2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தொழில்சார் கற்கைநெறிகளை வழங்கும் CCDS கல்வியகம்

A.P.Mathan   / 2013 ஜனவரி 03 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


கல்வியகத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.திலகேந்திரன் தமிழ்மிரருக்கு வழங்கிய விசேட செவ்வி


நிர்மாணத்துறை என்பது இலங்கையை பொறுத்தமட்டில் துரிதமாக முன்னேற்றமடைந்து வரும் ஒரு துறையாக விளங்குகிறது. விசேடமாக நகர அபிவிருத்தி நடவடிக்கைகள், யுத்தத்தின் பின்னரான நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நடைபெறும் நிர்மாண அபிவிருத்தி நடவடிக்கைகள் போன்றவற்றின் காரணமாக இலங்கையில் தற்போது முன்னணியில் திகழும் ஒரு துறையாக நிர்மாணத்துறை காணப்படுகிறது. மேலும் இந்த துறையில் நிலவும் கேள்விகளுக்கு அமைய வேலைவாய்ப்புகளும் எழுந்த வண்ணமுள்ளன. அத்துடன் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியிலும் நிர்மாணத்துறை குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை ஆண்டு தோறும் வழங்கி வருகிறது.

அதேபோன்று, உலகமயமாக்கலுக்கு அமைய தகவல் தொழில்நுட்பத்துறையானது பல துறைகளிலும் ஊடுருவியுள்ளதுடன், நவீனமயமாக்கலில் இன்றியமையாத தேவையாகவும் செல்வாக்கை செலுத்தி வருகிறது. இலங்கையிலும் தகவல் தொழில்நுட்பத்துறையில்  யுத்தத்துக்கு பின்னரான சூழ்நிலையில் நாட்டில் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு முதலீடுகளின் காரணமாக தகவல் தொழில்நுட்பத்துறையில் சிறந்த பல தொழில்வாய்ப்புகள் எழுந்த வண்ணமுள்ளன.

அத்துடன், எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் சிறந்த ஒரு நிர்வாகியாக தமது ஆளுமையை கொண்டிருந்தால் தான், அந்த துறையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த நோக்கங்களை, அடிப்படையான முறையில் ஈடு செய்யும் வகையில் தொழில்சார் அறிவை முற்றாக வழங்குவதற்காக கொழும்பு வெள்ளவத்தையில் CCDS எனும் கல்வியகம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு தனது கற்கைநெறிகளை வழங்கி வருகிறது.

நிர்மாணத்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவம் போன்ற துறைகளில் மாணவர்களுக்கு அடிப்படை அறிவை வழங்குவதுடன், முற்றிலும் தொழில்சார் அனுபவத்தை வழங்கிடும் வகையில் CCDSஇன் கற்கைநெறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


இந்த CCDSஇன் முகாமைத்துவ பணிப்பாளராக கருமமாற்றும் எஸ்.திலகேந்திரன், இங்கிலாந்தின் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் தனது MBA பட்டத்தை Specialization in project management துறையில் பெற்றுள்ளார். அத்துடன், மொரட்டுவ பல்கலைக்கழகத்தில், BSc Hons. in Quantity Surveying பட்டத்தையும் பெற்றுள்ளார். மேலும் Advanced Diploma in Construction Technology மற்றும் FCHR போன்ற தகைமைகளையும் கொண்டுள்ளார். தொழில்சார் ரீதியில், இலங்கையிலும், வெளிநாட்டிலும் சுமார் 5 வருடங்களுக்கு மேலாக கருமமாற்றிய முன்அனுபவத்தை கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடன் தமிழ்மிரர் வணிகப்பகுதி மேற்கொண்ட நேர்காணலின் போது அவர் கருத்து தெரிவிக்கையில்,

'எமது நோக்கம் மாணவர்களுக்கு நிர்மாணத்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவம் போன்ற மூன்று துறைகளிலும் அடிப்படை கல்வியை தொழில்சார் அனுபவ ரீதியில் வழங்குவதாகும். இதனை பிரதான கருப்பொருளாக கொண்டு இந்த கல்வியகத்தை நாம் நிறுவியுள்ளோம். இந்த துறைகளில் கற்கை நெறிகளை வழங்க இலங்கையில் பல கல்வியகங்கள் காணப்பட்ட போதிலும், எமது சிறப்பம்சம் யாதெனில், எம்மிடம் கற்கை நெறிகளை திறமையாகவும் முழுமையாகவும் தொடர்ந்து, பூர்த்தி செய்யும் மாணவர்கள் எதிர்காலத்தில் அதே துறையில் தொழில்வாய்ப்பொன்றை பெற்றும் செல்கையில், தொழிலில் முன் அனுபவமின்றிய நிலையில் கூட, எழும் சவால்களை எதிர்கொள்ளக்கூடியவர்களாக திகழும் ஆற்றலை பெற்றுக்கொள்வர். அந்தளவு ஆளுமை மிக்கவர்களாக அவர்களை தயார்படுத்தும் வகையில் எமது கற்கை நெறிகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன'.


'CCDSஐ பொறுத்தமட்டில் நாம் பல்கலைக்கழக மாணவர்கள், வேறு கல்விசார் நடவடிக்கைகளை மேற்கொள்வோர், தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்து கற்கைகளை மேற்கொள்வோர், பாடசாலை மாணவர்கள் என பல தரப்பட்டவர்களுக்கு தொழில்சார் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் அவர்கள் தமது புத்தகசார் கற்கைநெறியை பூர்த்தி செய்யும்போது, எமது கற்கை நெறியானது, அவர்களுக்கு மேலும் தொழில் ரீதியான அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கும்'.

'உதாரணமாக, பொறியியல் துறையில் கல்வி பயிலும் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு எதிர்காலத்தில் அவரின் தொழிலுக்கு அவசியமான அடிப்படை Computer Aided design & planning applications கற்கைகளை நாம் வடிவமைத்து வழங்கி வருகிறோம். இதை இவர் பின்தொடர்ந்து பூர்த்தி செய்வதன் மூலம், எதிர்காலத்தில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்ளும் பட்சத்தில், தொழிலுக்கு தேவையான அடிப்படை கணினி சார் அறிவு இவருக்கு காணப்படும். இது ஒரு மேலதிக தகைமையாக கூட கருதப்படும்'.

'எமது கல்வியகம் தகைமைசார் சான்றுகளை மட்டும் வழங்கும் ஒரு நிலையமல்ல. அந்த நோக்கத்திற்காக வருவோருக்கு நாம் கற்கைகளை வழங்குவதுமில்லை. உண்மையாக தொழில்சார் நிபுணத்துவ அறிவை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் CCDSஇல் இணைவோருக்கு நாம் முக்கியத்துவம் வழங்கி, அவர்களுக்கான கற்கைகளை தொழில்துறை அனுபவமிக்க விரிவுரையாளர்களை கொண்டு முன்னெடுத்து வருகிறோம். எமது விரிவுரையாளர்கள் தாம் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் துறையில் பலவருடங்களாக முழுநேரமாக பணியாற்றுபவர்களாக திகழ்கின்றனர். இதன் காரணமாக, அவர்களிடம் கற்கைகளில் எழும் சந்தேகங்களுக்கான தீர்வுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளக்கூடியதாகவிருக்கும்'.

'மேலும், CCDSஇல் கற்கைநெறியை முறையாக பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு அவர்கள் கல்வியை தொடர்ந்த துறையில் தொழில்வாய்ப்பொன்றை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில், நேர்முகத் தேர்வுகளில் பங்குபற்றுவதற்கான ஒழுங்குகளையும், சிபாரிசுகளையும் நாம் மேற்கொண்டு வருகிறோம். அந்த நேர்முகத் தேர்வுகளில் அவர்கள் தமது ஆளுமையையும், திறமைகளையும் முறையாக வெளிக்காட்டும் பட்சத்தில், தமக்கென ஒரு தொழிலை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பும் கிட்டுகிறது. எமது கற்கைகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் கற்கை நெறிக்கான கட்டணங்கள் அமைந்துள்ளதுடன், CCDSஇல் கல்வியை தொடர்ந்த மாணவர்களுக்கு எதிர்காலத்தில் பிரிதொரு கற்கையை தொடரவோ, அல்லது தாம் தொடர்ந்த கற்கையில் மெருகேற்றிக்கொள்ளவோ முன்னுரிமை அடிப்படையில் சலுகைகளையும் பெற்றுக்கொள்வர்'.

'எதிர்காலத்தில் நாம் மாணவர்களுக்கு ஒரு நேர்முகத்தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது, தொழிலில் எவ்வாறு சிறப்பாக கருமமாற்றுவது, தமது ஆளுமையை எவ்வாறு விருத்தி செய்துகொள்வது தொடர்பிலான கற்கைகளையும் வழங்கவுள்ளோம். அத்துடன், NCT. NDT. NDES போன்ற தொழில்நுட்ப கற்கைகளை தொடர்ந்து வரும் மாணவர்களுக்கென விசேட கருத்தரங்குகளை மேற்கொள்ளவும் நாம் தீர்மானித்துள்ளோம்' என்றார்.

Software development, Web development மற்றும் Mobile application development போன்ற உயர் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கற்கை நெறிகள் மற்றும் Auto cad, Advanced Excel spread sheet applications போன்ற நிர்மாணத்துறையுடன் தொடர்புடைய கற்கைநெறிகளும் இந்த CCDS கல்வியகத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

(சந்திப்பு: ச.சேகர்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .