.jpg)
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு தெரிவாகுவதற்கு பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதிப் போட்டியில் 261 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 260 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
மொஹாலியில் நடைபெறும் இப்போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. முதல் விக்கெட்டுக்காக வீரேந்தர் ஷேவாக்கும் சச்சின் டெண்டுல்கரும் 48 ஓட்டங்களைப் பெற்றனர். ஷேவாக் 25 பந்துகளில் 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அதன்பின் சச்சின் டெண்டுல்கரும் கௌதம் காம்பீரும் இரண்டாவது விக்கெட்டுக்காக 68 ஓட்டங்களைப் பெற்றனர்.
காம்பீர் 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாட வந்து வீரட் கோலி (9), யுவராஜ் (0) ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தபோது இந்திய அணி நெருக்கடிக்குள்ளானது.
தனது 100 ஆவது சர்வதேச சதத்திற்காக காத்திருக்கும் டெண்டுல்கர் 85 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.
அணித்தலைவர் டோனி 25 ஓட்டங்களுடன் வெளியேறிய பின்னர் ஹர்பஜன் சிங் 12 ஓட்டங்களுடனும் ஸஹீர்கான் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களைப் பெற்றார்.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் வஹாப் ரியாஸ் 46 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் சயீட் அஜ்மல் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

