(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)
ஹம்பாந்தோட்டை சூரியவௌவில் 6 குளங்களை நிரப்பி, 1435 ஏக்கரில் விளையாட்டுக் கிராமம் அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய விவசாயிகளின் தேவைகள் குறித்து கூடுதல் அக்கறை செலுத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயிடம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று கோரினார்.
இவ்விளையாட்டுக் கிராமம் அமைக்கும் திட்டத்தால் 6 குளங்கள் மறைந்துவிடும் என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண கூறியமைக்கு அமைச்சர் பதிலளிக்கும்போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விவசாயிகளின் ஜீவனோபாயம் பாதிக்கப்படும் எனக்கூறிய புத்திக பத்திரண எம்.பி., இவ்விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் என்ன நடவடிக்கை மேற்கொள்ளும் வினவினார்.
அப்போது, அவர்களுக்கு நீர்ப்பாசனத் திட்டங்கள் அமைத்துக்கொடுக்கப்படும் என அமைச்சர் அளுத்கமகே பதிலளித்தார். 'நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாத்தறையிலிருந்து அவர்களுக்கு நீரை கொண்டுவர முடியாது' எனவும் அமைச்சர் கூறினார்.

