
உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சம்பியனான இந்திய அணிக்கு வழங்கப்பட்ட சம்பியன் கிண்ணம் அசல் கிண்ணமே எனவும் மாதிரி கிண்ணம் அல்ல எனவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் (ஐ.சி.சி.) இன்று தெரிவித்துள்ளது. மும்பை சுங்கப்பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டது வேறொரு கிண்ணம் எனவும் ஐ.சி.சி. கூறியுள்ளது.
சனிக்கிழமை மும்பையில் நடைபெற்ற இலங்கையுடனான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வழங்கப்பட்ட கிண்ணம் நகல் கிண்ணமொன்றே எனவும் அசல் கிண்ணம் தீர்வை செலுத்தப்படாததால் மும்பை சுங்கத் திணைக்கள அலுவலகத்தில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், ஐ.சி.சி. மற்றும் இந்திய கிரிக்கெட் சபை நகல் கிண்ணத்தை எம்.எஸ். டோனி தலைமையிலான இந்திய அணிக்கு வழங்கிவிட்டதாக கூறி, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் அதிருப்தி வெளியிட்டிருந்தனர்.
இதையடுத்தே இந்திய அணிக்கு வழங்கப்பட்டது அசல் கிண்ணம்தான் என ஐ.சி.சி. அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
'தவறான விஷமத்தனமான ஊடக செய்திகளுக்கு முரணாக, சனிக்கிழமை வாங்கடே அரங்கில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிகளில் சம்பியனாகும் அணிக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த அசல் கிண்ணம்தான் என்பதை ஐ.சி.சி உறுதிப்படுத்துகிறது.
அது நகல் கிண்ணமா என்ற கேள்விக்கு இடமில்லை. இந்தியாவுக்கு வழங்கப்பட்ட கிண்ணத்தில் 2011 உலகக் கிண்ண சுற்றுப்போட்டிக்கான பிரத்தியேக இலச்சினையும் பொறிக்கப்பட்டுள்ளது. 14 அணிகளும் இந்த கிண்ணத்திற்காகத்தான் விளையாடின.
மும்பை சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட கிண்ணம் துபாயில் ஐ.சி.சி. தலைமையகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படும் நிரந்தர கிண்ணமாகும். அதில் 2011 உலகக்கிண்ண சுற்றுப்போட்டி இலச்சினைக்குப் பதிலாக ஐ.சி.சி. இலச்சினையையே கொண்டுள்ளது. அக்கிண்ணம் திங்கட்கிழமை மீளப் பெறப்பட்டு துபாயிலுள்ள ஐ.சி.சி. தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்படும்' என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
இதேவேளை, தாம் தடுத்துவைத்தது அசல் கிண்ணமா நகல் கிண்ணமா என்பது தமக்குத் தெரியாது என இந்திய சுங்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
எவ்வாறெனினும் 35 சதவீத சுங்க வரி செலுத்தப்பட்டால் அக்கிண்ணத்தை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படும் என இந்திய சுங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக சம்பியன் கிண்ணத்தை ஐ.சி.ச. அதிகாரிகள் பல மாதத்திற்கு முன்னரே மும்பைக்கு கொண்டுவந்து சேர்த்திருக்கவேண்டும். சம்பியன் அணிக்கு வழங்குவதற்கு அசல் கிண்ணம் இல்லை என்பது நம்பமுடியாமலிருக்கிறது என இந்திய அணியின் முன்னான் வீரர் அருன் லால் கூறியிருந்தார்.
மற்றொரு முன்னாள் வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கீர்த்தி ஆஸாத் கருத்துத் தெரிவிக்கையில். ஐ.சி.சி. 45 கோடி ரூபா வரிவிலக்கு பெற்றது. 600 கோடி ரூபா சம்பாதித்தது. அதற்கு 22 லட்ச ரூபா சுங்கத் தீர்வை செலுத்த முடியவில்லை. சரத் பவார் (ஐசி.சி.தலைவர்) குறித்து நான் ஏமாற்றமடைகிறேன்' என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)


Comments
RSS feed for comments to this post