(எஸ்.சுவர்ணஸ்ரீ)
ஹட்டன் தலைமை பொலிஸ் பிரிவின் ஊடாக கடந்த வருடம் மேற்கொண்ட சுற்றாடல் பாதுகாப்புத் தொடர்பான திடீர் பரிசோதனைகளின் போது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஹட்டன் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் 53 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
மேற்படி சுற்றாடல் பரிசோதனைகளின் போது டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்தவர்கள், குப்பைகளைப் பாதைகளில் வீசியவர்கள், மலசலக்கழிவுகளை வடிகால்களுக்கு வெளியேற்றியவர்கள், காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்தவர்கள் போன்றவர்களிடமிருந்தே மேற்படி தொகை அபராதமாக பெறப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.

