2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சாதனை கிறிஸ்மஸ் மரத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை

அனுதினன் சுதந்திரநாதன்   / 2017 மே 22 , பி.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கடந்தாண்டு கிறிஸ்மஸ் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டதோ இல்லையோ, கிறிஸ்மஸ் பண்டிகைக்காகத் தயாரிக்கப்பட்ட சாதனைமிகு கிறிஸ்மஸ் மரம், செய்திகளை முழுமையாக ஆக்கிரமித்திருக்கத் தவறவில்லை.  

கிறிஸ்மஸ் மரத்தை உருவாக்கிக் காட்சிபடுத்தவேண்டிய தினத்தில் கிறிஸ்மஸ் மரம் காட்சிபடுத்தப்பட்டிருந்த போதிலும், அது குறித்தகாலப்பகுதியில் அதன் வரைவுகளுக்கு அமைவாக தயாரிக்கபட்டதா, தரமானதா, அதன் செலவீனங்கள் என்ன, வளப்பயன்பாடு எவ்வாறு இருந்தது என்பனவற்றுக்கான விடைகள், இன்றுவரையிலும் தொக்கியே நிற்கின்றன.  

வெளியான செய்திகளின்படி, 2015ஆம் ஆண்டு சீனாவில் உருவாக்கப்பட்ட 56 மீற்றர் உயரமான செயற்கை கிறிஸ்மஸ் மரத்தின் சாதனையை முறியடிக்கும் விதமாக, 100 மீற்றர் உயரம் கொண்ட கிறிஸ்மஸ் மரத்தை உருவாக்குவதே திட்டமாகவிருந்தது. ஆனாலும், இடைநடுவே ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக, சுமார் 73 மீற்றர் உயரமான செயற்கை கிறிஸ்மஸ் மரத்தையே உருவாக்க முடிந்தது.  

அண்மைக்காலத்தில், இலங்கையில் ஆவணங்களில் முன்மொழியப்படும் போது ஒருவிதமாகவும், அது செயலாக்கப்படும் போது வேறுவகை வெளியீட்டை கொண்ட திட்டங்களாகவும் உள்ளமை, வழமையாகிக்கொண்டே வருகிறது. இந்த நிலைமைக்கு, சாதனை கிறிஸ்மஸ் மரமும் தப்பவில்லை. இந்தத் தொடர்ச்சியான சம்பவங்கள், நிறைய விடயங்களை நமக்குக் கற்றுத் தருகின்ற போதிலும், அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, எம்மை திருத்திக் கொண்டிருக்கிறோமா என்பது, சிந்திக்க வேண்டியதாகவே உள்ளது.  

செயற்றிட்ட செயலாக்கலின்போது கற்க வேண்டியவை என்ன?  

செயற்றிட்ட முகாமைத்துவச் செயற்பாடுகளின்போது, எல்லாவற்றையும் சரியாகத் தெரிந்துதான் திட்டமிட்டு கொண்டிருக்கிறோம் என்கிற மனப்பான்மையை, திட்டமிடுபவர்கள் இங்கு கொண்டு இருக்கிறார்கள்.  

திட்டமிடலின்போது, புறக்காரணிகள் எவ்வாறு பாதிப்பினை ஏற்படுத்தும் என்கிற பரந்த எண்ணத்துடன், திட்டமிடலை மேற்கொள்ளத் தவறிவிடுகிறார்கள். குறிப்பாக, திட்டமிடலின்போது, பரந்த பார்வை இருப்பதுடன், அதனது புறத்தாக்கங்களையும் ஆய்வு செய்வது அவசியமாகிறது.  

கிறிஸ்மஸ் மரம் தயாரிக்கும் செயற்றிட்டத்தின்போதும், திட்டத்தை ஆரம்பிக்கும்போதும் புறக்காரணிகளை ஆராய்ந்து, அது தொடர்பிலான அனைத்து காரணிகளிலும் கவனம் செலுத்தியிருப்பின், இறுதியில் எது நடந்தாலும், திட்டமிட்டபடி கிறிஸ்மஸ் தினத்துக்கு முன்னதாக 100 அடி உயரமான மரத்தை, எவ்வித தடைகளுமின்றி முடித்திருக்க முடியும்.  

1. செயற்றிட்ட முகாமைத்துவம் தொடர்பில் போதிய அறிவின்மை  

செயற்றிட்ட முகாமைத்துவம் (Project Manangement) தொடர்பில் கல்வி கற்றோரும், அது தொடர்பில் அறிவினை உடைய பலரும், அதனை செயன்முறைப்படுத்துவதில் தவறிழைக்கிறார்கள். செயற்றிட்ட முகாமைத்துவம் என்பது, தனியே வரைவுகளையும் ஒழுங்குபடுத்தல் ஆவணங்களையும் மட்டுமே உள்ளடக்கியது அல்ல. மாறாக, அவற்றை எவ்வாறு ஒழுங்குபடுத்தி, அவசர நிலைமைகளுக்கேற்ப அதனை மீளமைத்துத் திட்டமிட்டு நடைமுறைபடுத்துவதையும் உள்ளடக்கியதாக உள்ளது.  

குறிப்பாக, உயரமான கிறிஸ்மஸ் மரத்தை அமைக்கும் செயற்றிட்டத்தில், அதனை திட்டமிடும்போதே, இறுதிநாள் வரைக்குமாக வேலைகளை திட்டமிடாதிருந்திருப்பின், இடையிலே ஏற்பட்ட தடங்கல் நிலைமை ஒட்டுமொத்த திட்டத்​ைத பாதித்திருக்காது. இவ்வாறு திட்டமிடாததன் விளைவாக, இறுதிநேர வேலைகள் அதிகரித்து, மேலதிக அழுத்தத்தை வழங்கியதனால்,  உண்மையான திட்டபிரகாரம் கட்டி முடிக்கப்படவேண்டிய கிறிஸ்மஸ் மரத்தின் அளவை, சடுதியாகக் குறைக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதுடன், அலங்காரங்களுக்கும் போதியவகையில் நேரத்தைச் செலவிட முடியாதநிலை ஏற்பட்டு இருக்கிறது.  

அத்துடன், திட்டமிடல் முகாமைத்துவம் என்பது, தனியே திட்டங்களை நடைமுறைபடுத்துவது மட்டுமல்ல. இதற்கு மாறாக, தரம், தகவல் தொடர்பு, அக்கறையுடைய தரப்பினரைக் கையாளுதல், சுற்றுசூழல் நன்மைகள் என்பவற்றையும் திட்டமிட்டு முகாமைத்துவம் செய்யவேண்டும் என்பதை, இந்நிகழ்வு மூலம் எளிதாகப் புரிய வைத்திருக்கும்.  

2. சிக்கலான செயற்றிட்டங்களுக்கு, ஆரம்பம் முதலே முகாமைத்துவத் திட்டமிடலைச் செய்தல்  

சிக்கலான எந்தவொரு செயற்றிட்டத்தின்போதும், எத்தகைய நிகழ்வுகளும் புறக்கணிக்கப்படக் கூடாது. அப்போதுதான், எதிர்காலத்தில் எத்தகைய இடையூறுகள் எத்தகைய புறக்காரணிகளின் விளைவாக ஏற்படக்கூடும் என்பதை அனுமானிக்க முடியும். அத்துடன் சிக்கலான செயற்றிட்டங்களை, நெகிழ்வுத்தன்மை கொண்டதாக தயாரிக்கவேண்டியது அவசியம், இல்லாதுவிடின், இத்தகைய திட்டங்களில் ஏற்படக்கூடிய ஏதேனும் சிக்கல்தன்மை, திட்டத்தை முழுமையாகவே பாதித்துவிடக் கூடும். இதுதான், இம்முறை கிறிஸ்மஸ் உருவாக்கத் திட்டத்தில் நடந்தது.  

கற்கைகளின் அடிப்படையில், பாரம்பரியத் திட்டமிடல் முகாமைத்துவமானது, வெளியீடுகளை விரிவான செயல்முறைகளின் ஊடாக, திட்டமிட்டவகையில் நடைமுறைப்படுத்தி வெற்றி காண்பதையே இலக்காகக் கொண்டது.   

ஆயினும், தற்காலத் திட்டமிடல் முகாமைத்துவமானது, நெகிழ்வுத்தன்மை கொண்டதாக, தகவல் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றமடைவதன் மூலமாக இலக்கை அடைந்துகொள்ளக் கூடியனவாக உள்ளது. அதுபோல, இத்தகைய திட்டங்களின் அடிப்படை வெற்றி, நெகிழ்வுத் தன்மையுடன், நேரம், கிரயம், தரம் , வளம் ஆகிய காரணிகளை உச்சமாகப் பயன்படுத்திக் கொள்வதிலும் தங்கியுள்ளது.  

3. செயற்றிட்டத்தினை நிறுத்த நினைப்பதைத் தவிர்த்து, செயற்றிட்ட ஆபத்தைக் குறைக்க முயல்தல்  

கிறிஸ்மஸ் மர உருவாக்கத் திட்டம் நமக்குக் கற்றுத்தந்த மற்றுமொரு மிகப்பெரிய பாடம், எந்தவொரு திட்டத்தினதும் ஆபத்தை அல்லது விளைவை, முன்கூட்டியே அறிந்திருக்கவேண்டும் என்பதே ஆகும்.  

குறித்த விடயத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளைக் கண்டறிந்து, முன்கூட்டியே அதற்கான தீர்வைப் பெற்று இருப்பின், இலங்கையின் அடையாளமாக திட்டமிட்டபடியே கிறிஸ்மஸ் மரத்தை உருவாக்கியிருக்க முடியும். அப்போது, இவ்வுலகுக்கு எத்தனை தடங்கல் வந்தாலும், திட்டமிட்டபடியே எதனையும் நடாத்தி காட்டுபவர்கள் நாங்கள் என்பதைக் காட்டியிருக்க முடியும். இது, எங்கள் தொடர்பில் கடந்தகாலங்களில் காணப்பட்ட தவறான பிம்பத்தை உடைத்தெறியும் வாய்ப்பாக இருந்திருக்கக் கூடும்.  

4. அனுபவத்தைப் பாடமாக எடுத்துக்கொண்டு முன்னேறிச் செல்லல்  

இந்த செயற்றிட்டத்தின் முடிவானது, தனியே கிறிஸ்மஸ் மரத்தை உருவாக்குதலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிராதவொன்று. மாற்றாக, இனிவரும் காலங்களிலும் அரசாங்கமோ, அமைச்சோ, தான் நடைமுறைப்படுத்தவுள்ள செயற்றிட்டங்களுக்கு, கற்றுக்கொள்ள வேண்டிய அனுபவ பாடத்தை வழங்குகின்ற ஒரு திட்டமாக, இதனை எடுத்துகொள்ளவேண்டியது அவசியமாகும்.  

செயற்றிட்டங்களில் பங்களிக்கப்படுகின்ற உழைப்பும் அவற்றின் வெற்றியும், நிச்சயமாகப் பாராட்டபட வேண்டியவை ஆகும். ஆனால், அவற்றுடன் குறித்த செயற்றிட்டங்களை இன்னும் திறமையாக முன்னெடுத்திருக்க, எதை எல்லாம் செய்திருக்கவேண்டும் என்கிற விடயமும், ஆராயப்படுவது மிக முக்கியமானது ஆகும். இதன்போது, குறித்த செயற்றிட்டத்தில் பங்களிப்புச் செய்திருக்கக்கூடிய அனைத்துத் தரப்பினரது சாதக மற்றும் பாதகக் கருத்துகளைப் பின்னூட்டமாகப் பெற்றுக் கொள்வது அவசியமாகும். அவ்வாறு பெறப்பட்ட பின்னூட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, திட்டத்தின் மேம்பாடு எவ்வாறானதாக அமைந்திருக்கலாம் அல்லது அமைந்திருக்க வேண்டும் என்பதை விவாதிக்க வேண்டும். விவாதிக்கபடுகின்ற கருத்துகள் கூடவே, அடுத்த செயற்றிட்டங்களுக்கு எவ்வாறு ஓர் அனுபவ பாடமாக இருக்கும் என்பதையும் சொல்லித்தர வேண்டும். இல்லையேல், அடுத்தடுத்த செயற்றிட்டங்களின் வெளியீடும், கிறிஸ்மஸ் மரம்போல, நிச்சயிக்கப்பட்ட இலக்குக்கும் எட்டப்பட்ட இலக்குக்கும் நடுவே சிக்கி, சின்னாபின்னமாகி போகக்கூடும்.  

இத்தகைய காரணிகளை அடிப்படையாக கொண்டு, இலங்கையின் செயற்றிட்ட முகாமைத்துவச் செயற்பாடுகள் மேம்படுத்தப்படுமாயின், அதுவே பல்வேறு அரச நிலைகளிலும் வினைத்திறன் தன்மையை மேம்படுத்துவதில், முக்கிய பங்காற்றுமேன்பதில் ஐயமில்லை.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X