2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கை தேயிலை தொடர்பில் சில நாடுகள் குற்றச்சாட்டு

Editorial   / 2019 ஜனவரி 22 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ச. சேகர்                                                                     

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையில் கசடு மட்டம் உயர்வாக அமைந்துள்ளதாக தாய்வான், ஐரோப்பா போன்ற நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

2017இல் ஜப்பான் இந்தக் குற்றச்சாட்டை மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது இந்த இரு நாடுகளும் இதில் இணைந்துள்ளமை வெளிநாடுகளுக்கான தேயிலை ஏற்றுமதி மேலதிக சவாலை எதிர்நோக்கியுள்ளதாக, தேயிலை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை ஏற்​கெனவே பெருமளவு சவால்களையும் போட்டிகளையும் எதிர்கொண்டுள்ள நிலையில், சமகாலத்தில் எழுந்துள்ள இந்தக் கசடு மட்டம் தொடர்பான சிக்கல் நிலை, மேலும் நெருக்கடி நிலையைத் தோற்றுவித்துள்ளதாகத் தேயிலை ஏற்றுமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கிளிபோசைட் உரப்பாவனை நாட்டில் தடை செய்யப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, இந்தப் பிரச்சினையை முதன் முறையாக ஜப்பான் எழுப்பியிருந்தது. இந்த நிலையை கட்டுப்படுத்தி, சீரான ஏற்றுமதியை பேணுவதற்காக தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கு மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதுடன், அதற்கான செலவும் அதிகரித்துக் காணப்படுகிறது.  

இருந்த போதிலும், கடந்த மார்ச் மாதம் முதல் பெருந்தோட்டங்களில் கிளிபோசைட் உர பாவனைக்கான அனுமதி மீள வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிலை காலப் போக்கில் சீரடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கைத் தேயிலை சபை குறிப்பிட்டுள்ளது.  

இதேவேளையில் தேயிலையில் காணப்படும் சீனியின் அளவைப் பரிசோதிப்பது தொடர்பில் இலங்கைத் தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. இதனூடாக தேயிலை உற்பத்தியின் போது, அதில் சேர்க்கப்படும் சீனியின் அளவை பரிசோதிக்கக்கூடியதாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.  

அடுத்த சில மாதங்களில் இந்த அனுமதியை நிறுவனம் பெற்றுக் கொண்டதை தொடர்ந்து, சீனியின் அளவை பரிசோதிப்பது தொடர்பான வழிகாட்டல்கள் துறைக்கு வழங்கப்படும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .