலும், அதற்கு முன்னதாக கடுமையான போராட்டங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும்.
மிதுனம் (மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய) மிதுன ராசிநாதன் புதன் 9-ல் திரிகோணத்தில் இருக்கிறார். ஆரம்பத்தில் செவ்வாயின் சாரத்திலும் பிறகு ராகுவின் சாரத்திலும் சஞ்சாரம். செவ்வாய் 2-ல் நீசம். ராகு 7-ல் பலம். புதனுக்கு வீடு கொடுத்த சனி, புதனுக்கு 8-ல் மறைந்திருந்தாலும் புதனும் சனியும் பரிவர்த்தனை யோகம் பெறுகிறார்கள். 7, 10-க்குடைய குரு புதனோடு சேர்ந்து ஜென்ம ராசியைப் பார்க்கிறார். எனவே, உங்கள் செல்வாக்கும் சொல்வாக்கும் சிறப்பாக இருக்கும். நீங்கள் செய்யும் முயற்சிகளும் காரியங்களும் மனைவியின் துணைவியோடு வெற்றி பெறும். திருமணமாகாதவர்களுக்கு நண்பர்களின் துணையோடு நல்லது நடக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் இறக்கம் இருந்தாலும் நெருக்கடியோ, தட்டுப்பாடோ இருக்காது. தேவைக்கு பணம் புரளும். 10-க்குடைய குரு 9-ல் நிற்பதால் தர்மகர்மாதிபதி யோகமும் உங்களை வழிநடத்தும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். திருமணயோகம் புத்திர ப்ராப்தி யோகம், வாகன யோகம், பூமி, வீடு, யோகம் அமையும்.
கடகம் (புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய) கடக ராசிநாதன் சந்திரன் வாரத் தொடக்கத்தில் உச்சகதியாகவும், பிறகு ஜென்ம ராசியை (ஆட்சி வீட்டை) நோக்கி பயணிக்கிறார். ஜென்ம ராசியில் செவ்வாய் நீசபங்க ராஜயோகம் அடைகிறார். எண்ணிய எண்ணங்கள் கைகூடும். திட்டங்கள் நிறைவேறும். புதிய தொழில் முயற்சிகள் செயல்படும். சூரியன், புதன், சுக்கிரன், குரு அனைவரும் 8-ல் மறைந்திருந்தாலும் ஜென்ம ராசியில் நிற்கும் செவ்வாய் அவர்களைப் பார்ப்பதால் மறைவு தோஷம் நிவர்த்தியாகிறது. அதனால் காரியங்களில் ஏமாற்றம், தோல்விக்கு இடம் இல்லை என்றாலும் தடை, தாமதங்களைச் சந்திக்க நேரும். 12-க்குடையவர் புதன் 8-ல் செவ்வாய் சாரம் பெறுவதால் வெளியூர் வேலைவாய்ப்பு முயற்சிகள் அல்லது வெளிநாட்டுப் பயணத் திட்டங்கள் கைகூடும். 2-க்குடைய சூரியனும், 9-க்குடைய குருவும், 11-க்குடைய சுக்கிரனும் 8-ல் ஒன்றுகூடி இருப்பதால் எதிர்பாராத தன லாபங்களும் தொழில் சம்பந்தமான அனுகூலமான திருப்பங்களும் எதிர்பார்க்கலாம்.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய) சிம்ம ராசிநாதன் சூரியன் ராசிக்கு 7-ல் அமர்ந்து ராகு சாரம் பெற்று ராசியைப் பார்க்கிறார். பல நாட்களாக தடைபட்ட காரியங்களையும் தள்ளிப்போன நல்ல விஷயங்களையும் சாமர்த்தியமாக சாதிக்கும் காலம் இது. சந்தர்ப்பவாதியாக பழகிய சிலர் உங்களை விட்டுப் பிரிந்தாலும் விலகிப் போகாத விசுவாசமிக்கவர்களாய் உங்கள் செயல்களை முடித்துக் காட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். வேலை உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்கலாம். புதிய கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு உபதொழில் முயற்சிகளில் தீவிரமாக இறங்கலாம். வெற்றியும் அடையலாம். 2-ல் சனி ஏழரைச்சனியாக நடப்பதால் சில நேரங்களில் குறுக்கீடுகளும் போட்டிகளும் எதிர்பட்டாலும் அவற்றைக் கண்டு துவளமாட்டீர்கள். இதுவரையிலும் காத்து வந்த பொறுமையும் விடாமுயற்சியும் வெற்றியடையும். பெருமை பெறும். வரவேண்டிய கடன்கள் வசூல் ஆவதற்கு சுணக்கம் ஏற்பட்டாலும் கொடுக்க வேண்டியவற்றை குறிப்பிட்ட காலத்தில் கொடுத்து முடித்து வாக்கு நாணயத்தைக் காப்பாற்றலாம்.
கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய) கன்னி ராசிக்கு ஜென்மச்சனி நடைபெறுகிறது. சனி 5, 6-க்குடையவர். அவர் ஜென்ம ராசியிலும், அந்த வீட்டுக்குடைய புதன் 6-ஆம் இடத்தில் சனியின் வீடு கும்பத்திலும் இருப்பதால் பரிவர்த்தனை யோகம். 6-என்பது போட்டி, பொறாமை, கடன், வைத்தியச் செலவு இவைகளின் தாக்கம் உங்களுக்கு இருந்தாலும் 1, 10-க்குடைய புதன் 10-க்கு திரிகோணமாக இருப்பதால் தொழில் யோகம் தொய்வில்லாமல் தொடர்ந்து செயல்படும். அதனால் கடன் வட்டி வாசிகளை நாணயமாகச் செலுத்தி நல்ல பெயர் எடுக்கலாம். உங்களுக்கு வரவேண்டிய பாக்கிகளை கொடுக்காமல் இழுத்தடித்தாலும் ஏமாற்றமில்லாமல் தாமதமாக வசூல் ஆகும். வெளியூர் பயணங்களால் புதிய தொழில் ஒப்பந்தங்கள் அல்லது வேலை வாய்ப்புகள் நிறைவேறும். வருமானம் கூடும். செலவு நடைகளும் கூடும். சில நல்ல காரியங்களுக்காக சுபக்கடனும் வாங்கலாம். 11-ல் உள்ள செவ்வாய் சனியின் சாரத்தில் வக்ரமாகவும் நீசபங்க ராஜயோகமாகவும் இருப்பதால் வெற்றியும் லாபமும் பெருகும்.
துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய) துலா ராசிக்கு 4, 5-க்குடைய சனி 12-ல் மறைவு. விரயச்சனி (ஏழரைச்சனியில் விரயச் சனி) இது சுபவிரயச்சனி. எனவே பிள்ளைகள் வகையில் பூமி, வீடு, இடம், மனை அமையும் யோகம் உண்டாகும். சிலருக்கு வாகனம் வாங்கும் அமைப்பும் ஏற்படும். இவற்றின் முதலீட்டிற்காக கடன் வாங்கும் யோகமும் உண்டாகும். அது சுபக்கடன். 3, 6-க்குடைய குரு 5-ல் நின்று ராசியைப் பார்ப்பதும், ராசிநாதன் சுக்கிரனோடு சேர்ந்திருப்பதும், லாபாதிபதி சூரியனோடும் விரயாதிபதி புதனோடும் சேர்ந்திருப்பதும் ஏதாவது ஒரு சொத்தை லாபத்திற்கு விற்று இன்னொரு இடத்தை வாங்கவோ அல்லது வாங்கிய இடத்தில் வீடு கட்டவோ முயற்சிகளை மேற்கொள்ளலாம். எஸ்டிமேட் தொகையில் பற்றாக்குறைக்கு கடனும் வாங்கலாம். பிள்ளைகள் பேரில் செயல்படலாம். 4-ஆம் இடத்தை செவ்வாய் பார்ப்பதால் (செவ்வாய் 7-க்குடையவர் என்பதால்) உங்களுக்கோ மனைவிக்கோ உடல் நலத்தைப் பற்றிய கவலையும், சிகிச்சையும், வைத்தியச் செவுகளும் ஏற்படும். இருந்தாலும் குருவின் பார்வை கிடைப்பதால் பயப்படத் தேவையில்லை. பாதிப்பிற்கும் இடம் இல்லை.
விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய) விருச்சிக ராசிநாதன் செவ்வாய் பாதக ஸ்தானத்தில் நிற்பது குறைதான். விருச்சிக ராசி, ஸ்திர ராசி. அதற்கு 9-ஆம் இடமும் 9-க்குடையவரும் பாதகஸ்தானம், பாதகாதிபதி ஆவார்கள். 9-ஆம் இடம் சுத்தமாக இருந்தால் சந்திரனே முழு பாதகாதிபதி ஆவார். 9-ல் கிரகம் இருந்தால் அந்த கிரகத்திற்கே அந்த பாதகத் தன்மை சேர்ந்துவிடும். ஆகவே, செவ்வாய் பாதகாதிபத்திய தோஷம் அடைகிறார். என்றாலும் அவர் நீசம் வக்ரம் என்பதால் அதன் வேகம் குறையும். அதைக் காட்டிலும் லக்னாதிபதி அல்லது ராசியாதிபதி எங்கிருந்தாலும் அது புனிதமடையும். புனித நதி கங்கையில் அசுத்தங்கள் கலந்தாலும் அவை புனிதம் பெறும். கங்கைக்கும் அந்த களங்கம் ஏற்படாது என்பதுபோலவும் நெருப்பை நெருப்பு சுடாது என்பதுபோலவும் லக்னாதிபதி ராசியாதிபதிக்கு விதிவிலக்கு உண்டு. செவ்வாய் சகோதர காரகன் என்பதால் அந்த சகோதர வகையில் மட்டுமே பாதக பலன் நடக்கும். அத்துடன் செவ்வாயின் தசாபுக்திகளையும் அது பாதிக்கும். மற்ற வகையில் பாதிப்பு ஏற்படாது. 10-க்குடைய சூரியனும் 11-க்குடைய புதனும் 2-க்குடைய குருவும் 7-க்குடைய சுக்கிரனும் இணைவதால் மனைவி வகையில் தொழில் யோகம் சிறப்படையும்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய) தனுசு ராசிநாதன் குரு 3-ல் மறைந்திருப்பதாலும் ராகுவின் சாரம் பெறுவதாலும், சதயம் 3-ல் வர்க்கோத்தமமாக இருப்பதாலும், ராகு ஜென்ம ராசியில் நிற்பதாலும் உங்கள் கௌரவம், கீர்த்தி, செல்வாக்கு, புகழ், பெருமை இவற்றுக்கு எந்த வகையிலும் கேடு கெடுதிக்கு இடமில்லை. சிலருக்கு தேக சௌக்கியத்தில் சிறுசிறு சங்கடங்கள் தோன்றினாலும் பாதிக்காது. சிலருக்கு வீட்டுக் கவலை அதிகமாக இருக்கலாம். வசதியான வீடு அமையவில்லையே என்ற கவலை ஏற்படலாம். அல்லது பக்கத்து வீட்டுக்காரர்களின் தொல்லைகளினால் மனவேதனை அடையலாம். சொந்த வீட்டில் குடியிருப்பவர்களும் குறை வேலையை பூர்த்தி பண்ண முடியவில்லையே என்ற ஆதங்கம் ஏற்படலாம். இவை எல்லாம் குருவின் அஸ்தமனத்தின் பலன். மார்ச் 22 குரு உதயமானவுடன் இந்தக் குறைகள் எல்லாம் நீங்கிவிடும். அதுவரை உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலை தூக்காமலும் தன்னம்பிக்கை குறையாமலும், நடப்பது தாமதமானாலும் நடக்க வேண்டியது நல்ல நேரத்தில் நல்லபடி நடக்கும் என்ற மன தைரியத்தோடு நாளைக் கடத்துங்கள். நாளைய பொழுது நல்ல பொழுதாக அமையும்.
மகரம் (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய) மகர ராசிநாதன் சனி தன் ராசிக்கு பாக்கியத்தில் நிற்க, அந்த வீட்டுக்குடைய புதன் மகர ராசிக்கு 2-ல் தன ஸ்தானத்தில் நிற்க, சனியும் புதனும் பரிவர்த்தனை யோகம் பெறுகிறார்கள். இந்தப் பரிவர்த்தனை தனாதிபதி பாக்கியாதிபதி பரிவர்த்தனையாகும். அத்துடன் 9-க்குடைய புதனும் 10-க்குடைய சுக்கிரனும் சேர்ந்திருப்பதால் தர்மகர்மாதிபதி யோகமும் உங்களை வழி நடத்தும். இவை தனித்திருந்தால் மேற்கண்ட யோகங்கள் எல்லாம் நூறு சதவீதம் நடக்கும். ஆனால் அட்டமாதிபதி சூரியனும், விரயாதிபதி குருவும் இவர்களோடு இணைவதால் மேற்கண்ட யோகத்தில் முழு நிறைவான பலனை எதிர்பார்க்க முடியாது. திருவிளையாடல் திரைப்படத்தில் தருமி கொண்டு வந்த பாட்டில் பிழை இருக்கிறது என்று நக்கீரர் சொன்னவுடன் பிழை இருந்தால் என்ன! அதற்குரிய தொகையை பரிசுத் தொகையில் குறைத்துக் கொண்டு மீதிப் பரிசை கொடுங்கள் என்று தருமி கேட்ட மாதிரி! அட்டமாதிபதியும் விரயாதிபதியும் அந்த யோகத்தைக் குறைக்கிறார்கள். ஜாதக தசாபுக்திகள் யோகமாக இருந்தால் ஏலச்சிட்டில் கடைசியில் கட்டிய தொகைக்குமேல் லாபத்தோடு பணம் பெறலாம். ஆரம்பத்தில் கசனு நீக்கி எடுத்தால் குறைந்த தொகை கிடைக்கும். அதுபோல உங்கள் யோகம்.
கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய) கும்ப ராசிநாதன் சனி 8-ல் மறைவது குற்றம்தான். அதனால் அலைச்சல் கூடும். தொடங்கும் காரியங்கள் முற்றுப்பெறாமலும் முழுமையடையாமலும் தள்ளிப்போகும். பொருளாதாரத்தில் நிறைவு இருக்காது. நிதி நிலை சிரமமாகவும் சிக்கலாகவும் மந்தமாகவும் இருக்கும். ஆனால் சனிக்கு வீடு கொடுத்த புதன் ஜென்ம ராசியில் நிற்பதால் சனியும் புதனும் பரிவர்த்தனை யோகம் அடைகிறார்கள். ஆகவே கால தாமதம் ஏற்பட்டாலும் போட்டிகளும் குறுக்கீடுகளும் ஏற்பட்டாலும் தோல்வியைக் கண்டு துவளாமல் விடாமுயற்சியோடு செயல்படுவீர்கள். அதனால் வெற்றியைத் தேடிப்பிடித்து அடைவீர்கள். யோகம் இருப்பவர்க்கு வெற்றி தானாகத் தேடி வரும். யோகம் குறைந்தவர்க்கு வெற்றி இருக்கும் இடத்தை நாடிப்போய் அடைய வேண்டும். இதுதான் வித்தியாசம். ராசிநாதன் வலுவாக இருந்தால் யோகம். ராசிநாதன் 6, 8, 12-ல் மறைவாக இருந்தால் யோகமில்லை. இங்கு பரிவர்த்தனை என்பதால் நடுநிலைக்குச் சமம். அதேசமயம் 9-க்குடைய சுக்கிரனை 10-க்குடைய செவ்வாய் பார்ப்பதாலும் 2, 11-க்குடைய குருவும் அங்கு சம்பந்தப்படுவதாலும் தர்மகர்மாதிபதி யோகம் தனலாப யோகமும் ஏற்படுவதால் பணப்பற்றாக்குறை இருக்காது. தேவைகள் நிறைவேறும்.
மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய) மீன ராசிநாதன் குரு தன் ராசிக்கு 12-ல் மறைவது பலக்குறைவு என்றாலும், அவருக்கு வீடு கொடுத்த சனி ராசியைப் பார்ப்பதாலும் குருவுக்கு சாரம் கொடுத்த ராகு, குருவுக்கு 11-ல் ராசிக்கு 10-ல் இருப்பதாலும் தனலாபம் உண்டு. பொருளாதார நெருக்கடி இருக்காது. எளிதாக எல்லாக் காரியங்களும் நிறைவேறும். அதே சமயம் ஈடுபடும் காரியங்கள் யாவும் சிறுசிறு தடைகளுக்குப் பிறகு நிறைவேறும். சேமிப்பு இல்லாதபடி செலவு வரும்; வரவும் வரும். 4-ல் கேது இருப்பதால் சில சமயங்களில் உடல் உபாதைகள் உங்களுக்கு கவலையை ஏற்படுத்தினாலும் குருவும் குருவுக்கு வீடு கொடுத்த சனியும் குருவுக்கு சாரம் கொடுத்த ராகுவும் கேதுவைப் பார்ப்பதோடு, சுகாதிபதி புதனும் குருவோடு கூடியிருப்பதாலும் மலைபோல வரும் துன்பங்களும் பிணி, பீடைகளும் பனிபோல விலகிவிடும். பாட்டி வைத்தியத்திலேயே குணமாகிவிடும். குரு 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால் சிலருக்கு கடன்களும் சிலருக்கு போட்டி- பொறாமைகளும் ஏற்பட்டாலும் 11-ஆம் இடத்தை செவ்வாய் பார்ப்பதால் எல்லாவற்றையும் வெற்றி கொள்வீர்கள்.

