2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மூலதனச்சந்தையும் முதலீடுகளும்: முதலீட்டின் போது முதலீட்டாளர் விடும் தவறுகள்

Editorial   / 2018 மார்ச் 28 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்குச்சந்தையில் முதலீடு செய்வதனூடாக பாரிய இலாபத்தை திரட்டிக்கொள்ளக்கூடியதாக இருப்பினும், அது சவால்களைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. பங்குச்சந்தையில் காணப்படும் சவால்களைத் திறமையாக முதலீடு செய்வதனூடாக, முதலீடுகளை நட்ட அச்சம் குறைந்தவையாகவும் வினைத்திறன் வாய்ந்தவையாகவும் மாற்றிக்கொள்ள முடியும்.  

இங்கு முதலீட்டாளர்கள், முதலீட்டின்போது விடும் தவறுகளைப் பார்க்கலாம்.  

1. இலாபத்தை உழைக்க அவசரப்படுதல் (To Be in a Hurry to Take Profit)   

பெரும்பாலான முதலீட்டாளர்கள் முதலீடு செய்த அடுத்த கணமே, இலாபத்தை உழைக்க எதிர்பார்க்கிறார்கள். இதற்காக பணம் உழைக்கக்கூடிய பங்குகளை அவசரமாக விற்று விட்டு, நட்டம் உழைக்கக்கூடிய பங்குகளை விலை அதிகரிக்கும் என்று இருப்பாக வைத்திருக்கிறார்கள்.  

இதன்மூலம் நட்ட அச்சம் அதிகரிக்கவே அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன.இதைத் தவிர்க்க முதலீட்டாளர்கள் பின்வருவனவற்றை விளங்கிக்கொள்ள வேண்டும்.  

- உடனடியாக இலாபத்தை எதிர்பார்ப்பது குறுங்கால பங்கு வர்க்கத்துக்கே உகந்ததாகும்.  

- நட்டம் உழைக்கக்கூடிய அல்லது விலை குறைவடைந்து செல்லும் பங்குகளை விற்றுவிட்டு, இலாபம் உழைக்கக்கூடிய பங்குகளை இருப்பாக வைத்திருத்தல் சிறந்ததாகும்.  

- இலாபம் உழைக்கும் தந்திரோபாயத்தை மாத்திரம் கவனத்தில் கொள்ளாது, நட்ட அச்சத்தைக் குறைக்கும் தந்திரோபாயத்தையும் உபயோகித்தல்.  

2. நட்டத்தை ஏற்றுக்கொள்ள தயாரில்லாமை (Not Prepared To Take Losses)   

- பொதுவாக முதலீட்டாளர்கள் நட்டத்தை ஏற்றுக்கொள்ளத் தயங்குவார்கள். இது மிகப்பெரிய தவறொன்றாகக் காணப்படுகின்றது. இவ்வகையான மனப்பாங்குடைய முதலீட்டாளர்கள், இலங்கை போன்ற வளர்ச்சி அடைந்து வரும் மூலதன சந்தைகளில் மட்டுமல்ல, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ச்சி அடைந்த மூலதன சந்தைகளிலும் காணப்படுகின்றனர்.  

- முதலீட்டாளர்கள் இலாபம் உழைக்கும் போது, உணர்கின்ற மகிழ்ச்சியை விட, நட்டம் அடையும் போது அனுபவிக்கும் அதிருப்தியானது அதிகமாகக் காணப்படுகின்றது.  இவ்வாறு, முதலீட்டாளர்கள் நட்டத்தை ஏற்றுக்கொள்ளத் தயங்குவதால் விலை குறைவடைந்து செல்லும் பங்குகளை விற்காமல், தங்களுடனே வைத்திருக்கின்றார்கள். இதன் மூலம், நட்ட அச்சத்தை நாளுக்கு நாள் தங்களுடனே வைத்திருக்கின்றார்கள். 

ஆகவே, நட்டம் உழைக்கக்கூடிய பங்குகளை அல்லது விலை குறைவடைந்து செல்லும் பங்குகளை, நட்டத்தை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லாமையால் தங்களுடனே வைத்திருப்பதானது, எதிர்காலத்தில் நட்டத்தை அதிகரிக்கவே வாய்ப்பளிக்கும்.  

எனவே முதலீட்டாளர்கள் பங்கு வர்த்தகத்தில் இலாபத்தை எதிர்பார்ப்பது போல், நட்டத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால், பங்கு வர்த்தகமானது ஒரு வியாபாரமாகும்.

