இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கும் இந்திய அணியின் பிரதான அனுசரணையாளரான சஹாரா நிறுவனத்திற்கும் கடந்த சில நாட்களாக இடையில் நிலவிய இழுபறி நேற்று முடிவுக்கு வந்துள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளையடுத்து இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இதன்படி, இந்திய அணிக்கு தொடர்ந்தும் சஹாரா நிறுவனம் அனுசரணை வழங்கும் எனவும் ஐ.பி.எல். போட்டிகளில் சஹாரா நிறுவனத்துக்குச் சொந்தமான புனே வாரியர்ஸ் அணி மீண்டும் இணைந்துகொள்ளும் எனவும் நேற்று வியாழக்கிழமை விடுக்கப்பட்ட கூட்டறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். போட்டிகளுக்கான வீரர்கள் பரிமாற்றக் காலம் இன்று 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முடிவடையவிருந்தது. அதை சஹாராவின் கோரிக்கையின் பேரில் பெப்ரவரி 29 ஆம் திகதிவரை நீடிப்பதற்கு இந்திய கிரிக்கெட் சபை இணங்கியுள்ளது.
புனே வாரியர்ஸ் அணியின் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங் விளையாட முடியாதுள்ள நிலையில், ஏனைய அணிகளின் சம்மதம் பெறப்பட்டால் 11 பேர் கொண்ட அணிக்கு அனுமதிக்கப்பட்ட 4 வெளிநாட்டு வீரர்களைவிட மேலும் ஒரு வீரரை புனே அணியில் சேர்க்க அனுமதிப்பதற்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இணங்கியுள்ளது.
இக்கூட்டறிக்கையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் என். ஸ்ரீநிவாசனும் சஹாரா நிறுவனத்தின் தலைவர் சுப்ரதா ரோயும் கையெழுத்திட்டுள்ளனர்.
புனே அணி மீண்டும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் என்ற அறிவிப்பு அவ்வணி வீரர் முரளி கார்த்திக் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

