2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கவர்ச்சிகர கடனட்டைகளும் அதன் பாவனையும்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2018 பெப்ரவரி 26 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நம்முடைய வாழ்க்கை முறையில் ஏதோவொரு வகையில் தேவைகளும், விருப்பங்களும் இருந்துகொண்டேதான் இருக்கிறன. 

அவை அடையப்படும்போது, மீளவும் வேறுவகையிலான புதிய தேவைகளும் விருப்பங்களும் நமக்கு உருவாகின்றன. இந்தத் தேவைகளையும் விரும்பங்களையும் பூர்த்தி செய்யவே, மனிதன், வாழ்க்கை முழுவதும் ஓடிக்கொண்டிருக்க வேண்டியதாகிறது. இதற்குக் காரணம், மனிதனின் பொதுவியல்பான எதிலுமே திருப்திப்பட்டுக் கொள்ளாமை நிலையாகும்.  

அதுபோலத்தான், ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் பணம் இருக்கிறது. எவ்வளவுதான் கையிருப்பில் பணமிருந்தாலும் போதாதென்ற நினைப்புத்தான் நம் ஒவ்வொருவருக்கும்  நிச்சயமாக இருக்கும். 

இந்த எண்ணமும் நினைப்பும் ஒரு வியாபாரத்துக்கு அடித்தளமிட முடியுமெனின், அது கடனட்டை வியாபாரமாகத்தான் இருக்கும். ஆரம்ப காலங்களில் நம்மிடமுள்ள பணத்தின் அளவுகளுக்கு நமது செலவுகளை மட்டுப்படுத்திக் கொண்டோம். 


சில காலங்களின் பின்பு, சேமிப்பின் வாயிலாக, நமது மேலதிக தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள ஆரம்பித்தோம். இப்போது, சேமித்து நமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவதை விடவும், இந்த அவசர உலகில் கடனுக்கு பொருட்களையோ அல்லது சேவையையோ பெற்றுக்கொண்டு, அந்தக் கடனை நமது சேமிப்பின் துணைகொண்டு அடைத்துக்கொண்டிருக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம். இந்த இறுதிநிலைதான், நம்மிடையே கடனட்டைகளைப் பிரபலப்படுத்தியிருக்கிறது.  


இதன்காரணமாக, கடனட்டை பயன்பாடு என்பது தவறானது என்றோ அல்லது அவசியமற்றது என்றோ அர்த்தமாகிவிடாது. கடனட்டைப் பயன்பாட்டை மிகவும் சிரத்தையுடனும் அவசியத் தேவைகளுக்கும் அதனது நேரடியான மற்றும் மறைமுகமான சாதக,பாதக விடயங்களைத் தெரிந்துகொண்டு, பயன்படுத்துவது தற்சமயத்தில் அவசியமே என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.  


எனவே, ஒரு கடனட்டையைப் பயன்படுத்த விரும்புவராக நீங்கள் இருந்தால், பின்வரும் விடயங்கள் தொடர்பில் கவனமாக இருக்கவேண்டியது அவசியமாகிறது. அதுபோல, கடனட்டையைப் பயன்படுத்திக் கொண்டுள்ளவராக இருந்தால், இதை எல்லாம் கவனித்துக்கொண்டு உள்ளீர்களா? என்பதையும் மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டும்.   


முதலில் கடனட்டையைப் பயன்படுத்த விரும்புவராக இருந்தாலும் சரி, பயன்படுத்துபவராக இருந்தாலும் சரி, குறிப்பிட்ட நேரத்தை உங்களுக்கென ஒதுக்கி, உங்களது செலவு முறைகள், கடனட்டைக்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய வட்டிவீதங்கள் சந்தையில் என்ன, கடனட்டைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் என்ன, கடனட்டைக்கான பணத்தைக் குறித்த காலத்தில் செலுத்த முடியாது போகுமிடத்தில், ஒவ்வொரு வங்கியும் எவ்வாறான அபராதங்களை விதிக்கின்றன? போன்ற அடிப்படையான விடயங்களைத் தேடிக்கொள்ளுங்கள். இது, தற்கால வணிகசந்தையில், வங்கிகள் எவ்வாறு உங்களைக் கவர்ச்சிகரமாகக் கவர்ந்திழுக்க, கடனட்டை விளம்பரங்களை மேற்கொள்ளுகின்றன என்பதை உணரவும். கடனட்டையின் உண்மை முகத்தை அறிய, இவை உங்களுக்கு உதவியாக இருக்கும்.  

செலவீனப் பழக்க வழக்கங்கள்  

கடனட்டை ஒன்றை மிகத் திறமையாக பயன்படுத்துமொருவருக்கும், கடனட்டை வழியாகவே கடனாளியாக மாறி, தனது வருமானத்தை முழுவதுமாக கடனட்டைக்கே செலுத்திக்கொண்டு உள்ளவர்களுக்கும் இருக்கக்கூடிய மிகப்பாரிய வேறுபாடே, அவர்களது இந்த செலவீன பழக்க வழக்கங்கள்தான்.   

நீங்கள் கடனட்டை ஒன்றுக்கு சொந்தக்காரர் ஆனபின்பு, கடனட்டை மூலமாகச் செய்யும் செலவீனங்களை முறையாகக் குறித்த காலப்பகுதிக்குள் மீளச்செலுத்துபவராக இருந்தால், கடனட்டையின் பாதகத் தன்மைகள் தொடர்பில் குறிப்பாக, வட்டிவீதங்கள் குறித்து நீங்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. நீங்கள் கடனட்டைத் தேர்வின்போது, வருடாந்த கட்டணங்கள் இல்லாத அல்லது குறைவானதும், கடனட்டை பணத்தை மீளச்செலுத்த அதிகநாட்கள் தரக்கூடியதுமான கடனட்டைகள் தொடர்பில் கவனம் செலுத்தினாலே போதுமானதாக இருக்கும்.  

ஆனால், கடனட்டைப் பயன்பாட்டு செலவீனங்களை முறையாகச் செலுத்த முடியாத ஒருவராக நீங்கள் இருப்பின் அல்லது உங்கள் ஒட்டுமொத்தச் செலவீனங்களுக்கும் கடனட்டையே பயன்படுத்துபவராக இருப்பின், கட்டாயம் கடனட்டை தொடர்பில் அனைத்தையும் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.

இதன்போது, கடனட்டையின் கடன் எல்லை, வட்டி வீதம், கடனட்டை தொடர்பிலுள்ள சலுகைகள் என அனைத்தையுமே கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகிறது. இல்லையெனில், கடனட்டையில் நீங்கள் மீதமாக வைக்கும் நிலுவைக்கான வட்டியே உங்களுக்கு மிகப்பெரும் தலைவலியாக அமைந்துவிடக்கூடும்.  

அதுபோல, கடனட்டைகளை ஏதேனும் அவசர தேவைகள் ஏற்படும்போது மட்டும் பயன்படுத்துவபராக இருப்பின், முன்னமே கூறியதுபோல, குறைந்த வட்டி மற்றும் குறைந்த கட்டணங்களைக் கொண்ட கடனட்டையைத் தெரிவு செய்வது போதுமானது.  

கடனட்டை வட்டி வீதங்கள்  

கடனட்டைக்கான வட்டிவீதங்கள் வருடாந்த வட்டிவீதத்தின் அடிப்படையில்தான் கணிப்பிடப்படுகின்றன. சில கடனட்டை வழங்குநர்கள் நிலையான வட்டிவீதங்களையும் சில வழங்குநர்கள் நெகிழ்வான வட்டிவீதங்களையும் அறவிடும் முறையைக் கொண்டிருப்பார்கள். இதுதொடர்பில்தான் மிக அதீத அவதானம் தேவையாக இருக்கும். 