3. முதலீட்டின்போது பொறுமை இல்லாது காணப்படல்  

முதலீட்டின் போது பொறுமை இல்லாது காணப்படுதலானது மிகப்பிரதானமான தவறொன்றாக எல்லா வகையான வர்த்தகத்திலும் காணப்படுகின்றது. அவ்வாறே இது பங்கு வர்த்தகத்திலும் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது.இந்நிலைமையானது பெரும்பாலும் குறுங்கால வர்த்தகத்திலே காணப்படுகின்றது. 

பெரும்பாலான குறுங்கால வர்த்தகர்கள், ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்துக்குள்ளோ பாரிய இலாபத்தை எதிர்பார்க்கின்றனர்.  

இவ்வாறு ஏற்படும் தேவையற்ற நட்டத்தை, பின்வரும் நடவடிக்கைகள் மூலம் குறைத்துக்கொள்ளலாம்.  
- சரியான தகவல்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.  

பங்குகளில் முதலீடுகள் செய்யும் போது, முதலீடு செய்யும் நிறுவனம் மற்றும் சந்தை நிலைவரங்கள் தொடர்பான முழுத்தகவல்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

பின்வரும் மூலங்களில் இருந்து தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். 

கொழும்பு பங்குச்சந்தையினால் வெளியிடப்படும் சஞ்சிகைகள் ஊடாக அல்லது அதன் இணையத்தளத்தின் ஊடாக, 

கொழும்பு பங்குச்சந்தையின் கிளைகள் ஊடாக,  

பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் ஊடாக, 

இடைக்கால மற்றும் ஆண்டறிக்கைகள் ஊடாக,  

பங்குத்தரகர்கள் ஊடாக,  

தொழில்சார் முதலீட்டு ஆலோசகர்கள் ஊடாக, பங்குத்தரகர்களிடம் இருந்து முதலீட்டு ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 

இரண்டாம் தரச்சந்தையில் முதலீடுகளை மேற்கொள்ளும் போது, கட்டாயம் பங்குத்தரகர்களிடம் இருந்து அல்லது முதலீட்டு ஆலோசகர்களிடம் இருந்து முதலீட்டு ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.   
பங்குத்தரகர்கள், முதலீட்டு ஆலோசகர்கள் தனிப்பட்ட ரீதியில் ஆய்வுகளை மேற்கொள்வதோடு, நிறுவனங்களின் ஆண்டறிக்கைகளையும் திறமையாக ஆய்வு செய்து, முழுமையான தகவல்களை வழங்குவார்கள்.

4. முதலீடு சம்பந்தமான இறுதி முடிவை, முதலீட்டாளர்களே எடுக்க வேண்டும்  

பங்குத்தரகர்களோ, முதலீட்டு ஆலோசகர்களோ முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவதோடு, பங்குக் கொள்வனவு மற்றும் விற்பனைகளில் மட்டுமே ஈடுபடுவார்கள். அவர்கள் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் இலாப நட்டத்தில் பங்கெடுக்க மாட்டார்கள்.  

ஆகவே, முதலீட்டாளர்களே தங்களது முதலீடு சம்பந்தமான இறுதி முடிவை எடுக்க வேண்டும். 

5. முதலீடு செய்துள்ள பங்குகள் தொடர்பான தகவல்களைப் பெறல்  

பங்குகளின் விலை மாற்றத்தில், பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்தலாம். மேலும், நாளுக்கு நாள் அவற்றின் விலை மாற்றமடையலாம். ஆகவே, முதலீட்டாளர்கள் தொடர்ந்து சந்தை நிலைவரங்களை அறிந்து கொள்ள வேண்டும். 

6. கிடைக்கின்ற இலாப நட்டத்தில் திருப்தி கொள்ள வேண்டும்  

பங்குச்சந்தையில் முதலீடானது ஒரு வர்த்தகமாகும். இங்கு இலாப நட்டம் இரண்டும் காணப்படும். பங்குச்சந்தையானது வட்டி உழைக்கும் ஒரு தளம் அல்ல என்பதை முதலீட்டாளர்கள் விளங்கிக் கொள்ளவேண்டும்.  

ஆகவே, கிடைக்கின்ற இலாப நட்டத்தில் முதலீட்டாளர்கள் திருப்தி கொள்ளவேண்டும்.

-மன்சூர் அஹமட் இம்ரான் 
(இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு)   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .