2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

லயன் அறை இல்லாத ஒரு பெருந்தோட்டம்

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 07 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்


இன்றைய காலகட்டத்தில் பெருந்தோட்டங்களில் பணியாற்றும் மக்களின் வாழ்வில் மாற்றம் என்பது இன்றியமையாத தேவையாக உள்ளது. பெருந்தோட்டங்களில் பணியாற்றும் மக்களின் 90 வீதமானவர்கள் தமிழ் பேசும் மக்களாக அமைந்திருந்த போதிலும், பெரும்பாலான தொழிலாளர்கள் சகோதர சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களை கொண்டமைந்த களனி வெலி பிளான்டேஷன் கம்பனிக்கு சொந்தமான நுவரெலியா தோட்டத்துக்கு விஜயம் செய்வதற்கான வாய்ப்பு எமக்கு கிடைத்திருந்தது.

இந்த பெருந்தோட்டத்தின் முகாமையாளராக அநுர சேனநாயக்க பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நுவரெலியா தோட்டத்தின் செயற்பாடுகள் குறித்து அவர் விபரிக்கையில்,

'நுவரெலியா பெருந்தோட்டம் மொத்தப் பரப்பளவு 292.14 ஹெக்டெயர்களாக அமைந்துள்ளது, மேல் பிரிவு மற்றும் கீழ் பிரிவு என இரு பிரிவுகளை இது கொண்டுள்ளது. இங்கு மொத்தமாக 162.10 ஹெக்டெயர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. மொத்த சனத்தொகை 2221 ஆக அமைந்துள்ளதுடன், பதிவு செய்யப்பட்ட ஊழியர்களாக 357 பேர் அமைந்துள்ளனர். மொத்தமாக 3 சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் அமைந்துள்ளது'.

'இங்கு பணியாற்றும் பெரும்பாலானவர்களில் 85 வீதமானவர்கள் சிங்கள இனத்தவர்களாக உள்ளனர். தோட்டத்தில் பிரச்சினைகள் ஏதும் ஏற்படும் போது அவர்கள் எம்முடன் நேரடியாக கலந்தாலோசித்து, தமது பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கின்றனர். இங்கு மொத்தமாக 488 குடும்பங்கள் 361 தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பான்மையினர் 1704 பேரும், 497 தமிழர்களும் 70 முஸ்லிம்களும் அடங்குகின்றனர். இங்கு மூன்று சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் காணப்படுகின்றன'.

'நாம் முதலில் தோட்டத் தொழிலாளர்களின் மனங்களை வெற்றிகொள்ளும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். தோட்டத்தை முறையாக பராமரித்தல், அவற்றுக்கு தேவையான பசளையிடுவது, கிருமிநாசினி தெளிப்பது புற்களை அகற்றுவது என சகல விடயங்களும் சரியான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து வேலை பெற்றுக் கொள்வதை மட்டும் நோக்கமாக கொள்ளாமல், அவர்களின் கலை, கலாசார நடவடிக்கைகளையும் நாம் ஊக்குவிக்கிறோம். பண்டிகைகளை கொண்டாட சந்தர்ப்பங்களை வழங்குகிறோம். அவர்களின் தேவைகளை கண்டறிந்து அவற்றுக்கு எம்மாலான தீர்வுகளை வழங்கி வருகிறோம். பெண் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் காலை 10 மணியளவில் நாம் இரும்புச்சத்து குளிசைகளை வழங்கி வருகிறோம். பகல் உணவு வேளையை அருந்துவதற்காக நாம் தோட்டத்தின் ஆங்காங்கே அதற்கான பகுதிகளையும் அமைத்துக் கொடுத்துள்ளோம்'.

'இங்கு குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய விடயம், லயன் அறைகள் எதுவும் இங்கு இல்லை. அனைத்து தொழிலாளர்களும் தனித்தனி வீடுகளில் வசிக்கின்றனர். நாம் புதிய வீடமைப்பு திட்டங்களுக்காக உதவிகளையும் வழங்கி வருகிறோம். 22 புதிய வீடுகள் இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட வண்ணமுள்ளன. தமது வீடுகளில் வசிக்கும் மக்கள், வீடுகளை விஸ்தரித்துக் கொள்ள விரும்பினால், அதற்காக சகாய விலையில் கல், சீமெந்து, மணல் போன்றவற்றை நாம் வழங்கி உதவுகிறோம்'.

'எமது பெருந்தோட்டம், மழைக்காடுகள் பராமரிப்புக்கான சர்வதேச சான்றிதழை பெற்றுள்ளது. இந்த சான்றிதழை பெற நாம் பல ஆயிரக்கணக்கான ரூபாவை முதலீடு செய்துள்ளோம். எமது நோக்கம், இந்த முதலீடுகளின் மூலம் தேயிலையின் தரத்தை, அல்லது தொழிற்சாலையின் தரத்தை உயர்த்துவது என்பது மட்டுமல்லாமல், எமது பங்காளர்களான தேயிலை தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. இந்த மழைக்காடுகள் சான்றிதழ் தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய விடயங்கள் குறித்து தோட்ட மக்களை தெளிவுபடுத்தும் வகையிலான அறிவுறுத்தல் பதாதைகள் ஆங்காங்கே பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எமது தோட்டத்தில், மரங்கள் வெட்டுதல், விறகெடுத்தல் போன்ற செயற்பாடுகள் சூழலுக்கு மாசை ஏற்படுத்தாத வகையில் முன்னெடுக்கப்படுகிறது'. என்றார்

தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் சிலரிடம் கருத்துக் கேட்ட போது, தாம் இங்கு எவ்விதமான நிர்வாக அழுத்தங்களுக்கும் முகங் கொடுப்பதில்லை எனவும், தமக்கு ஏற்படும் பிரச்சினைகளை நேரடியாக நிர்வாகத்துடன் கலந்துரையாடி, அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை தாம் முன்னெடுப்பதாகவும், மழைக்காடுகள் சான்றிதழானது தமது வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றக்கூடிய வகையிலான அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

இங்கு பார்வையிட்ட மற்றுமொரு விடயமாக, தேயிலைச் செடிகளுக்கு கிருமிநாசிகளை தெளிக்கும் போது, முழு உடலையும் பாதுகாக்கும் வகையில் அமைந்த மேலங்கி குறித்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், கிருமி நாசினி தெளிக்கும் செயற்பாடு நிறைவடைந்தவுடன், அவற்றை முறையாக பிரிதொரு இடத்தில் பேணுவதற்கான வசதிகளையும், தம்மை சுத்தம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

தமது இலாபத்தை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், தமது இலாபத்தில் பிரதான பங்களிப்பை வழங்கும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நலனிலும் அக்கறை செலுத்தும் இந்த நுவரெலியா பெருந்தோட்டத்தில் காணப்படும் சிறந்த பின்பற்றல் முறைகள் நாட்டின் ஏனைய பெருந்தோட்டங்களிலும் முன்னெடுக்கப்படுமாயின், இலங்கையின் பெருந்தோட்டத்துறை மேலும் பல ஆண்டுகள் நீடித்து நிலைத்திருந்து தொடர்ந்து இலங்கைக்கு பொருளாதார ரீதியில் சிறந்த அந்நிய செலாவணியை பெற்றுக் கொடுக்கக்கூடியதாகவிருக்கும் என்பது எமது அவதானிப்பாகும்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .