2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வணிக வெற்றியாளர்களுக்கு அவசியமான பொதுத்திறன்கள்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2018 ஜனவரி 22 , மு.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நிலையில் இலங்கையில் வெற்றிகரமான முயற்சியாண்மை வணிகமும், முயற்சியாண்மை வளர்ச்சியும் இலங்கை வணிகத்தை மற்றுமொரு பரிணாமத்துக்குக் கொண்டு சென்றுள்ளது என்றே சொல்லவேண்டும்.   

இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளைப் பொறுத்தவரையில், முயற்சியாளர்களின் வளர்ச்சியென்பது மிகமிக அவசியமானதொன்றாகும். 

இன்றைய நிலையில், பல்தேசிய நிறுவனங்கள் மற்றும் அரச வெற்றிடங்களால் உருவாக்க முடியாத புதிய தொழிற்துறை வணிகத்தையும் வேலைவாய்ப்பையும் இத்தகைய புதிய முயற்சியாளர்கள் மற்றும் அவர்களது வணிகத்தினாலேயே உருவாக்க முடிகின்றது. இதன்மூலம், வேலையின்மை என்கிற மிகமோசமான நிலைமைக்கும் தீர்வு காணக்கூடியதாக இருக்கும்.  

இலங்கையில் உருவாகும் அல்லது உருவாக்கப்படும் முயற்சியாளர்கள் சந்தைப் போட்டியில் தோல்வியடையாத வகையில், தமது திறன்களை வளர்த்துகொள்ளுவது அவசியமாகும். அவ்வாறு அவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள், அவர்களது தொழில்துறை உட்பட, பல்வேறு அடிப்படைக் காரணிகளால் வேறுபடுகின்றபோதிலும், கீழ்வரும் ஐந்து திறன்களும் ஒரு முயற்சியாளர் தன்னை வெற்றியாளராக நிலைநிறுத்திக் கொள்ளுவதில் முக்கிய இடத்தை வகிக்கும் பொதுத் திறன்களாக உள்ளன.  
அபாய நேர்வைக் கணக்கிட்டு செயற்படல் (Takes calculated risks)  

ஒரு முயற்சியாளருக்கு இருக்கவேண்டிய மிக அடிப்படையான தகுதியும், ஏனையவர்களுக்கும் இடையிலான வேறுபாடு, துணிந்து அபாய நேர்வை எதிர்கொள்வதாகும். சந்தையில் இல்லாத, சந்தைக்குத் தேவையான, புதிய முயற்சிகளைத் துணிந்து செயல்படுத்தக் கூடிய தீர்மானங்கள்தான் என்றுமே முயற்சியாளர்களை வெற்றியாளர்களாக மாற்றியமைக்கும்.  

உதாரணமாக, 2011ஆம் ஆண்டுவரை இலங்கையின் மிகப்பெரும் வர்த்தகத்துறையானது, இணைய பின்னணியைப் பெரிதும் கொண்டிருக்கவில்லை. பெரும்பாலும் சர்வதேச வலைப்பின்னலான E-Bay போன்ற தளங்களையும், இதர சில உள்நாட்டுத் தளங்களுமே ஒட்டுமொத்த வர்த்தக சந்தையின் சிறுபகுதியை இணையம் மூலமாக ஆக்கிரமித்திருந்தது.

குறித்த சமயத்தில், அறிமுகபடுத்தப்பட்ட Anything.lk (தற்போது WOW.lk) இணையத்தளமானது தனிநபர் ஒருவர் சந்தைப் பெறுதியிலும் பார்க்கக் குறைவான விலையில் பொருட்களை வீட்டிலிருந்தே கொள்வனவு செய்யக்கூடிய புதிய முறையை அறிமுகப்படுத்தியிருந்தது. இது, துணிகரமாக மக்களை, குறித்த இணைய கொள்வனவு முறைக்கு பழக்கப்படுத்துகின்ற ஓர் அபாயநேர்வு முயற்சியாகும். ஆனால், அதை நிகழ்த்திக் காட்ட முடியும் என்பதை ஏனைய போட்டியாளர்களிருந்து வேறுபடுத்திக் காட்டியதன் மூலமே, குறித்த வணிகம் வெற்றிகரமாக இன்றும் இயங்கிக் கொண்டுள்ளது.   

