2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

காவுகொள்ளும் கடனட்டையில் ஒழிந்திருக்கும் நன்மைகள்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2019 மார்ச் 26 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும், பணம் இருக்கிறது. எவ்வளவுதான் கையிருப்பில் பணமிருந்தாலும், போதாதென்ற நினைப்புத்தான் நம் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக இருக்கும்.

இந்த எண்ணத்தையும் நினைப்பையும், ஒரு வியாபாரத்துக்கு அடித்தளமிட முடியுமெனின், அது கடனட்டை வியாபாரமாகத்தான் இருக்கும். ஆரம்ப காலங்களில், நம்மிடமுள்ள பணத்தின் அளவுக்கேற்ப, நமது செலவுகளை மட்டுப்படுத்திக் கொண்டோம். சில காலங்களின் பின்பு, சேமிப்பின் வாயிலாக நமது மேலதிகத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள ஆரம்பித்தோம்.

இப்போது, சேமித்து நமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவதை விடவும், இந்த அவசரவுலகில், கடனுக்கு பொருள்களையோ அல்லது சேவையையோ பெற்றுக்கொண்டு, அந்தக் கடனை நமது சேமிப்பின் துணைகொண்டு அடைத்துக்கொண்டிருக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம். இதன் இறுதிநிலைதான், நம்மிடையே கடனட்டைகளை பிரபலபடுத்தியிருக்கிறது.  

இலங்கை மத்திய வங்கித் தரவுகளின் பிரகாரம், இலங்கையிலுள்ள 80 சதவீதமான மக்கள், தமது கொடுக்கல் - வாங்கல் செயற்பாடுகளுக்காக, கடனட்டை அல்லது வரவட்டையைப் பயன்படுத்துகிறார்கள். மத்திய வங்கியின் அண்மைக்காலத் தரவுகளின் பிரகாரம், 17,093,239 பேர், வரவட்டைகளைப் பயன்படுத்துவதுடன், 1,355,704 பேர், கடனட்டைகளைப் பயன்படுத்துபவர்களாக உள்ளனர்.ஒட்டுமொத்தமாகப் பார்க்கின், சுமார் 18.4 மில்லியன் மக்கள், ஏதோவொருவகையில், பணமில்லாக் கொடுக்கல் - வாங்கல் செயற்பாடுகளுக்கு, தங்களைப் பழக்கபடுத்திக்கொண்டுள்ளார்கள்.

இந்த இலத்திரனியல் அட்டைகளின் பயன்பாட்டின் பிரகாரம், 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் இறுதிவரை, வங்கிகளிடம் மக்கள் பெற்றுள்ள ஒட்டுமொத்தக் கடன்தொகையின் அளவு, 77.7 பில்லியனாக உள்ளது. இது, ஒட்டுமொத்தச் சனத்தொகையில், இருபது பேருக்கு ஒருவர் கடனட்டையைக் கொண்டிருப்பதைக் குறிப்பதுடன், சராசரியாக ஒரு கடனட்டையைக் கொண்டிருப்பவரின் கடனளவு, 581,540 ரூபாயாக இருக்கலாமெனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரதும் மீளச்செலுத்தும் இயலுமை அடிப்படையில், கடன் நிலுவை அளவு மாறுபடக்கூடியதாக உள்ளநிலையில், சிலரது கடன் எல்லையின் அளவு, மாதந்தோறும் எப்படியானதாக இருக்கும் என்பதனை, நீங்களே கணிப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.  

உண்மையில், கடனட்டைப் பயன்பாடானது, பல்வேறு வகையில் நெருக்கடிகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் பயன்பாட்டை, சரியாக உணர்ந்து பயன்படுத்திக் கொண்டால், அதுவும் முன்னேற்றமடைந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக நமக்குக் கிடைத்த வரப்பிரசாதமே! எனவே, பல்வேறு தரப்பினரால் மோசமாக வகைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கடனட்டைகள் மூலம், நாம் அடைந்துகொள்ளக்கூடிய நலன்களையும் அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கக்கூடிய வணிக மூலோபாயங்களையும் பார்க்கலாம்.  

0% கடன் தவணைக் கொடுப்பனவு முறை 

கடனட்டைகள் மூலமாகக் கிடைக்கப்பெறும் மிக அதியுச்சமான நன்மைகளில், இதுவே முதன்மையானது. இலங்கையின் கடனட்டைகளை வழங்கும் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களுடன் இணைந்து இந்தச் சேவையைத் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன.

இதன் மூலமாக, குறித்தவொரு பொருளை, எந்தவித மேலதிகக் கட்டணமுமின்றி அல்லது ஒப்பீட்டளவில், மிகக் குறைவான மேலதிகக் கட்டணத்தில் பெற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக, தொலைகாட்சி ஒன்றையோ அல்லது வீட்டுக்குத் தேவையான  குளிர்சாதனப்பெட்டி ஒன்றையோ கொள்வனவு செய்ய வேண்டுமென்றால், நமது மாதாந்தச் சேமிப்பை அல்லது மாதாந்த வருமானத்தின் ஒரு பகுதியை, முழுமையாகச் செலவிட்டு, இந்தப் பொருள்களைக் கொள்வனவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், இந்தக் கடன் தவணைக் கொடுப்பனவுமுறை மூலமாக, வேறெந்த மேலதிகக் கட்டணமுமில்லாமல், உங்களுக்குத் தேவையான பொருள்களை, உங்கள் வருமானத்துக்கு சுமையற்ற வகையில் கொள்வனவு செய்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.

சாதாரணமாக நாம், கடனட்டைகளைப் பயன்படுத்தி ஏதேனுமொரு பொருளைக் கொள்வனவு செய்து, அதற்கான மாதாந்தக் கட்டணத்தை அல்லது கடனட்டையைப் பயன்படுத்திப் பணத்தை மீளச்செலுத்தத் தவறின், அதற்காக அதிக வட்டிவீதத்தில், அபராதத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, கடனட்டை வழங்கும் நிறுவனத்தால், இப்படியான சலுகைகள் வழங்கப்படும்போது, இதனை நாம், நமக்கு சாதகமாக்க முடியும்.

இதன்மூலமாக, மிகப்பெரும் செலவீனங்களை, மாதாந்தம் செலுத்தக்கூடிய Easy Monthly Installment (EMI) முறையாக மாற்றிக்கொள்ள முடியும். இவ்வாறு நீங்கள் மாதாந்தத் தவணைக் கட்டணமாக மாற்றிக்கொண்ட பின்பு, மாதந்தோறும், தவணைத் திகதி பிந்தாமல், பணத்தைச் செலுத்த வேண்டியது அவசியமாகும். இல்லையெனில், மீளவும் கடனட்டையின் மீளாக்கடன் பொறிக்குள் சிக்கிக்கொள்வீர்கள்.  

பண முற்பண வசதி 

கடனட்டைகளிலிருந்து உங்கள் அவசரத் தேவைகளுக்கு, ATM வாயிலாக பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமென்பதனை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? ஆம். உங்கள் கடனட்டையைப் பயன்படுத்தி, உங்கள் கடனட்டை அளவின் 50 சதவீதத்தை, அவசரத் தேவைகளின் போது பணமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கான சேவை வரி மற்றும் வட்டி வீதம் ஆகியவை அறவிடப்படுகின்ற போதும், அவை, கடனட்டையில் செலவீனங்களைச் செய்கின்றபோது அறவிடப்படும் வரி மட்டும் வட்டி வீதங்களைப் பார்க்கிலும் குறைவானதாகும். எனவே, கடனட்டைகளை வீணாகப் பயன்படுத்தி, தேவையற்ற கடன் சுமையை ஏற்படுத்திக்கொள்வதை விட, இந்த வகையில் கடனட்டையை வினைத்திறனாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.  

பண ஊக்குவிப்புகள் (Cashback rew  ards)

தற்போதைய நிலையில், பல்வேறு கடனட்டை வழங்கும் நிறுவனங்கள், புதிதாக வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக வழங்கிவரும் சலுகையாக, இந்தப் பண ஊக்குவிப்பு முறை அமைந்துள்ளது. இந்தியாவில், ஏற்கெனவே பிரபலமான இந்தத் திட்டமுறையானது, தற்போது இலங்கையிலும் பிரபலமாகி வருகின்றது.

குறிப்பாக, நீங்கள் ஏதேனுமொரு கடையில் பொருள்களை வாங்கும்போது, அந்த பொருளின் மொத்தப் பெறுமதியில், குறித்தவொரு சதவீதம் உடனடியாகவே மீளவும் உங்கள் கணக்கில் வைப்பிலிடப்படும்.

இதன்மூலமாக, குறித்த பொருளை நீங்கள் குறைவான விலைக்கு வாங்கமுடிவதுடன், உங்கள் கடனட்டையின் செலவீனங்களையும் குறைக்க முடியும். இந்த ஊக்குவிப்பு முறையானது, மேலே குறிப்பிட்ட வசதிகளுடன் ஒப்பிடுகையில், குறைவான பெறுபேற்றைக் கொண்டிருந்தாலும், இதன் மூலமாகவும் நீங்கள் உங்கள் பணத்தைச் சேமித்துக்கொள்ளக்கூடிய வசதிவாய்ப்புகள் உண்டு.  

இலவசப் பயணக் காப்புறுதி

நீங்கள், வெளிநாடுகளுக்கு பயணப்படுகின்றபோது, உங்கள் விசாவைப் பெற்றுக்கொள்ள அல்லது தற்பாதுகாப்புக்காக பயணக் காப்புறுதிகளைப் பெற்றுக்கொள்ள அவசியமாகிறது. இதற்காக, பயண முகவர்களை அணுகும்போது, பெருந்தொகையைச் செலவீனமாகச் செலுத்த வேண்டிவரும். ஆனால், நீங்கள் கடனட்டையொன்றைக் கொண்டிருக்கும்போது, முதலில் உங்கள் கடனட்டை வழங்கும் நிறுவனத்திடம், உங்கள் இலவசப் பயணக் காப்புறுதி தொடர்பில் விசாரித்துக் கொள்ளுங்கள்.

தற்போது, பெரும்பாலான கடனட்டை நிறுவனங்கள், தமது வாடிக்கையாளர்களுக்கு கடனட்டை மூலமாக இலவச வெளிநாட்டுக் காப்புறுதித் திட்டங்களை வழங்கி வருகின்றன. இதன்போது, உங்கள் விமானச்சீட்டை குறித்த கடனட்டையைப் பயன்டுத்திக் கொள்வனவு செய்தாலே போதுமானதாகும். இதன்மூலமாக,வெளிநாட்டுப் பயணத்தின்போது, நீங்கள் மிகப்பெரும் தொகையைச் சேமித்துக்கொள்ளக் கூடியதாக அமையும்.  

மேற்கூறியவை தவிர, குறித்தவொரு கடனட்டையில் நீங்கள் அதிக கடன்சுமையைக் கொண்டிருக்கின்றபொது, அதனை, மற்றுமொரு கடனட்டைக்கு தவணைக் கட்டணமுறை அடிப்படையில் மாற்றிக்கொள்ளும் வசதிகளும் உண்டு. இதன்போது நீங்கள், கடனட்டைக்குச் செலுத்தும் அதியுயர் வட்டிவீதத்திலும் பார்க்க மிகக் குறைவான வட்டி வீதத்தையே செலுத்த வேண்டிவரும்.

கடனட்டை என்கிற வார்த்தையைக் கேட்டதுமே, நம்மில் பலருக்கு கடன், வட்டிவீதம், கடன்சுமை ஆகியவைதான் கண்ணெதிரே வந்துபோகும். ஆனால், இவற்றுக்கு அப்பால், கடனட்டைகளை சரிவரப் பயன்படுத்துவதால் பெற்றுக்கொள்ளக்கூடிய நன்மைகள், நமது கண்ணுக்குத் தெரிவதில்லை. “அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு” என்பது போல, கடனட்டையின் பயன்பாடும் அளவுக்கு மிஞ்சினால் நம் கழுத்தையிறுக்கும் கடன்காரன்தான். எனவே, எல்லாவற்றையும் அளவுடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .