2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

திறைசேரி பிணைமுறி விவகாரம்: நடந்தது என்ன? நடப்பது என்ன?

அனுதினன் சுதந்திரநாதன்   / 2017 ஓகஸ்ட் 27 , பி.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நிதி ரீதியான மோசடி, ஊழல் போன்ற சொற்றொடர்கள், அண்மைக்காலத்தில் அதிகம் கேட்கப்படும் சொற்றொடர்களாக மாறியுள்ளன. முன்பு, இலங்கையில் இறுக்கமான நிதி ரீதியான கட்டுப்பாடுகள் காணப்பட்டதன் விளைவாக, அண்டைய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, நிதி ரீதியான மோசடிகள் குறைவாகவே காணப்பட்டன. இதனையும் தாண்டி, சில நிதி மோசடிகள் இடம்பெற்ற வேளையில் எல்லாம், இலங்கையின் மத்திய வங்கி, தீர்க்கமான சட்டங்களையும், விதிமுறைகளையும் கடைப்பிடித்து வந்ததன் விளைவாக, நாம் சிறந்த முன்மாதிரியாக விளங்கியிருக்கிறோம். ஆனால், இம்முறை நிதி மோசடியும் ஊழலுமே, இலங்கை மத்திய வங்கியை மையமாகக் கொண்டு இடம்பெற்று இருப்பது, அனைவரையுமே ஆச்சரியப்படுத்தி இருக்கிறது எனலாம். அதிகாரங்கள், தகாத கைகளில் சிக்கிக்கொள்ளும்போது, எப்பேர்ப்பட்ட நற்பெயருக்கும் களங்கம் வந்தே தீரும் என்பதை இது உணர்த்தி இருக்கிறது.  

அர்ஜுன மகேந்திரன், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த வேளையில், மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட முறிகளின் பரிவர்த்தனையில் மோசடி அல்லது ஊழல் இடம்பெற்று இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் தொடர்ச்சியாக இடம்பெற்ற நிகழ்வுகளின் உச்சக்கட்டமாக, முன்னாள் நிதியமைச்சர் விசாரணைக்காக அழைக்கப்பட்டதுடன், அவர் பதவி விலகவேண்டிய சூழலும் ஏற்பட்டிருந்தது. உண்மையில், ரவி கருணாநாயக்க விசாரணைக்கு அழைக்கப்படும் வரையில், குறித்த விடயத்தை விசாரணை செய்யவென நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் செயற்பாடுகளும், அதன் அறிக்கைகளும் பெருமளவில் சாதாரண மக்களால் கவனிக்கப்படாத விடயங்களாகவே இருந்தன. ஆனாலும், ஆணைக்குழுவின் செயற்பாடுகள், நிதி அமைச்சரை விசாரணைக்கு அழைத்தது முதல் சூடுபிடிக்க தொடங்கியிருப்பதுடன், அடுத்தது இந்த நிதி மோசடியில் சிக்கிக்கொள்ளவிருப்பவர் யார் என்கிற எதிர்பார்ப்பையும் ஏற்றியிருக்கின்றன.  

சர்ச்சைக்குரிய ஊழல் என்ன?

அர்ஜுன மகேந்திரன், இலங்கையின் ஆளுநராக இருந்த 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில், நிதியைத் திரட்டிக்கொள்ளும் முகமாக, 30 வருட முதிர்வு காலத்தைக் கொண்ட அரச முறியை இலங்கை மத்திய வங்கி, விற்பனைக்கு அனுமதித்திருந்தது. இதன்போது, அதற்கான வட்டி 12.5 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், பல்வேறு இடங்களிலும் 9.5 சதவீதமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதன்போது, முதலீட்டாளர்கள் பலரும் அரச முறிகளை வாங்க ஆர்வம் காட்டியிருந்தார்கள். இவர்களில் பெரும்பாலானோர் அரச முறிகளை 9.5 சதவீதம் முதல் 10.5 சதவீதத்தில் பெற விரும்பியிருந்தாலும், அர்ஜுன மகேந்திரன், அவருடன் தொடர்பைக் கொண்ட (அர்ஜுன மகேந்திரனின் மருமகன் அலோசியஸால் வழிநடாத்தப்படும் நிறுவனம்) Perpetual Treasuries Limited உட்பட சில முதலீட்டாளர் மாத்திரம் 11சதவீதம்-12 சதவீமான அளவில் மட்டும் பெற விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்கள்.  

இறுதியில், மத்திய வங்கியானது, 10 பில்லியன் ரூபாய் பெறுமதியான முறியை (அறிவித்ததிலும் பார்க்க, பத்து மடங்கு அதிகமாக) 9.5 சதவீதம் - 12.5 சதவீத அடிப்படையில் விநியோகிப்பதாக அறிவித்திருந்தது. இதன்போது, மகேந்திரன் தொடர்புடைய Perpetual Treasuries Limited நிறுவனத்துக்கு, 5 பில்லியன் ரூபாய் பெறுமதியான முறி, 12.5 சதவீத அதிக வட்டிப் பெறுமதியில் முறிகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இது, குறைவான வட்டி விகிதத்தில் பெற விருப்பம் தெரிவித்த முதலீட்டாளர்களைத் தவிர்த்து விநியோகிக்கபட்டதாக உள்ளது. இதன் விளைவாக, ஒட்டுமொத்தமாக அரசாங்கத்துக்கு சுமார் 1.6 பில்லியன் ரூபாய்க்கும் மேலதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாக, அறிக்கைகளில் குறிப்பிடப்படுகின்றது.  

எனவேதான், குறித்த கொடுக்கல் வாங்கல், மகேந்திரனின் அழுத்தத்தின் பேரில் இடம்பெற்ற ஊழலாகக் கணக்கில் கொள்ளப்பட்டு, ஜனாதிபதியின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டு, இதை விசாரணை செய்யும் பொறுப்பு, விசேட ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டது.  

நிதியமைச்சர் சிக்கிக்கொண்டது எப்படி?

அர்ஜுன மகேந்திரன் மற்றும் அவரது மருமகனான அலோசியஸ் ஆகியோர், தமது முதலீடுகளின் அடிப்படையில் பல்வேறு வணிக நிறுவனங்களை இலங்கையில் கூட்டமைத்து, வணிகத்தை நடாத்தி வரும் தொழில் பிரமுகர்களாக இருக்கிறார்கள். ஜனாதிபதியின் விசேட ஆணைக்குழு விசாரணைகளை கையிலெடுத்துக் கொண்ட பின்பு, அர்ஜுன மகேந்திரன் மற்றும் அவரது மருமகன் ஆகியோர் தொடர்புபட்ட Perpetual Treasuries Limited உட்பட அனைத்து வணிகங்களினதும் கொடுக்கல் - வாங்கல்கள் மற்றும் பரிவர்த்தனை அடிப்படையில், தமது விசாரணைகளை ஆரம்பித்திருந்தார்கள். இதன்போது, அலோசியஸ் நிறுவனத் தலைவராக உள்ள Walt and Row நிறுவனத்தின் ஊடாக, முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் வசிப்பிடத்துக்கு வாடகை வழங்கப்பட்டு வந்தமை கண்டறியப்பட்டது. இதனை உறுதி செய்துகொள்ள, குறித்த வீட்டின் முன்னாள் உரிமையாளரான (குறித்த வீடு ரவி கருணாநாயக்க குடும்பத்தால் தற்போது கொள்வனவு செய்யப்பட்டு விட்டது) அனிக்கா விஜயசூரியவிடம் விசாரணை ஆரம்பிக்கபட்ட பின்னரே, நிதியமைச்சர் இந்த வழக்கில் உள்வாங்கப்பட்டார். காரணம், அனிக்காவை விசாரணைக்கு அழைத்த வேளையில், அலோசியஸ், அனிக்காவை தொடர்புகொண்டு குறித்த வீட்டுக்கான மேற்கொள்ளப்பட்ட வாடகை ஒப்பந்தத்தை அழித்துவிடுமாறு கோரிக்கை விடுத்ததையும் ஆணைக்குழு முன்பாக அவரே தெரிவித்திருந்தார். இதன் விளைவாகவே, நிதியமைச்சர் குறித்த வழக்கில் உள்வாங்கப்பட்டார்.  

வாடகை வீடு முதல் சொந்த வீடாகியது வரை

அனிக்கா விஜயசூரியவின் கூற்றுப்படி, அவரது ஆடம்பர வீடானது, அலோசியஸினால் ரவி கருணாநாயக்கவின் குடும்பத்துக்கு 6 மாத காலத்துக்கு வாடகைக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கால அனுபவங்களின் பிரகாரம், அனிக்கா நேரடியாக எந்த அரசியல் பிரமுகருக்கும் தனது வீட்டை வாடகைக்கு வழங்க விரும்பான்மை காரணமாக, அலோசியஸ், அனிக்காவுடன் பேரம் பேசி, குறித்த வீட்டை ஆறுமாத காலங்களுக்கு 11.6 மில்லியன் ரூபாய் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் செய்துள்ளார். இதன்போதே, வீட்டை தனது நிறுவனத்தின் பெயரில் வாடகைக்கு எடுக்கின்றபோதும், குறித்த வீட்டில் அமைச்சரும் அவரது குடும்பமுமே வசிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.  

இதன்பின், அனிக்காவுடன் நேரடியாக தொடர்புகொண்ட ரவி கருணாநாயக்கவின் பாரியார், குறித்த வீட்டைப் பார்வையிட்டு ஒப்பந்தத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். எனினும், குறித்த ஒப்பந்தத்துக்கு அலோசியஸ் சார்பாக பரிந்துரைக்கப்பட்ட நிறுவனத்தில் அவர் பணிப்பாளராக இன்மையால், அமைச்சரின் பாரியார், ஆரம்பத்தில் தனது எதிர்ப்பை வெளியிட்டு இருந்தார். பின்பு அலோசியஸ், தான் உரிமையாளராகவுள்ள Walter & Rowe நிறுவனம் மூலமாக ஒப்பந்தம் போடப்பட்டு, அமைச்சரின் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது. இதன்போது, அனிக்காவுக்கு 1.45 மில்லியன் ரூபாய் பணமாகவும், 10.2 மில்லியன் ரூபாய் காசோலையாகவும் வழங்கப்பட்டது.  

இந்த ஒப்பந்தத்துக்கான பணம் Walter & Rowe நிறுவனத்துக்கு Perpetual Treasuries நிறுவனத்திலிருந்தே பரிமாற்றம் செய்யப்பட்டது என்பது, கொடுக்கல் -வாங்கல்களின் அடிப்படையில் கண்டறியப்பட்டது. இதுவே, தற்போதைய பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது. காரணம், குறித்த பணம், முறி மோசடி மூலம் ஈட்டப்பட்ட இலாபமாக இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.  

குறித்த வீட்டில் ஒப்பந்த அடிப்படையில் 6 மாத காலம் அமைச்சரும், அவரது குடும்பமும் வசித்தப் பின்னர், மேலும் இரண்டு மாதகால நீடிப்புடன் குறித்த வீட்டைக் கொள்வனவு செய்ய விருப்பம் தெரிவித்ததாக, அனிக்கா ஆணைக்குழுவிடம் தெரிவித்து உள்ளார். மேலும், குறித்த வீட்டுக்காக தான் கோரிய 165 மில்லியன் ரூபாயை ரவி கருணாநாயக்கவின் பாரியார் வழங்க சம்மதித்ததன் அடிப்படையில், குறித்த வீடு விற்பனை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  

குறித்த விற்பனையும் கருணாநாயக்கவின் குடும்ப உறுப்பினர்களின் உரித்தாகவுள்ள Global Transport and Logistics நிறுவனத்தின் பெயரில்தான் இடம்பெற்று இருந்தமை குறிப்பிடதக்கதாகும்.  

நம் முன்னால் தொக்கி நிற்கும் கேள்விகள்

ரவி கருணாநாயக்க, ஆணைக்குழுவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபோது, எந்தவொரு கேள்விக்குமே சரியான பதிலை அளிக்கவில்லை. பெரும்பாலான கேள்விகளுக்கு, தனது குடும்பமே கொடுக்கல், வாங்கல் செயற்பாடுகளில் ஈடுபட்டதால், தனக்கு அது தொடர்பில் தெரிந்திருக்கவில்லை என தெரிவித்தும் இருந்தார்.  

ஒரு நாட்டின் மிக முக்கியமான நிதியமைச்சர் பொறுப்பில் இருந்த ஒருவர், சுமார் 6 மாத காலம் வாடகை எதுவுமே செலுத்தாமல் இலவசமாக ஒரு வீட்டில் குடியிருந்தமை தொடர்பில் தனது பாரியார் மற்றும் குடும்பத்தினரிடம் எந்தவொரு கேள்வியும் கேட்காமல் அல்லது அறிந்துகொள்ளாமல் இருந்தமை ஆச்சரியத்துக்குரியது.  

அப்படியாயின், அவரால் நடாத்தப்பட்ட நிதி நிர்வாகச் செயற்பாடுகளும் எப்படி திறம்பட நடந்திருக்க முடியும் என, சந்தேகம் சாதாரணமாகவே வரசெய்கிறது.  

குறிப்பாக, வழக்கு விசாரணையில் வீட்டை வாடகைக்கு எடுத்தமை தொடர்பிலும், வீட்டைக் கொள்வனவு செய்வதற்காக ரவி கருணாநாயக்கவின் பாரியாரால் Global Transport and Logistics நிறுவனத்தால் பணம் வழங்கப்பட்டது தொடர்பிலும் கூட, தனக்குத் தெரியாது என குறிப்பிட்டிருந்தார். பரிமாற்றப்பட்ட பணங்கள் மில்லியனில் உள்ளபோது, வீட்டில் உள்ள ஒருவருக்கு தெரியாமலே இவையெல்லாம் நடந்திருப்பது விசித்திரமாக உள்ளது.  

அதுபோல, Perpetual Treasuries Limited, Perpetual Capital Holdings and Walt and Row ஆகியன ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாக உள்ளதுடன், Perpetual Treasuries Limited 2015இன் ஆரம்பத்திலேயே ஊழல் மோசடி விடயங்களில் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ள நிலையிலும், குறித்த நிறுவனத்துடன் தனது குடும்பம் கொண்டிருந்த உறவுகள் தொடர்பில், குறித்த காலத்தில் நிதியமைச்சராக இருந்த ஒருவர் அறிந்திருக்கவில்லை என்பது வேடிக்கையானதே.  

இவ்வாறு விடை தெரியாத நிறையவே கேள்விகள், நம்முன்னே தொக்கி நிற்கின்றன. அதுமட்டுமல்லாது, ஒரு நாட்டின் நிதியை நேர்த்தியாக கையாள வேண்டியவர்களே, மோசடி வழக்கில் சந்தேகநபர்களாக உள்வாங்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் தங்களைக் குற்றமற்றவர்கள் என நிருபிக்க முடியும். ஆனால், நிதித்துறை மீது தற்போது ஏற்பட்டுள்ள கறையை எப்படி போக்கிக்கொள்ள முடியும்? இது, நமது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீதும், முதலீடுகள் மீதும் பாரிய சரிவை அல்லது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக்கூட உணராத முறைமையைத்தான் நாம் கொண்டிருக்கிறோம் என்கிற கேள்வியும், கூடவே சேர்ந்து எழுகிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X