(ரி.லோஹித்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணல்பிட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் சுற்றுலா விசாவில் இலங்கை வந்து அறுவடைத் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 6 இந்தியர்களுக்கு தலா 2000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
கொக்கட்டிச்சோலைப் பகுதியில் கடந்த திங்கட்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட இவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அன்றையதினங்களில் இவர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரினால் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் தண்டம் விதித்து தீர்ப்பளித்தார்.
சுற்றுலா விசாவில் இலங்கை வந்த இவர்கள் விவசாய அறுவடை வேலைகளின்போது அறுவடை இயந்திரங்களுக்கான சாரதிகளாக பணியாற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

