இலங்கைத் தமிழ் இளைஞரான பரமேஸ்வரன் சுப்ரமணியம், கடந்த வருடம் பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு வெளியே உண்ணாவிரதம் மேற்கொண்டபோது பர்கர் எனும் திண்பண்டத்தை இரகசியமாக உட்கொண்டார் என செய்தி வெளியிட்ட பிரிட்டிஷ் பத்திரிகைகளுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.
மேற்படி குற்றச்சாட்டு தவறானது என ஒப்புக்கொண்டுள்ள 'த சன்' மற்றும் 'டெய்லி மெயில்' ஆகியன சுமார் 80 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்களை (சுமார் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபா)நஷ்ட ஈடாக வழங்க சம்மதித்துள்ளன.
29 வயதான பரமேஸ்வரன் , கடந்த வருடம் இலங்கையில் தமிழர்கள் நடத்தப்படும் விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு வெளியே 23 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் 5 நாட்கள் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.
மேற்படி உண்ணாவிரதத்தின் போது அவர் இரகசியமாக பர்கர்களை உட்கொண்டார் என மேற்படி பத்திரிகைகள் செய்திவெளியிட்டிருந்தன.
இது தொடர்பாக லண்டன் மேல் நீதிமன்றில் பரமேஸ்வரன் வழக்குத் தொடுத்தார். தற்போது, மேற்படி பத்திரிகைள் தமது குற்றச்சாட்டை வாபஸ் பெற்றுள்ளதுடன் மன்னிப்பும் கோரியுள்ளன. அத்துடன் அச்செய்தியால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடாக 80 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்களை வழங்கவும் சம்மதித்துள்ளன.
பரமேஸ்வரன் மேற்படி உண்ணாவிரதத்தின்போது எந்த உணவையும் உட்கொள்ளவில்லை என நீதிபதி டேவிட் இயடி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
"உண்மையற்ற செய்திகள் காரணமாக பரமேஸ்வரன் உலகளாவிய தமிழர் போராட்டத்திற்கு நம்பிக்கைத் துரோகமிழைத்துவிட்டார் என நம்பிய தமிழர் சமூகத்தினால் பரமேஸ்வரன் ஒதுக்கப்பட்டிருந்தார்" எனவும் நீதிபதி டேவிட் இயடி கூறியுள்ளார்.
மேற்படி பத்திரிகைச் செய்திகளின் பினன்ர் தான் தற்கொலை செய்துகொள்ளவும் யோசித்ததாக ஏ.எவ்.பி. செய்திச் சேவையிடம் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.
"தமிழ் சமூகத்திடமிருந்து செல்லிடத் தொலைபேசி குறுஞ்செய்திகள் மூலம் எனக்கு அச்சுறுத்தல்கள் வந்தன. பரமேஸ்வரனைக் கொல்லுங்கள் என குறுஞ்செய்திகள் பரப்பப்பட்டன" என பரமேஸ்வரன் கூறியுள்ளார்.


Comments
RSS feed for comments to this post