கடனட்டைக்கு அறவிடப்படும் வருடாந்த வட்டி வீதங்கள் நிலையானதாகவுள்ளபோது, மாதாந்தம் நாம் கடனட்டையில் கொண்டுள்ள நிலுவைக்கான வட்டிவீதத்தை இலகுவாகக் கணிப்பிட்டுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். 

ஆனால், நெகிழ்வான வட்டிவீதம் அமைகின்றபோது, எதை அடிப்படையாகக்கொண்டு வட்டிவீதங்கள் கணிப்பிடப்படுகின்றது என்பது தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும். இல்லையெனில், நீங்கள் கடனட்டையில் மேற்கொண்ட செலவீனத்தொகையைப் பார்க்கிலும், மிக அதிகமாகச் செலவிட வேண்டிவரும்.  

கடன் எல்லை  

இது கடனட்டை வழங்குநர் ஒருவரினால் உங்களுக்குச் செலவு செய்யவென வழங்கப்படும் அதிஉச்சமான கடனின் அளவாகும். இந்தக்கடன் எல்லை உங்களது வருமானம், கல்வித்தகமை போன்ற பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. 

பெரும்பாலும் கடன் வழங்குநர்கள் வழங்கும் கடன் எல்லையானது, உங்கள் வருமானத்திலும் அதிகமானதாகவே இருக்கும். வருடாந்தம் உங்களது செயல்பாடுகளுக்கு அமைவாக, உங்களுக்கு அறிவிக்காமலேயே அந்தக் கடன் எல்லைகளை அவர்கள் உயர்த்தவும் கூடும்.

எனவே, இது தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டியது அவசியமாகும். உங்கள் வருமானத்திலும் பார்க்க அதிக கடன் எல்லை இருக்கிறதுதானே என்கிற எண்ணத்தில் செலவுகளை மேற்கொள்ளப் பழகுவீர்களேயானால், அது உங்களை நிரந்தர கடனாளியாக்கிவிடும். எனவே, உங்களது கடனட்டை எல்லையை உங்களுக்கு ஏற்றால்போல தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதுபோல, கடனட்டை வாயிலாக, நீங்கள் மேற்கொள்ளும் செலவீனங்கள் தொடர்பிலும் அவதானமாக இருங்கள்.  

தண்டப்பணம் மற்றும் கட்டணங்கள்  

கடனட்டை வழங்குநர்கள் குறைந்த வட்டிவீதமுள்ள கடனட்டைகள் என அறிவிப்புகளைச் செய்துவிட்டு, வெவ்வேறு வட்டிக்கட்டணங்களை விதித்து, அதனூடாகத் தங்களது வருமானத்தைப் பெற்றுக்கொள்ளுபவர்களாக இருப்பார்கள். எனவே, இது தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும். 

சாதரணமாக, கடனட்டை ஒன்றுக்கு வருடாந்த அங்கத்துவக் கட்டணம் மற்றும் நிலுவையைக் குறிப்பிட்ட காலத்தில் செலுத்தாதவிடத்து, நிதிக் கட்டணங்கள் அறவிடப்படும். கூடவே, ஏதேனும் சர்வதேசக் கொடுக்கல்  வாங்கல்கள் செய்திருப்பின், அதற்கான அரச வரிகளை உள்ளடக்கிய கட்டணமும் அறவிடப்படக்கூடும். 

இதுதவிர்த்து, வேறு ஏதேனும் கட்டணங்கள் அறவிடப்படுவதாக இருப்பின், அதுதொடர்பில் அவதானமாக இருக்கவேண்டியது அவசியமாகும்.  

பெரும்பாலான கடனட்டை வழங்குநர்கள், நீங்கள் கடனட்டையூடாக திட்டமிடும் சில கடன்களுக்கு 0% வட்டிவீதமென விளம்பரப்படுத்துவார்கள். ஆனால், அதில் மறைமுகமாக ஒரு கட்டணத்தை உட்சேர்த்து, கடனட்டை வழங்குநர் தனது வட்டிவீதத்தை உங்களிடமிருந்தே உங்களுக்கு தெரியாமல் வசூலித்து விடுவார். அந்தக் கட்டணத்தை கையாளல் கட்டணம் (Handling Charges) எனக் குறிப்பிடுவார்கள். எனவே, இவை தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும்.  

கடனட்டை நிலுவை  

கடனட்டையில் மாதம் தோறும் சிறியதாகவோ, பெரியதாகவோ நிலுவையை கொண்டிருப்பதில் தவறில்லை. ஆனால், அந்த நிலுவைக்கு மாதம்தோறும் என்ன நடக்கிறது? அதற்கான நிதிக் கட்டணங்கள் எவ்வாறு அறவிடப்படுகிறது என அறிந்திருப்பது அவசியமாகும். 

பெரும்பாலும், சராசரி தின நிலுவையின் பிரகாரமே அறவிடப்படுவதாக இருக்கும். அதாவது, ஒவ்வொரு நாளுக்குமான நிலுவை கூட்டப்பட்டு, அவை உங்கள் கடனட்டை கூற்றுக்கான நாட்களினால் வகுக்கப்பட்டு அதற்கு ஒரு நிச்சயிக்கப்பட்ட சதவிகித அடிப்படையில் இந்தக் கட்டணங்கள் அறவிடப்படும். 

எனவே, நீங்கள் வங்கிக்கூற்று வரும் நாளுக்கு அண்மையாகச் செய்த செலவீனங்களுக்கு உள்ள கட்டணத்துக்கும் மாத ஆரம்பத்தில் செய்த செலவீனம் நிலுவையாகவுள்ளபோது அறவிடப்படும் கட்டணத்துக்கும் நிறையவே வேறுபாடு இருக்கும். 

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் பிரகாரம், இலங்கையிலுள்ள 80%மான மக்கள் தமது கொடுக்கல் வாங்கல் செயல்பாடுகளுக்காக கடனட்டை அல்லது வரவட்டையைப் பயன்படுத்துகிறார்கள். மத்திய வங்கியின் அண்மைக்காலத் தரவுகளின் பிரகாரம், 17,093,239 பேர் வரவட்டைகளைப் பயன்படுத்துவதுடன், 1,355,704 பேர் கடனட்டைகளைப் பயன்படுத்துபவர்களாக உள்ளார்கள். 

 இவ் இலத்திரனியல் அட்டைகளின் பயன்பாட்டின் பிரகாரம், 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் இறுதிவரை, வங்கிகளிடம் மக்கள் பெற்றுள்ள ஒட்டுமொத்தக் கடன்தொகையின் அளவு, 77.7 பில்லியனாக உள்ளது. இது ஒட்டுமொத்தச் சனத்தொகையில் இருபது பேருக்கு ஒருவர் கடனட்டையைக் கொண்டிருப்பதைக் குறிப்பதுடன், சராசரியாக ஒரு கடனட்டையைக் கொண்டிருப்பவரின் கடனளவு 581,540 ரூபாயாக இருக்கலாம் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரது மீளச்செலுத்தும் இயலுமை அடிப்படையில், கடன் நிலுவை அளவு மாறுபடக்கூடியதாக உள்ளநிலையில், சிலரது கடன் எல்லையின் அளவு மாதம்தோறும் எப்படியானதாக இருக்கும் என்பதை நீங்களே கணிப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.  

எனவே, கடனட்டையைப் பயன்படுத்த விரும்புவர்களும் சரி, கடனட்டை பயன்படுத்தி கொண்டிருப்பவர்களும் சரி, உங்கள் கடனட்டைப் பயன்பாட்டில் சரியான முடிவை எடுப்பவர்களாக இருக்க வேண்டும். இல்லையெனில், அதன்மூலமாக ஏற்படக்கூடிய மிக அதீதமான பாதக விளைவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .