2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கையில் முதலீடுகளை எதில் செய்யலாம்?

அனுதினன் சுதந்திரநாதன்   / 2019 ஏப்ரல் 01 , பி.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பொருளாதார தளம்பல்நிலை, வருமானங்கள் மீதான வரி, அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவீனம் என்பவற்றின் வாயிலாக, சேமிப்பென்பது மக்களுக்கு குதிரைக் கொம்பாகியுள்ளது.

இந்த நிலையில், சிறுகச் சிறுகச் சேமிக்கும் வருமானத்தையும் முதலீடுகளாக மாற்றுவதில் மக்களுக்கு ஜெயமான நிலையேயுள்ளது. ஆனாலும், சேமிப்புகளை மற்றுமொரு முதலீடாக மாற்றாதவிடத்து, நீங்கள் உங்களது மற்றுமொரு வருமான வழியை இழக்கவே நேரிடும்.

பெரும்பாலானவர்கள், வங்கிகள் தரும் மாத, நிலையான சேமிப்பு வட்டி வீதங்களுடன் தமது மேலதிக வருமானத்தை நிறுத்திக் கொள்ளுகிறார்கள். இதன் காரணமாக, அவர்களது வருமானமும் ஒருவித எல்லையுடன் நின்றே போகிறது.   

உண்மையில், நம்மை சுற்றி வங்கிகள் தரும் வருமானத்தைவிட அதிக வருமானத்தை உழைக்கக் கூடிய பல்வேறு வகையான முதலீட்டு முறைகள் உள்ளன. இவை, துணிகரத்தன்மை அல்லது அபாயநேர்வு (Risk Basis) தன்மையின் அடிப்படையில் முதலீட்டுக்கான வருமானம் கிடைப்பதிலிருந்து வேறுபடுகிறது.

இம்முதலீடுகளுக்கான வருமானத்தை எளிமையாக விளக்குவதென்றால், ஒரு முதலீட்டாளர் தனது முதலீடுகளைப் பயன்படுத்தி, அதிக அபாயநேர்வைச் சந்திக்கத் தயாராகவிருந்தால், அவரது முதலீட்டுக்கான வருமானமும் அதிகமாக இருக்கும்.

அதுபோல, குறைவான அபாயநேர்வையே ஒரு முதலீட்டாளர் விரும்பினால், அவர் துணிகர முதலீட்டாளர் போல தனது வருமானத்தை அதிகளவில் எதிர்பார்க்க முடியாது.

அப்படியாயின், சாமானியர் ஒருவர் தனது வருமானத்தில் ஒருபகுதியாகச் சேமிக்கும் பணத்தைக் கொண்டு எவ்வாறு மீளவும் ஒரு வருமானத்தை உழைக்க முடியும்? அவ்வாறான முதலீடுகளை நோக்கிச் செல்லும்போது, அவை எந்தளவுக்கு பாதுகாப்பனாதாக இருக்கும்? அவ்வாறு, இலங்கையில் வங்கிச் சேமிப்பு தவிர்ந்து வேறு எவ்வகையான முதலீடுகள் உள்ளன?   

செல்வ மேலாண்மை

அண்மைய காலத்தில், இலங்கையில் பிரசித்தம் பெறுகின்ற இன்னுமொரு சேமிப்பு சார்ந்த முதலீட்டுமுறை இதுவாகும். எதிர்காலத்தை நோக்கியதான ஒரு திட்டத்துக்கு வருமான அளவைப்பொறுத்து, சேமிப்பை நிலையாகத் தெரிவு செய்துகொண்டுச் சேமிக்கும் திட்டம் இதுவாகும்.

குறித்த சேமிப்புக்காலத்துக்கான வட்டிவீதமும் வங்கிகளை விட இம்முறையில் அதிகமாக வழங்கப்படும். கூடவே, With holding Tax வரி சலுகையும் வழங்கப்படுகிறது. எனவே, சரியான கால அளவில் எதிர்காலத் திட்டத்தை வகுத்துக்கொண்டு வாழ்பவர்களுக்கும், நிலையான சேமிப்பை, மாதமாதம் மேற்கொள்ளவேண்டும் என்பவர்களுக்கும்,  இது மிகச்சரியான வழிமுறைகளில் ஒன்று. சராசரியாக, செல்வ மேலாண்மைத் திட்டங்களுக்கு 10 - 15% வருட வட்டிவீதமும் வழங்கப்படுகிறது. இதுவும், அபாயநேர்வு குறைவான முதலீட்டு முறையாகும்.  

அரச பிணையங்கள்

முதலீட்டு மூலங்களில் மிகவும் பாதுகாப்பான முதலீட்டு மூலமாக இதைக் குறிப்பிட முடியும். அரசாங்கத்தால்,  தனது தேவைகளுக்கும், நாட்டின் அபிவிருத்திக்குமென வெளியிடப்படுகின்ற பிணையங்களே இவையாகும்.

இவற்றின் முதிர்ச்சியின் அடிப்படையில் குறுங்கால,  நீண்டகால முதலீடுகள் என இவை வகைப்படுத்தப்படும். குறுங்கால முதலீடுகள் திறைசேரி உண்டியல் எனவும் நீண்டகால முதலீடுகள் திறைசேரிமுறி, இலங்கை அபிவிருத்தி முறிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.  

திறைசேரி ஊண்டியல் அதிகபட்சமாக 91,182, 364 நாள்களை முதிர்வுக் காலமாகக் கொண்ட குறுகிய முதலீடாகும். முதன்மை சந்தையிலோ அல்லது அதிகாரம் அளிக்கப்பட்ட எந்தவொரு வங்கியிலும் இதைக் கொள்வனவு செய்துக்கொள்ள முடியும் என்பததுடன், முதிர்ச்சிக் காலத்தில் மொத்த வருமானத்தின் 10% Withholding வரியாக அறவிடப்படும் என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தற்சமயம் 364 நாட்களை முதிர்வாக கொண்ட திறைசேரி முறிகளுக்கு சராசரி வருடாந்த வட்டிவிகிதமாக 10.47% வழங்கப்படுகிறது.  

திறைசேரி முறிகள் குறைந்தது 2 வருடத்தையும் அதிகூடியது 20 வருடங்களை முதிர்வு காலமாக கொண்டதாகவுள்ளது. இதனையும், திறைசேரி உண்டியலை கொள்வனவு செய்வது போல கொள்வனவு செய்துக்கொள்ள முடியும். இதற்கான வட்டி வருமானம் திறைசேரி முறிகளின் முதிர்வு காலத்தின் அடிப்படையில் வேறுபடும்.

தற்போதைய நிலையில் 10 வருட முதிர்வுகாலத்தைக் கொண்ட திறைசேரி முறிகளுக்கு சராசரியாக 11.5% வட்டி வருமானம் வழங்கப்படுகிறது. இதற்கும் முதிர்ச்சி பருவத்தில் 10% Withholding வரியாக அறவிடப்படும்.   
அரச பிணையங்கள் 100% அரச உத்தரவாதத்தைக் கொண்ட அபாயநேர்வு குறைவான அல்லது இல்லாத முதலீடுகளாக உள்ளமையால், இவற்றுக்கான வருமானமும் சந்தையுடன் ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கும்.   

அலகு நிதியங்கள்

அலகு நிதியங்கள் மற்றுமொரு வகையான முதலீட்டு மூலங்களாக உள்ளன. முதலில் அலகு நிதியங்கள் என்றால் என்ன என்பதனை புரிந்துகொள்ள வேண்டும். சாதாரணமான ஒருவரினால் மிகப்பெரிய சொத்து ஒன்றினை கொள்வனவு செய்ய முடியாதவிடத்து, நண்பர்களுடன் சேர்ந்து அதனை பகிர்ந்து கொள்வனவு செய்ய முடியும். பின்பு, எப்போது அதன் பெறுமதி அதிகரிக்கிறதோ, அப்போது அதனை விற்பனை செய்து அதன் இலாபத்தையும், முதலீட்டையும் பகிர்ந்துகொள்ள முடியும் என்பது போல, கூட்டாக வேறுபட்ட அபாயநேர்வைக் கொண்ட பங்குகள், அரச பிணையங்கள் என்பவற்றை இணைத்து அலகுகளாக முதலீடு செய்யும் முறை இதுவாகும். இதன்போது, உங்கள் முதலீட்டின் மீதான அபாயநேர்வை சமப்படுத்திக்கொண்டு முதலீடு செய்துக்கொள்ள முடியும்.  

உதாரணமாக, வருமானம் உழைக்கக்கூடிய அபாய நேர்வு கொண்ட நிறுவன பங்குகள், வருமானம் குறைவான,  அபாய நேர்வு குறைவான நிறுவன பங்குகள், அரச பிணையங்கள் என அனைத்திலும் அலகு நிதிய நிறுவனங்கள் முதலீடு செய்யும். ஆனால், அவை எல்லாவற்றையும் உள்ளடக்கி அபாயநேர்வை சமப்படுத்தக்கூடிய அலகுகளாக அந்த முதலீடுகளை முதலீட்டாளர்களுக்கு சந்தை பெறுதி அடிப்படையில் அவை வழங்கும். இதன்போது, முதலீட்டாளர் தனது அபாயநேர்வை குறைத்துக்கொள்ள முடிவதுடன், தொடர்ச்சியாக வருமானத்தையும் ஈட்டக்கூடியதாகவும் இருக்கும்.  

பங்குச் சந்தை

பங்குப்பரிவர்த்தனை மூலமான வருமானம் ஈட்டல் முறைமை இதுவாகும். குறித்த நிறுவனத்தின் பங்குகளை கொழும்பு பங்குசந்தையின் சரியான சட்டதிட்டங்களுக்கு ஏற்ப கொள்வனவு செய்வதன் மூலம், இலாபப்பங்கையும் (Dividend), மீண்டும் அதனை விற்பதன் மூலமாக மூலதன இலாபத்தையும் (Capital Gain) பெற்றுக்கொள்ளக் கூடிய வழிமுறை ஆகும். இதனை பங்குதரகர்கள் மூலமாக செய்வதன் மூலம், எத்தகைய நிறுவனப் பங்குகளைக்கொள்வனவு செய்வது இலாபத்தைத் தரக்கூடியது என்பதனை மேலதிகமாக உறுதிசெய்துகொள்ளக்கூடியதாக இருக்கும். ஆயினும், எந்தவொரு தனிநபரும் பங்குச்சந்தையில் தனது கொடுக்கல்,வாங்கல்களுக்குத் தானே பொறுப்பாவார்கள் என்றவகையில், பங்குப் பரிவர்த்தனை தொடர்பிலான அடிப்படை அறிவினையாவது முதலீட்டாளர்கள் பெற்றிருத்தல் அவசியமாகிறது.  

பங்கு கொடுக்கல் வாங்கல்,  பங்குச்சந்தைக்கு என நேரஒதுக்கலை மேற்கொள்ள முடியாதவர்கள் நம்பிக்கை நிதியங்களின் பங்குகள் (Unit Trust) மீது முதலீடுகளை மேற்கொள்ளலாம். நம்பிக்கை நிதியங்கள் உங்களுக்காக பங்குச்சந்தையில் பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் மீது முதலீட்டை மேற்கொண்டு அதன்மூலமாகக் கிடைக்கப்பெறும் வருமானத்தினை நிலையான விகிதம் மூலம் வழங்கும். இங்கும், நிலையான வருமானம் ஒன்றையும், கொள்வனவு செய்த நிதியலகை விற்பனை செய்வதன் மூலமான முதலீட்டு இலாபத்தையும் பெற்றுகொள்ளலாம்.  

