(எஸ். எம். மும்தாஜ்)
சிலாபம் நீதிமன்றத்தில் பிணை வழங்கப்படுகின்றவர்களுக்கு, பணத்திற்காக பிணையாளிகளைத் தேடிக் கொடுக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வந்த, நீதிமன்றத்தில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமையாற்றும் ஒருவரை வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் மாவட்ட நீதிபதி ஜகத் ஏ.கஹத்கமகே உத்தரவிட்டுள்ளார்.
பிரபாத் குமார எனும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சுமார் 25 நபர்களிடம் பல இலட்சம் ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் சந்தேக நபர் ஒருவருக்கு பிணைக்காக ஆஜரான இருவர் தொடர்பில் எழுந்த சந்தேகத்தினையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கடந்த புதன் கிழமை சிலாபம் பொலிஸாரால் நீதிமன்றத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே கைது செய்யப்பட்ட இச்சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் , நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்தே இம்மாதம் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
சிலாபம் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி திஸ்ஸ மல்தெனிய தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

