வெள்ளிக்கிழமை, 18 மே 2012

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 113பேர் கைது

 

(ராக்கி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுக் கொண்ட 113பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து வந்த மின்சார சபை விசேட விசாரணைப் பிரிவு அதிகாரிகளும், மட்டக்களப்பு மின்பொறியியலாளர் பணிமனையின் அதிகாரிகளும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து 10 - 15 வரையான வாகனங்களில் வந்த மின்சார சபை விசேட விசாரணைப் பிரிவு அதிகாரிகள் 60 பேர் கொண்ட குழுவினர், இரு குழுக்களாக பிரிந்து மட்டக்களப்பு மாவட்ட மின்பொறியியலாளர் பணிமனையின் அதிகாரிகளையும் இணைத்து இரு பிரிவுகளாக வாழைச்சேனைப் பகுதி, மட்டக்களைப்பு ஏறாவூரை அண்டிய பிரதேசத்தில் தேடுதல் நடத்தியுள்ளதாக மாவட்ட மின்பொறியியலாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இன்று அதிகாலை 5.00 மணி தொடக்கம் கரடியனாறு, வாழைச்சேனை, எறாவூர், வாகரை பொலிஸ் பிரிவுகளில் மேற்கொண்ட தேடுதலில் 113 பேருக்கு அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதியப்பட்டன.

பொலிஸாரின் உதவியுடன் கைப்பற்றப்பட்ட மின் பொருட்கள், வயர்களுடன் பெருந்தொகையாக சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றவர்களை ஆஜர்படுத்த உள்ளதாக இக்குழுவில் அங்கம் வகிக்கும் மட்டக்களப்பு மாவட்ட மின்பொறியியலாளர் பணிமனையின் ஊழியர் மேற்பார்வை இணைப்பாளர் திருமதி.ரஜனி தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

அந்தவகையில், ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 20 பேரும், கரடியனாறு பொலிஸ் பிரிவில் 50 பேரும், வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 35, வாகரை பொலிஸ் பிரிவில் 08 பேருமாக 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Views: 446

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.