2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கர்நாடக இசைக் கல்லூரியை யாழில் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்: உன்னிகிருஷ்ணன்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


  (எஸ்.கே.பிரசாத்)

யாழ்ப்பாணத்தில் உள்ள மாணவர்கள் மத்தியில் சங்கீதத்தை வளர்ப்பதற்கு பயிற்சி நிலையம் ஒன்று அமைப்பதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டால் பயிற்சி நிலையம் ஒன்றை அமைப்பதற்கு தயாராக இருப்பதாக கர்நாடக சங்கீத வித்துவானும் பிரபல திரைப்பட பின்னணி பாடகருமான பி.உன்னிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

'தென்னிந்தியாவில் என்ன கலாசாரம் பின்பற்றப்டுகின்றதோ அத்தகைய கலாசாரம்தான் இங்கும் பின்பற்றுகின்றார்கள். ஒரு குறிப்பட்ட காலத்தில் இரண்டுக்குமான இடைவெளி அதிகரித்துள்ளது. இதனை மீளவும் புதுப்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இவ்வாறு எடுக்கப்படும் போதுதான் இங்கு இசையையும்; இசை கலைஞர்களின் திறமைகளையும் வளர்க்கமுடியும்.

தமிழ் திரையிசைப் பாடகர்களின் ஹரிகரன் மிகச்சிறந்த பாடகர் எனவும் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு பாரதிராஜா, வசந்த் மற்றும் ஜீவா போன்றவர்கள் அழைத்ததாகவும் அந்த வாய்ப்புக்களை தான் தவிர்த்துக்கொண்டதாக' அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற விசேட சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததார்.

அவர் அளித்த செவியின் முழுவிபரம் பின்வருமாறு:



கேள்வி: தென்னிந்தியாவில் இருந்து வருகை தந்து எமது மாணவர்களையும் கலைஞர்களையும் சந்தித்துள்ளீர்கள். இரண்டு கலைஞர்களின் வேறுபாட்டையும் எவ்வாறு உணர்கீன்றீர்கள்?


பதில்: நேற்று நடைபெற்ற நிகழ்வில் என்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்ள முடிந்தது. சில மாணவர்கள் என்னிடம் கேள்விகேட்டார்கள். கருத்துவேறுபாடுகள் இருப்பதாக தெரியவில்லை. இந்தியாவை  பொறுத்தவரையில் இதிலும் குறிப்பாக தமிழ் நாட்டில் நிறையக் கலைஞர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கென்று ரசிகர்கள் இருக்கின்றார்கள். இந்தியாவில் பல இடங்களில் பல கச்சேரிகளை நடத்தியிருக்கின்றோம். வெளிநாடுகளுக்கும் சென்றிருக்கின்றோம். இதனால் பல அனுபவங்களை நான்  பெற்றிருக்கின்றேன்.

இதேபோல் இலங்கை கலைஞர்களுக்கும் இது நல்லதொரு அனுபவமாக அமையும். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் கலைஞர்களுடன் இணைந்து இங்குள்ள கலைஞர்கள் இசை நிகழ்வுகளை மேடையேற்றும்போது அது வெற்றிகரமான ஒரு நிகழ்வாக அமையும். மற்றுமொருமுறை இலங்கை வரும்போது இங்குள்ள கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்வொன்றை நடத்தலாம் என்ற திட்டம் கூட இருக்கிறது.

கேள்வி: இவ்வாறான கர்நாடக பயிற்சிப் பட்டறைகள் கிராமிய மட்டங்களில் முன்னெடுக்கப்படுமா?

பதில்: நாங்கள் மட்டும் வந்துபோக முடியாது. தென்னிந்தியாவில் நிறைய இசைக் கலைஞர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் எல்லோரும் இங்கு வரவேண்டும் என்றால் இந்திய உயர்ஸ்தானிகர்தான் முடிவெடுக்கவேண்டும். இவ்வாறான நிகழ்வுகள் கிராம மட்டத்தில் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் நிச்சயம் இந்தியக் கலைஞர்கள் பங்குபற்றுவார்கள். இது நிச்சயம் வெற்றிபெறும் என்று நம்புகின்றேன்.



கேள்வி: ஈழத்து கலைஞர்களின் கலை உணர்வை எப்படி பார்க்கின்றீர்கள் ?

பதில்: இங்குள்ள கலைஞர்களின் திறமைகள் மிகச்சிறப்பாக இருக்கின்றன. அவர்களது திறமைகளை நான் கேட்கவில்லை. எனது முன்னிலையில் எவரும் பாடவுமில்லை. ஆனால் அவர்களின் ஆர்வத்தை என்னால் உணர்ந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. இசைத் துறையில் விற்பன்னர்களாக பல கலைஞர்கள் இங்கு இருந்துள்ளார்கள். குறிப்பாக வீரமணி ஐயர், சரஸ்வதி பாக்கியராஜா, சண்முகவடிவேல் போன்றவர்களை  குறிப்பிட்டுக்கொள்ளலாம்.

