எதிரெதிர்த்திசைகளுடேநீயும் நானும் தூரமாய் வெகுதூரமாய்
பிரிந்துவிட்ட நேரத்தில்
வலுத்துப்பெய்த மழைபற்றி
நமக்கெந்த அக்கறையும் இருக்கவில்லை.
உன் நிழல் பார்த்துத்தொடர்ந்த
என் வாலிபப் பயணங்களின் மெல்லிய இழையை
காலத்தின் கூர்வாள் சடுதியாக கிழித்தபோது
திகைப்பையும் கண்ணீரையும் தவிர
வேறென்ன செய்தோம் நாம்?
அதோ நீ செல்லும் பாதை இருள் சூழ்ந்தது
இதோ நான் செல்லும் பாதை முள் நிறைந்தது
நமக்கே தெரியாத பயணமொன்றின்
நிர்ப்பந்தத்தில் அவசர அவசரமாக
நகர்ந்து கொண்டிருக்கும் கணப்பொழுதில்
எப்போதாவது நினைத்துப்பார்..
என் கைகோத்தபடி நாம் நடந்த
பயணங்களின் ரம்யத்தையும்..நிம்மதியையும்..?
கவிதையாக்கம்:- நிந்தவூர் ஷிப்லி
ஓவியம்: நிர்மலவாசன்
.gif)