2024 மார்ச் 28, வியாழக்கிழமை

CRIB என்றால் என்ன? அதன் தாக்கம் எப்படியானது?

அனுதினன் சுதந்திரநாதன்   / 2019 பெப்ரவரி 11 , மு.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தனிநபர் கடன் சுமையானது நகரம், கிராமம் முழுவதுமே வெவ்வேறு வடிவங்களில் பரந்து கிடக்கிறது.   

கிராமங்களில் உள்ளவர்கள் நுண்கடன் சுமையால் தள்ளாடிக் கொண்டிருக்க, நகரங்களில் வாழ்பவர்கள் கடனட்டைச் சுமையால் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கடனை அடைத்துக்கொள்ள இன்னுமொரு கடனைப் பெற்றுக்கொள்வதையும் ஒரு கடனட்டை உச்சவரம்பை எட்டிக்கொள்ளுகின்றபோது, மற்றுமொரு கடனட்டையைப் பெற்றுப் பயன்படுத்துவதையும் ஒரு தீர்வாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.   

ஆனால், மற்றுமொரு வங்கியோ, கடனட்டை வழங்கும் நிறுவனமோ எப்போது கடனை, கடனட்டை வழங்குவதை நிறுத்திக் கொள்ளுகின்றதோ அப்போதுதான் உண்மையான கடன்சுமையை உணரத் தொடங்குவதுடன், அதை மீளச் செலுத்த முடியாதநிலைக்கும் தள்ளப்படுகிறார்கள்.  

 கடனையும் கடனட்டையையும் ஒரு வங்கியில் பெற்றுக்கொள்ளுபவர்கள் மற்றுமொரு வங்கியில், கடனைப் பெற்றுக்கொள்ளச் செல்லும்போது, முன்னைய வங்கியில் பெற்றுக்கொண்ட வங்கிக்கடன் தொடர்பில் அவர்களுக்குத் தெரிந்திருக்கப் போவதில்லை என்ற எண்ணத்துடனேயே கடனைப் பெற்றுக்கொள்ளச் செல்கின்றார்கள்.   

ஆனால், இலங்கையில் கடனொன்றை, கடனட்டை ஒன்றைப் பெற்றுக்கொள்ளும் எந்தவொரு நபரினதும் தகவல், இலங்கையின் கொடுகடன் தகவல் பணியகத்தில் (CRIB ) பதிவாகின்றது என்பதையும் அதை எந்தவொரு நிதி நிறுவனமும் குறித்த தனிநபரும் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் அறிந்துகொள்ளத் தவறிவிடுகிறார்கள்.   

இதனால், மற்றுமொரு வங்கியோ, கடனட்டை நிறுவனமோ கடன், கடனட்டை விண்ணப்பத்தை நிராகரிக்கும்போது, செய்வதறியாது நிற்கும் நிலை ஏற்படுகின்றது.  

 அத்துடன், நம்மவர்களின் நிதியியல்சார் கல்வியறிவு விகிதம், மிகக் குறைந்த நிலையிலிருப்பதும், இந்தக் கடன் கொடுகடன் பணியகம் தொடர்பிலோ, தமது கடனுக்கான CRIB அறிக்கை தொடர்பிலோ போதுமான தகவலோ, விழிப்புணர்வோ கிடைக்காததன் விளைவாகவும் தமது கடன் மீள்செலுத்தும் திறன் தொடர்பிலோ, அதுதொடர்பிலான சிக்கல்தன்மையையோ அறியாதவர்களாக இருக்கின்ற மோசமானநிலை காணப்படுகின்றது.  

CRIB என்றால் என்ன?  

 CRIB எனப்படும் இலங்கையின் கடன்கொடுகடன் பணியகமானது, நாட்டின் கடன் தரப்படுத்தலை மேம்படுத்தும் நோக்கிலும், கடன் வழங்கல், பெறுதலில் ஒரு சீராக்கத்தைக் கொண்டுவரும் நோக்கிலும் தெற்காசியாவிலேயே முதன்முதலில் உருவாக்கப்பட்ட நிறுவகமாகும்.   

1980ஆம் ஆண்டளவில் உருவாக்கப்பட்ட இந்த நிறுவகத்தில், இலங்கை மத்திய வங்கி பங்குதாரராக இருப்பதுடன், இதற்கு மேலதிகமாக மேலும் 93 பங்குதாரர்களை அங்கமாகக்கொண்டு, இந்த நிறுவனம் இயங்கி வருகின்றது. மொத்தம் 94 பங்குதாரர்கள் பட்டியலில் 25 வணிக வங்கிகளும் ஏழு விசேட வங்கிகளும் 45 பதிவு செய்யப்பட்ட நிதிநிறுவனங்களும் ஆறு குத்தகை நிறுவனங்களும் மேலும் அரசு நிறுவனங்களும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள்.  

 CRIB நிறுவனத்தின் மிகப்பெரும் நோக்கமே, வாடிக்கையாளர்களுக்கு மிகஇலகுவாகவும் விரைவாகவும் கடன்தகவல்களை வழங்குவதுடன், நாட்டின் கடன்நிலையை ஸ்திரமான நிலையில் கொண்டு நடத்துவதற்கு உதவுவதாகும்.   

CRIBஇன் பயன்பாடுகள் என்ன?  

 CRIB நிறுவனம் இலங்கையில் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாக, இலங்கையிலுள்ள வங்கிகள், நிதிநிறுவனங்கள் அனைத்துமே தமது கடன்தொடர்பான விவரங்களையும் தம்மிடம் கடன் பெற வருபவர்கள் தொடர்பான தகவல்களையும் ஏனைய நிறுவனங்களிடமிருந்தும் ஆவண கோரிக்கைகளின் வாயிலாகவே பெற்றுக்கொண்டிருந்தார்கள்.   

இதன்காரணமாக, வங்கிகள், நிதிநிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோர் தமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள, மாதக்கணக்கில் காத்திருக்கும்நிலை ஏற்பட்டது. ஆனால், இலங்கை கொடுகடன் பணியகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்பு, அனைத்துத் தகவல்களும் ஒன்றுதிரட்டப்பட்டு, ஓரிடத்தில் ஆவணப்படுத்தப்பட்டு, முறையான வகையில் உடனுக்குடன் தேவைப்படும் தரப்பினருக்கு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

 இலங்கை கொடுகடன் பணியகத்தின் தகவல் களஞ்சியமானது, ஒவ்வொரு மாத இறுதியிலும் தன்னியக்க முறையில் அங்கத்துவம் கொண்ட நிறுவனங்களின் வாயிலாகப் புதுப்பிக்கப்படுகிறது. இதன் மூலமாக, எந்தவொரு நிறுவனமும், பொதுமகனும் தனது கடன்நிலை தொடர்பில் மிக இலகுவாக அறிந்துகொள்ள முடியும். இந்தத் தகவல் களஞ்சியத்திலுள்ள தகவல்கள் தனிநபர்களின் தேசிய அடையாள அட்டை எண் அடிப்படையிலும் நிறுவனங்களின் தகவல்கள் வியாபாரப் பதிவெண்ணின் பிரகாரமும் மிக இலகுவாகக் கண்டறியப்படுகிறது.  

CRIBயில் உங்கள் பெயர் உள்ளதா?  

 நம்மில் பலருக்குமே CRIB தொடர்பான மிகத் தவறான அனுமானங்களே மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமானதொன்று, இலங்கைய கடன்கொடு பணியகத்தின் அறிக்கையில் இடம்பெறுகின்ற பெயர்கள், நிறுவனங்கள் அனைத்துமே தமது கடனை மீளச்செலுத்தாதவர்களாகவே இருப்பார்கள் என்பதாகும். இது முற்றிலும் தவறானவொன்றாகும்.   

 உதாரணத்துக்கு, தனிநபராகிய நீங்கள் வங்கியில் கடன் ஒன்றையோ, கடனட்டை ஒன்றையோ பெற்றுக்கொள்ளும்போதோ, மற்றுமொருவரின் கடனுக்காக உத்தரவாதக் கையொப்பத்தை வழங்கும் போதோ, உங்களது அனைத்து விவரங்களும் கடன்கொடு தகவல் பணியகத்தில் சேமிக்கப்பட்டுவிடும். இதற்கு அர்த்தம், கடன்கொடுகடன் பணியகத்தில் உங்கள் தகவல் வருவதால், நீங்கள் கடனை மீளச்செலுத்தாதவர் என்றாகிவிடாது. கடன்பெற்ற நீங்கள், மீளவும் மற்றுமொரு வங்கியில் கடனைப் பெறச் செல்லும்போது, இதுதொடர்பில் அறிவிக்கவும், இந்த நபருக்கான இயலுமைத்தன்மை தொடர்பில் குறித்த வங்கியோ, நிதிநிறுவனமோ அறிந்துகொள்ளவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.   

உண்மையில், கடன்தரப்படுத்தல் அறிக்கையின் வகைப்படுத்தலின் பிரகாரமே, ஒருவரது கடன் மீள்செலுத்தும் நிலையும் மற்றுமொரு கடன் பெறக்கூடிய நிலையும் தீர்மானிக்கப்படுகிறதே தவிர, கடன் அறிக்கையில் பெயர் இடம்பெற்ற ஒரே காரணத்தால் கடன் வழங்க மறுக்கப்படுவதுமில்லை, கடன்பெற்றவர் தவறாக வகைப்படுத்தப்படுவதுமில்லை.  

 மேற்கூறிய உதாரணம்போலவே, குறித்த நிறுவனமொன்றின் உரிமையாளராக நீங்கள் உள்ள சந்தர்ப்பத்தில், குறித்த நிறுவனம் ஏதேனும் வங்கிக் கடனையோ, ஏதேனும் நிதி வசதிகளையோ பெற்றிருந்தாலோ நிறுவனத்தின் பெயரும், உங்களது பெயரும் கடன் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும்.  
CRIB அறிக்கை எப்படியானது? எப்படி பெற்றுக்கொள்ள முடியும்?  

 இலங்கை கடன்கொடு பணியகத்தால் வழங்கப்படும் கடன் அறிக்கையில், கடன், கடனட்டை வழங்கிய நிறுவனத்தின் பெயர், பெற்றுக்கொண்டவரின் தனிநபர் விவரம், பெற்றுக்கொண்ட கடனின் அளவு, கடன் வழங்கப்பட்ட திகதி, மீள்செலுத்துகை முறை, கடனுக்காக வழங்கப்பட்ட உத்தரவாத முறை, மாதாந்தம் மீளச்செலுத்தும் தொகை, திகதி விவரம், மாதாந்த மீளசெலுத்தலில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டிருப்பின் அது தொடர்பிலான குறிப்பு, அண்மையில் மீளச்செலுத்தி முடிக்கப்பட்ட கடனின் விவரம், பெற்றுக்கொண்ட கடனில் மீளச்செலுத்தாமல் நிலுவையாக உள்ளவற்றில் விவரம், காசோலை வழங்குதலில் தொடர்பிருப்பின் அதுதொடர்பான விவரம், ஏதேனும் காசோலைகள் பணமாகாது மறுக்கப்பட்டிருப்பின் அதுதொடர்பிலான விவரம், கடன் தொடர்பில் முக்கியமான ஏனைய விவரங்களென அனைத்தையும் உள்ளடக்கியதாக இவ்வறிக்கை இலங்கை கடன்கொடு பணியகத்தால் தயாரித்து வழங்கப்படும்.  

 மேற்கூறிய CRIB அறிக்கையை நிதி நிறுவனங்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் தங்களது கடன் மதிப்பீடு தொடர்பில் அறிந்துகொள்ளக் கூடிய வகையில், பெற்றுக்கொள்ளக் கூடியவாறு தற்போது வழிவகை செய்யப்பட்டு இருக்கின்றது. பொதுமக்களாகிய நீங்கள், உங்களது கடன் மதிப்பீட்டை அறிந்துகொள்ளவோ, உங்களது பெயரில் யாரேனும் கடன் பெற்று ஏதேனும் மோசடி இடம்பெற்றுள்ளதா என்பதை அறிந்துகொள்ளவோ இந்தக் கடன் அறிக்கையைப் பெறுவது அவசியமாகவுள்ளது.   

இதற்கு, உங்களுக்கு அருகாமையிலுள்ள, நீங்கள் வங்கி கணக்கைக் கொண்டுள்ள ஏதேனுமொரு வங்கிக்கிளையில் குறித்த CRIB அறிக்கையைப் பெறுவதற்கான விண்ணப்பப்படிவத்தை இலவசமாகப் பெற்று, பூரணப்படுத்தி கையளித்தாலே போதுமானது ஆகும். விண்ணப்பப்படிவம் மட்டுமே இலவசமாக வழங்கப்படுவதுடன், குறித்த CRIB அறிக்கை, நம்கைகளுக்கு கிடைக்க, தனிநபர் ஒருவர் 150/- ரூபாயும், நிறுவனம் 500/- ரூபாயும் கட்டணமாக, இலங்கை கொடுகடன் பணியகத்துக்குச் செலுத்த வேண்டியது அவசியமாகும்.   

நீங்கள் விண்ணப்பத்தைக் கையளித்த தினத்திலிருந்து அதிகூடியதாக இரண்டு வாரத்தில் CRIB அறிக்கை தபாலில் உங்களை வந்துசேரும். இதை விடவும் மிகவேகமாக உங்களுக்கு CRIB அறிக்கை தேவைப்படின், இணையத்தில் (http://www.crib.lk/) தரவிறக்கிய விண்ணப்பப் படிவத்தை அல்லது வங்கியில் பெற்ற படிவத்தைப் பூரணப்படுத்தி, ஏதேனும் வங்கியின் அத்தாட்சிபடுத்தலுடன், கொழும்பிலுள்ள இலங்கை கொடுகடன் பணியகத்தில் கையளிக்கும் அதேநாளில், குறித்த CRIB அறிக்கையைப் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும். குறித்த ஒருநாள் சேவைக்கு, மேலதிகமாக 100/- ரூபாய் மட்டும் இலங்கை கொடுகடன் பணியகத்தால் அறவிடப்படுகின்றது.  

 எனவே, தனிநபர் ஒவ்வொருவரும் தமது கடன்நிலை தொடப்பிலும், கடன் தரப்படுத்தல் தொடர்பிலும் அறிந்துகொள்ளக் குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்ளுவது அவசியமாகிறது. குறித்த அறிக்கையின் மூலமாக, நிதி நிறுவனங்களுக்குச் செல்ல முன்பே, உங்களது நிதி இயலுமைத் தன்மை, நிதி நிறுவனத்தில் மேலதிக நிதியை பெற்றுக்கொள்ளக்கூடிய தன்மை ஆகியவற்றை நீங்களாவே சுயமதிப்பீடு செய்துகொள்ள முடிவதுடன், அதற்கேற்ப உங்கள் வாழ்க்கை முறையையும் வாழ்க்கைச் செலவீனங்களையும் கூட நெறிப்படுத்திக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.  

 இந்த வாரம், இலங்கை கொடுக்கடன் பணியகத்தின் சேவை, CRIB அறிக்கையை எப்படிப் பெற்றுக்கொள்ளுவது? அதைப் பெறுவதன் நன்மை ஆகியவற்றை அறிந்துகொண்டதுபோல, எதிர்வரும் வாரங்களில் CRIB அறிக்கையை எவ்வாறு புரிந்துகொள்ளுவது? கடன் தரப்படுத்தலில் மோசமாகத் தரப்படுத்தப்பட்டிருப்பின் அதிலிருந்து எவ்வாறு வெளியேறுவது போன்ற விடயங்களைப் பார்க்கலாம்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X