தொடக்கநிலை வணிகம்

தற்போதைய நிலையில் அவசியமான வணிகங்களாக தொடக்கநிலை வணிகங்கள் உள்ளது. புதிய தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்துவதில் எப்படி தொடக்கநிலை வணிகங்கள் முக்கியத்துவம் பெறுகின்றதோ, அதுபோல முதலீடுகளுக்கு கூடிய வருமானத்தை தரக்கூடிய வணிகங்களாகவும் இவை உள்ளன.  
தொடக்கநிலை வணிகம் என்பது, விரிவான சந்தையில் புதிய முயற்சிகளை அல்லது புதிய பொருட்களை முயற்சியாண்மைக்கு உரித்தான பாணியில் அறிமுகம் செய்வதே ஆகும். இவை புதிய பொருட்கள், சேவைகளாகவோ அல்லது சந்தையில் ஏற்கெனவே உள்ள பொருள், சேவைகளின் மேம்படுத்தபட்ட புதிய முயற்சிகளாகவோ அமையலாம்.

எனவே, புதிய வணிக முயற்சிகளுக்கு உள்ள அத்தனை அபாயநேர்வுகளும் இந்த முதலீடுகளுக்கு உள்ளது. அதுபோல, அதற்கு கிடைக்கப்பெறும் பிரதிபலனான வருமானமும் ஏனையவற்றுடன் ஒப்பிடும்போது அதிகமானதே! எனவே, முதலீட்டளர்கள் வருமானம் அதிகமாக உள்ளது என்பதனை நம்பி தமது பணத்தினை வீணடிக்காமல், புதிய வணிக முயற்சிகளை ஆய்வுக்குட்படுத்தி முதலீடு செய்வது அவசியமாகும்.  

அசையும் சொத்துகள் மீதான முதலீடுகள்

பணமாகவோ, வங்கிகளிலோ அல்லது உடனடிப் பணமாகவோ மாற்ற முடியாத சொத்துகளில் முதலீடு செய்ய விரும்பாதவர்களுக்கு உரித்தான மற்றுமொரு முதலீட்டு வழிமுறை இதுவாகும். சேமிப்புக்கு ஏற்றவகையில், முதலீடுகளை மேற்கொண்டு சந்தையின் மாற்றங்களுக்கு ஏற்ப, வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக  தங்கம் மீதான முதலீடு  தங்கம் விலைகுறைவான காலத்தில் கொள்வனவு செய்து, விலை அதிகரிக்கின்ற சந்தர்ப்பத்தில் விற்பனை செய்கின்ற எளிய முறைமை இது.  

மோட்டார் வாகனம் மீதான முதலீடு  இலங்கையின் அதிகரித்து செல்லும் மோட்டார் வாகன வரி, கேள்வி நிலை என்பன இந்த சந்தையை உருவாக்கியுள்ளது. 

பெரும்பாலும், இரண்டாம் சந்தையை கொண்ட மோட்டார் வாகனங்களை கொள்வனவு செய்யும்போது, முதலீட்டு லாபத்தை பெறக்கூடியதாக அமையும்.  

இதனை தவிர்ந்தும பல்வேறு வகையான முதலீடுகள் சந்தையில் உள்ளன. உதாரணத்துக்கு நிலையான சொத்துக்கள். ஆனால், அவற்றுக்கு மிகப்பெரிய அளவிலான முதலீடு அவசியமாகும். எனவே, மிகச்சிறிய பாதுகாப்பான முதலீடுகளை எவ்வாறு மேற்கொள்ளுவது என்பதனை ஆரம்பத்தில் கற்றுக்கொள்ளுவது அவசியாமாகும். இதன்போது , கிடைக்கின்ற வருமானமும் சரி, நட்டநிலையும் சரி எதிர்காலத்தில் உங்களையும் ஒரு துணிகர முதலீட்டாளராக மாற்றியமைக்கும் என்பதில் ஜயமில்லை.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .