2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பங்குச் சந்தையில் முதன்முறையாக எவ்வளவு முதலீடு செய்யலாம்?

Editorial   / 2018 மே 13 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்குச் சந்தை வர்த்தகம் என்பது, மிகவும் புத்திச்சாதூர்யமாக மேற்கொள்ளப்பட வேண்டிய வர்த்தகாகும். இதில், புதிதாக ஈடுபடும் நபர்கள், ஆர்வம் காரணமாக, பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

தங்களுடைய மொத்தப் பணத்தையும் சந்தையில் முதலீடு செய்துவிடுவது தான், புதிதாகப் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் செய்யும் மிகப்பெரிய தவறாகும். அது மட்டுமல்லாது, சிலர் கடன் வாங்கிப் பங்குகளில் முதலீடு செய்கின்றனர். இது, மிகப்பெரிய தவறாகும்.   

இவ்வாறு, கட்டுப்பாடில்லாமல் பங்குகளில் முதலீடு செய்வது, புதைகுழியில் இறங்குவதற்குச் சமமாகும். எனவே, புதிதாகப் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள், சந்தையில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டுமென்றக் கேள்விக்குரிய விடையைக் கண்டறிவதன் ஊடாக, ஒவ்வொரு வர்த்தகரையும் ஆபத்திலிருந்துப் பாதுகாக்கலாம். இதைப்பற்றித் தெரிந்துகொள்ள, இந்தக் கட்டுரையைத் தொடந்து வாசியுங்கள்.

பல நிதி வல்லுநர்கள், பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வதற்குத் தேவையானத் தொகைப் பற்றிய பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். எனினும், இதற்குரிய விடையை, பொதுவான கருத்தின் மூலம் விவாதிக்கலாம்.

பங்குச் சந்தை முதலீட்டுக்கு, எவ்வாறு  நிதி ஒதுக்குவது?

உங்களுக்கு ஏதேனும் பொருளாதாரக் கஷ்டம் ஏற்படுமெனின், அதிலிருந்து மீள, குறைந்தது மூன்று முதல் ஆறு மாதகாலம் தேவைப்படும். எனவே, அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்ய உதவும் நிதியை, 3 முதல் 6 மாத காலத்துக்கு எழுதி, குறிப்பில்  வைத்திருக்க வேண்டும். அந்த நிதியை, உங்களுடைய சேமிப்பிலிருந்து கழித்துவிட்டு, மீதித் தொகையை, பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம்.

அவசரகால நிதியை, பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாமா?

ஒரு பொருளாதாரப் பேரழிவு ஏற்பட்டால், உங்களுக்கு அந்த நிலையைச் சமாளிக்க, அவசரகால நிதித் தேவைப்படும். எனவே, நீங்கள் அந்த நிதியை எப்பொழுதும் எடுக்கக்கூடிய Liquid Fund, அதாவது, வங்கிச் சேமிப்பு போன்ற கணக்குகளில் வைத்திருக்க வேண்டும். இந்த அவசரகால நிதியை, எந்தவொரு சூழ்நிலையிலும், பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யக்கூடாது. இந்த அவசரகால நிதி, ஆபத்துகள் குறைந்தத் துறைகளில் முதலீடு செய்யப்பட வேண்டும்.

அதிக முதலீடு செய்யவேண்டுமா?

பங்கு வர்த்தகத்தில் வெற்றிபெற, உங்களுக்கு அதிக முதலீடு தேவையில்லை. இருப்பினும், ஒரு சிறிய முதலீட்டால், பங்குச் சந்தையில், ஒரு நிலையான தொடக்கத்தைத் தர இயலாது.

தரகுக் கட்டணங்கள் 

ஒரு கௌரவமான தொடக்கத்துக்கு, குறைந்த கட்டணத்தை வசூலிக்கும் தரகுக் கணக்குகளைத் தொடங்க வேண்டியது, மிக முக்கியமானதாகும். இது, வழக்கமாக மிகவும் குறைந்தளவாக அல்லது ஒரு குறிப்பிட்ட அளவாகவே இருக்கும். ஏனெனில், தரகு நியமனம், குறைந்தளவுக் கட்டணத்தில் வசூலித்து, வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க முயற்சிக்கும். அப்பொழுது தான், அவர்களுக்குத் தரகுக் கட்டணங்கள் கிடைக்கும். ஒருசில முதலீட்டாளர்கள், இந்தத் தரகுக் கட்டணங்களுக்குப் பயந்து, அடிக்கடி வர்த்தகத்தில் ஈடுபடுவதில்லை. இது, சில சமயங்களில் எங்களுடைய முதலீட்டைக் காப்பாற்ற உதவியாக அமைந்துவிடுகினறது.

இரட்டைப் பிறவிகள்

ஆபத்து மற்றும் வருவாய் ஆகிய இரண்டும், ஒட்டிப்பிறந்த இரட்டைப் பிறவிகளாகும். ஆபத்து இல்லாவிட்டால், வருவாய் கிடைக்காது. அதிக வருவாயைப் பெற, நீங்கள் ஆபத்து மிகுந்த வர்த்தகத்தில் அடிக்கடி ஈடுபட வேண்டும். 

பல்வகைத்துறைப் பங்குகள்

உங்களுடைய இலாகாவில், பல்வகைத் துறைகளின் பங்குகள் இருப்பதும் மேலும் அதிக இலாபம் தரக்கூடிய முதல் ஐம்பது நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதும், ஆபத்துகளைக் கணிசமாகக் குறைக்கும். மேலும், பங்குத்துறை வல்லுநர்கள், கடந்த காலச் செயற்பாடுகளின்படி, அதிக மற்றும் உயர் வருவாய் தரக்கூடிய பங்குகளை, இந்த முதல் ஐம்பது நிறுவனப் பங்குகளிலிருந்து எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம். எனவே, இந்நிறுவனப் பங்குகள், அதிக முதலீட்டாளர்களால் விரும்பப்படுகின்றன. 

உங்களுடைய போர்ட் போலியோவில், பல்வகைத்துறை மற்றும் நிறுவனப் பங்குகள் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். இவ்வாறு செய்வது, உங்களுடைய முதலீடுகள் மீதான ஆபத்துகளை, கணிசமானளவு குறைத்துக்கொள்ள முடியும்.

நீங்கள் பங்குச் சந்தைக்குப் புதியவராக இருந்து, அதிலும் குறிப்பாக பங்குச் சந்தை பற்றிக் கற்றுக்கொண்டிருந்தால், சிறிய அளவிலான முதலீடுகளை மட்டுமே மேற்கொள்ளுங்கள். இது, முதலீட்டு அபாயங்களை, கணிசமானளவு குறைக்கும். உங்களால் முடிந்த அளவுக்கு முதலீடு செய்வதன் மூலம், பங்குச் சந்தையைப்பற்றிக் கற்றுக்கொள்ளுங்கள்.

எனவே, சிறிய தொகை உங்களுடைய முதலீட்டுக்கு ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும். பங்குச் சந்தையில், அதிகளவான வருவாயைப் பெற, உங்களுடைய ஒவ்வொரு முதலீடுகளிலிருந்தும் கற்றுக்கொண்டே இருங்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்போது, உங்களுடைய கற்றல், வாழ்நாள் முழுவதும் தொடரவேண்டும்.

நன்றி - இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X