2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘பொலிஸார் வன்முறையாளர்களுக்கு துணை போகின்றனர்’

Editorial   / 2017 மே 24 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸாரும் அந்தந்த பொலிஸ் நிலையங்களிலுள்ள பொறுப்பதிகாரிகளும், நேர்மையுடனும் பாரபட்சமுமின்றியும் செயற்பட்டு சட்டத்தைக் கையிலெடுத்திருந்தால், முஸ்லிம்களுக்கெதிரான மோசமான செயற்பாடுகளை நிறுத்தியிருக்க முடியுமென்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொண்டு வந்த இனக்குரோதச் செயற்பாடுகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையின் மீது, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது, 

“கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி தொடக்கம் இன்று வரை, முஸ்லிம்களுக்கெதிரான சுமார் 19 - 20 சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன. 

“குருநாகல் - மல்லாவிப்பிட்டி பள்ளிவாசல், பாணந்துறை - நகரப் பள்ளி, வெல்லம்பிட்டிய - கொஹிலவத்த பள்ளி ஆகியவற்றையும் இனவாதிகள் தாக்கியுள்ளனர்.   

“அது மட்டுமன்றி, 150 வருடம் வரை பழமைவாய்ந்த முஸ்லிம் கிராமமான அழிஞ்சிப் பொத்தானை, பள்ளியகொடவில், பொலிஸாரும் பார்த்திருக்கும் நிலையில், அங்குள்ள மக்கள் மீது அடாவடித்தனங்களை மேற்கொண்டு, அந்த மக்களின் வீடுகளை அடித்து நொருக்கி, அவர்களை சொந்த இடத்திலிருந்து விரட்டி வெளியேற்றியுள்ளனர்.  

“அதேபோன்று 300 வருடம் பழமைவாய்ந்த தோப்பூரிலுள்ள கிராமத்தில் கொழும்பிலுருந்து சென்ற சிலர், அந்த மக்களை அச்சுறுத்தி, அவர்களை அந்தக் கிராமத்திலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர்.  

“சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் இவ்வாறான மிலேச்சத்தனமான நடவடிக்கைகளினால், மக்கள் நல்லாட்சியின் மீதான நம்பிக்கையை வலுவாக இழந்து வருகின்றனர்.  

“இந்த நாட்டிலே, பயங்கரவாதத்தை ஒழித்த புலனாய்வுப் பிரிவொன்று இருப்பதாகக் கூறப்படுகின்றது. பாதாள உலகக் கோஷ்டியின் தலைவனை, அந்தப் புலனாய்வுப் பிரிவே கைது செய்ததாகவும் கூறுகின்றனர். ஆனால், அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அட்டூழியங்கள் தொடர்பில் ஒருவரைத்தானும் இவர்களால் கைதுசெய்ய முடியாமல் இருக்கின்றதே? 

“மதகுருவொருவொருவரே இந்த அடாவடித்தனங்களை முன்னின்று செயற்படுத்தி வருகின்றார். இந்த உயர் சபையிலே, அவருடைய பெயரைக் கூற நான் கூற விரும்பவில்லை.  

“பொலிஸ் தலைமையகத்துக்கு வந்து முறைப்பாடொன்றைச் செய்து விட்டு வெளியே வந்து வீர வசனம் பேசிச் சென்ற அவரைக் கைது செய்யாமல் விட்டுவிட்டு, அதற்கடுத்த நாள் குருநாகலையில் “நாங்கள் வருகிறோம், நீங்கள் தயாராகுங்கள்” என முற்கூட்டியே அறிவித்து விட்டு, பொலிஸார் பெரிய நாடகமொன்றை நடத்தியதாகவே எமக்குப் புலப்படுகின்றது.  

“அந்த நாடகத்தின் பின்னர், அந்த தேரரைக் கைதுசெய்யக் கூடாதென்று, அவரைச் சார்ந்தவர்கள், அளுத்கமையில் ஊர்வலம் சென்ற போது, அதற்கும் பொலிஸார் பாதுகாப்பு வழங்கும் நிலையே, இந்த நாட்டில் இன்னும் இருக்கின்றது. அதுமட்டுமன்றி, உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டமென்றெல்லாம் இவர்கள் நடிப்புக் காட்டுகின்றனர்.  

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்தந்த பிரதேசங்களிலுள்ள பொலிஸ் பொறுப்பதிகாரிகள், சட்டத்தை முறையாகக் கையிலெடுத்து, இந்தப் பிரச்சினையைக் கட்டுப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டதாக, அமைச்சர் மனோ கணேசன் இங்கு கூறினார்.  

“அதே போன்று, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்காவின் பேச்சும், எமக்கு நம்பிக்கை தருகின்றது. சட்டமும் ஒழுங்கும் முறையாகக் கடைபிடிக்கப் பட வேண்டுமென பணிப்புரை விடுத்துள்ளார் ஜனாதிபதி.  

“இந்நிலையில், மீண்டுமொரு கலவரத்தைத் தூண்டும் நோக்கில் செயற்படும் இந்த இனவாதத் தேரரை உடன் கைது செய்யுமாறு, நாம் வேண்டுகின்றோம்” என்று தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .