(கவிசுகி)
யாழ். மண்டைதீவுப் பகுதியில் சுனாமி எச்சரிக்கைக் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
2004ஆம் ஆண்டு இந்தோனேசியா சுமாத்திராத் தீவுகளில் ஏற்பட்ட பூமி அதிர்வின் காரணமாக சுனாமித் தாக்கம் இலங்கையையும் பாதித்தது. இதனால் பல்லாயிரம் உயிர்கள் பறிக்கப்பட்டன. இதன் பின்னர் அவ்வாறான அனர்த்தம் ஏற்படுமிடத்து அதனை முன் கூட்டியே பொதுமக்களுக்கு அறியத் தரும் சுனாமி எச்சரிக்கைக் கோபுரங்கள் இலங்கையின் பல பகுதிகளிலும், கடற்கரை ஓரங்களிலும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதன் கீழ் வட பகுதியில் குறிப்பாக யாழ். குடாநாட்டில் சுனாமி எச்சரிக்கைக் கோபுரங்கள் பல நிறுவப்பட்டுள்ளன. வடமராட்சி கிழக்கு, வடமராட்சி பருத்தித்துறை போன்ற இடங்களில் சுனாமி எச்சரிக்கைக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் கீழ் மண்டைதீவுப் பகுதியிலும் அவ்வாறு சுனாமி எச்சரிக்கைக் கோபுரம் ஒன்றை நிறுவுவதற்கு அங்குள்ள கடற்படையினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ் விடயம் குறித்து முதற்கட்ட நடவடிக்கையாக யாழ். செயலக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் கடற்படையினர் பேச்சுக்களில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிய வருகின்றது. இதற்காக கருவி ஒன்றும் தயார் நிலையில் யாழ். செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக் காரியாலயத்தில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