தென்னிந்தியாவில் என்ன கலாசாரம் பின்பற்றப்டுகின்றதோ அத்தகைய கலாசாரத்தை இங்கும் பின்பற்றுகின்றார்கள். ஒரு குறிப்பட்ட காலத்தில் இரண்டுக்குமான இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனை மீளவும் புதுப்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான் இங்கு இசையையும் வளர்க்கமுடியும். கலைஞர்களின் திறமைகளையும் வளர்க்கமுடியும்.

கேள்வி: சுக அனுபவ நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த உங்களிற்கு யாழ்.மண்ணில் வரவேற்பு எவ்வாறு இருந்தது?

பதில்: மிகவும் சிற்பாக இருந்தது. இந்தளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக இருந்தது. தமிழ் மக்களுக்கு இசை மூலமாக நிறைய செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில் வந்திருக்கின்றேன்.

கேள்வி: உன்னிகிருஷ்ணன் என்ற அடையாளம் கர்நாடக சங்கீதம் மூலம் கிடைத்ததா? அல்லது திரையிசைப் பாடல்கள் மூலம் கிடைத்ததா?

பதில்: உன்னிகிருஷ்ணன் என்னும் அடையாளம் கர்நாடக சங்கீதத்தின் மூலமே கிடைத்தது. அதன் பின்னர்தான் திரையிசை. முதலில் கர்நாடக இசையில் பாடிக்கொண்டிருந்தேன். அதன் பின்னர்தான் சினிமாவில் பாடல் பாடும் வாய்பு ஏற்பட்டது. முதல் பாடல் வெற்றிபெற்றவுடன் பெரியளவில் ஒரு பெயர் கிடைத்தது.

பல லட்சம் மக்கள் கேட்கின்ற பாடல்களாக திரையிசை பாடல்கள் மாறியிருக்கின்றன. இந்த திரையிசையில் பலர் கர்நாடக இசையினைக்கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. திரையிசையில் சிறந்த பாடகராக வரவேண்டும் என்றால் கர்நாடக இசையையும் கற்றுக்கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று பல இளைஞர்கள் கர்நாடக இசையைக் கற்பதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.



கேள்வி: மேலைத்தேய இசையின் ஆதிக்கத்தால் கர்நாடக சங்கீதத்தின் தாக்கம் எவ்வாறு உணரப்படுகின்றது?

பதில்: இரண்டையும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுக் கூறமுடியாது. மேலைத்தேய இசையை பொறுத்தவரையில் உலகம் பூராகவும் பிரசித்திபெற்ற ஒன்றாக மாறிவிட்டது. கர்நாடக சங்கீதத்தை பொறுத்தவரையில் அது தமிழ் ரசிகர்களிடம் மட்டும் ஆதிக்கம் செலுத்துகின்றது. வெளிநாடுகளில் இசை நிகழ்வை நடத்தும் போது கர்நாடக சங்கீதத்தை பாடினால் அவர்களுக்கு
புரியாது. இடத்திற்கு இடம் மொழிகள், சொற்கள் மாறுபட்டன. எனவே அந்தந்த இடத்திற்கேற்ப இதன் ஆதிக்கங்கள் இருந்தே வருகின்றன.

கேள்வி: தமிழ் சினிமாவில் முதல் பாடல் பாடும் வாய்ப்பு எவ்வாறு ஏற்பட்டது?

பதில்: முதற்தடவையாக ராஜிவ் மேனன் என்னை முதலில் ஏ.ஆர் ரஹ்மானிடம் அறிமுகம் செய்து வைத்தார். என்னுடைய ஒலி நாடாவை ராஜிவ் மேனனிடம் கொடுத்திருந்தேன். அதைக்கேட்டுவிட்டு ஏ.ஆர்.ரஹ்மான் பாடுவதற்கான சந்தர்ப்பத்தை கொடுத்தார். எனக்கு சினிமாவில் பாடவேண்டும் என்ற ஆர்வம் கிடையாது. நான் முயற்சிசெய்தேன். முதல் பாட்டு நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று வரைக்கும் 1500 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளளேன்.

கேள்வி: ஆரம்ப காலத்தில் வெளியான பாடல்களுக்கும் தற்போது வெளிவருகின்ற பாடல்களுக்கும் இடையில் கலாசார மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

பதில்: இன்று தமிழ் சினிமாவில் இருக்கின்ற இசையமைப்பாளர்கள் அனைவருமே சங்கீதத்தை முறையாக கற்றுக்கொண்டவர்கள் கிடையாது. சில இசையமைப்பாளர்கள் தற்போது கற்றுக் கொண்டு வருகின்றார்கள். குறிப்பாக இளையராஜா சேர், வித்தியாசாகர், ரஹ்மான் போன்றவர்களைச் சொல்லலாம். ராஜா சேரின் பாடல்களை யாராவது பாடிக்கேட்கும் போது புல்லரிக்கும். அந்தளவிற்கு அந்தப் பாடலில் ஈர்ப்பு இருக்கும்.

தற்போது எல்லோரும் வளர்ந்து வந்துகொண்டிருக்கின்றார்கள். எல்லாமே இப்போது வேகமாக இருக்கின்றது. இதனால் அனைவரும் வேகமாக இயங்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அந்த வேகத்திற்கு ஏற்ப இசையமைப்பாளர்கள் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இணையத்தளங்களில் இருந்து இசையை தரவிறக்கம் செய்து பாடல்களுக்கு இசையமைக்கும் நிலை உருவாகிவிட்டது. இதனால் பாடல்கள் தனித்துவத்தன்மையை இழந்து விடுகின்றன. அதனால் வெளிவருகின்ற பாடல்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவையாக அமைந்து விடுகின்றன.



கேள்வி: உங்களைப் போன்று இருக்கின்ற கலைஞர்களுக்கு நீங்கள் என்ன சொல்லவிரும்புகின்றீர்கள்?

பதில்: இசைக்கு முதலில் பயிற்சி அவசியமானது. கர்நாடக சங்கீதத்தை எடுத்துக்கொண்டால் சங்கீதத்தில் இருக்கின்ற முறைகள், ராகங்கள், கீர்த்தனைகள் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டால் சிறந்த ஒரு  இசைக் கலைஞனாக உருவாக முடியும். இளைஞர்களுக்கு நான் என்ன சொல்ல விரும்புகின்றேன் என்றால் இசையை முறைப்படி கற்றுக் கொள்ள வேண்டும். இது கர்நாடக சங்கீதமாக இருக்கட்டும் மேலைத்தேய இசையாக இருக்கட்டும். அனைத்தையும் முறையாக கற்றுக்கொள்ளவேண்டும். இப்போது இருக்கும் பாடல்களில் அனைத்து இசையும் முக்கிய இடத்தினைப் பெறுகின்றது.

கேள்வி: தென்னிந்தியக் கலைஞர்கள் இலங்கை வருவதற்கு பல எதிர்ப்புக்கள் இருக்கின்றன. இவ்வாறான எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நீங்கள் எவ்வாறு இங்கு வந்தீர்கள்?

பதில்: எதிர்ப்பு எனக்கு ஏற்பட்டது. நான் இலங்கை அரசாங்கத்தின் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக செல்லவில்லை, யாழ்ப்பாணத்தில் உள்ள மாணவர்களிற்கு கர்நாடக சங்கீத பயிற்சி வழங்குவதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் அழைத்துள்ளது என்று கூறினேன். நான் இந்தியா சென்ற பின் தென்னிந்திய கலைஞர்கள் இலங்கை வந்து மக்களுக்கு கலைச் சேவையாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்வேன்.

கேள்வி:- முதல் தடவையாக விருதை பெறும் போது உங்களின் மனநிலை எவ்வாறு இருந்தது?

பதில்: முதற்தடவையாக தமிழ் நாடு அரசினால் கலைமாணி விருது வழங்கப்பட்டது. இதன் பின்னர் தேசிய விருது வழங்கப்பட்டது. தேசிய விருது கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது மிகப்பெரிய மகிழ்ச்சியான சந்தர்ப்பம். இதுவரை 15 விருதுகளுக்கு மேல் பெற்றிருக்கின்றேன்.

கேள்வி: இதுபோன்று இசைப் பயிற்சிகள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றதா? இதில் இங்குள்ள மாணவர்கள் கலந்துகொள்வதற்கு ஏற்பாடு செய்வீர்களா?

பதில்: நடத்தி வருகின்றோம்.  இசைக்கச்சேரி, பாடல் ஒலிப்பதிவு போன்ற வேலைகளுக்கு மத்தியில் பயிற்சியும் வழங்கி வருகின்றோம். தற்போது பல மாணவர்கள் என்னிடம் இசை பயிற்சி பெற்று வருகின்றார்கள். அதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர்களும் இடம்பெறுகின்றார்கள். இங்குள்ள பயிற்சி நிலையத்தைப்போன்று வாய்ப்புகள் கிடைக்கும் பட்சத்தில் இங்குள்ள மாணவர்களுக்கு இங்கு ஒரு கர்நாடக சங்கீத பயிற்சி நிலையம் ஒன்றை அமைப்பதற்கு தயாராக இருக்கின்றேன்.


You May Also Like

  Comments - 0

  • farsan Tuesday, 28 August 2012 05:05 AM

    கிழக்கு மாகாணத்திலும் அதிலும் கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் அதிக இசை பிரியர்ககள் இருக்கின்றனர் அவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .