அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யுத்த செய்தியாளரான மேரி கொல்வின் (55) சிரியாவில் செய்தி சேகரிக்கச் சென்றபோது குண்டுவீச்சில் அகப்பட்டு உயிரழந்துள்ளார்.
பிரிட்டனின் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்காக 1985 ஆம் ஆண்டு முதல் பணியாற்றிய அவர், பிரான்ஸை சேர்ந்த புகைப்படவியலாளர் ரெமி ஒச்லிக் சகிதம் இன்று புதன்கிழமை உயிரிழந்ததாக பிரெஞ்சு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 30 வருடங்களாக பல்வேறு நாடுகளில் நடைபெற்ற யுத்தங்கள் தொடர்பாக செய்தி சேகரித்த மேரி கொல்வின் இலங்கையில் பணியாற்றியபோது காயமடைந்தார். அதனால் அவரின் இடது கண் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
28 வயதான ஒச்லிக், பிரான்ஸில் தான் ஸ்தாபித்த ஐ.பி.3 எனும் முகவர் நிறுவனத்துக்காக புகைப்படம் பிடிக்க சிரியாவுக்குச் சென்றிருந்தார்.
மேரி கொல்வினும் ஒச்லிக்கும் சிரியாவின் ஹோம்ஸ் நகரில் சிரிய படைகளின் குண்டுவீச்சில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் மேலும் பலரும் உயிரிழந்தனர்.
இவர்கள் குண்டுவீச்சிலிருந்து தப்பிச்சென்றுகொண்டிருந்தபோது பலியானதாக பிரெஞ்சு கலாசார அமைச்சர் பிரெட்ரிக் மிட்டரான்ட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனும் கொல்வினுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். சிரியாவில் மேரி கொல்வின் உயிரிழந்தமையானது ஊடகவியலாளர்கள் உண்மையைக் கூறுவதற்காக எதிர்கொள்ளும் ஆபத்தை வெளிப்படுத்துகிறது என அவர் தெரிவித்துள்ளார்.


Comments
RSS feed for comments to this post