இது ஒரு முயற்சியாளர், சந்தையில் தனது அபாய நேர்வுகளைப் பொருத்தமான வகையில் கணக்கிட்டு, அதற்கு ஏற்ப, தனது முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதன் மூலமாக, சந்தையில் வெற்றியாளராகச் செயல்பட முடியும் என்பதற்கான சிறந்த எடுத்து காட்டாகும்.  

தோல்விகளிலிருந்து கற்றுகொள்ளுதல் (Learns from failure)  

மெய்யுலகில் எவரும், எதையுமே 100% சரியாகச் செய்வதில்லை. இது யாருக்குச் சரியாகப் பொருந்துகிறதோ இல்லையோ, வணிக உலகில் உள்ளவர்களுக்கும் முயற்சியாளர்களுக்கும் சரியாகப் பொருந்தும்.   

முயற்சிகள் எடுக்கின்றபோது, எல்லாமே தோல்விகளாகவே இருக்கக்கூடும். ஆனால், அதைத் தோல்விகளாக மட்டுமே பார்க்காமல், அதிலிருந்து எதைக் கற்றுகொள்ள முடியும் எனப் பார்க்கின்ற மனப்பான்மையே மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யும்போது, வெற்றிக்கு அழைத்து செல்லும்.  

வணிகங்கள் எப்போதுமே ஒரு சதுரங்க விளையாட்டுக்கு ஒப்பானதாகவே அமைந்திருக்கும். தவறுகளிலிருந்து மிகவிரைவாகக் கற்றுக்கொண்டு, மீளவும் ஆரம்பிக்காவிட்டால், சதுரங்கத்தில் எப்படி தோற்றுபோவோமோ, அதுபோலதான் வணிக முயற்சிகளும் அமைந்திருக்கும். வணிகங்களைப் பொறுத்தவரை, எந்தவொரு முயற்சியுமே முதல்தடவையில் வெற்றி பெறுவதில்லை. எனவே, தோல்வியைச் சந்திக்கும்போது, பயத்தை வளர்த்து கொள்வதைவிட, அதிலிருந்து கற்றுக்கொள்ள ஆரம்பிப்பதே மேல்.  

கனவுகளைப் பெரிதாக்க காணுதல் (Sees the bigger picture)  

ஒரு முயற்சியாளரின் எண்ணங்களும் இலக்குகளும் நடைமுறைக்குச் சாத்தியமானதாக இருக்கவேண்டும். ஆனால், அதனுடைய அர்த்தம், தனது இயலுமைக்குள் மாத்திரம், முயற்சியாளர்கள் தங்களை மட்டுப்படுத்திக்கொண்டு வணிகக் கனவை அல்லது இலட்சியத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்பது அல்ல. மாறாக, வணிக வெற்றியும் அவ்வெற்றிகள் தூரநோக்கில் எவ்வாறான பலாபலனை ஏற்படுத்தித் தரபோகின்றன என்பதையும் கொண்டதாக இருக்கவேண்டும்.  

இன்றைய நிலையில், இலங்கையில் மிகப்பெரும் வெற்றிகரமான வணிகங்களாக உருவெடுத்து நிற்கும் எந்தவொரு வணிகத்தினதும் ஆரம்ப நாட்களை எண்ணிப்பாருங்கள். அவை, ஆரம்பித்த புள்ளிக்கும், தற்போதைய நிலைக்குமிடையில் இமாலய இடைவெளி இருக்கிறது. இது எப்படிச் சாத்தியமானது? ஒவ்வொரு வணிகத்தின் பின்னாலும், அதன் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னரும், அடுத்த இலக்கை நோக்கி, நம்மால் பயணிக்க முடியும் என நம்பிக்கையூட்டும் முயற்சியாளர்களாலேயே அது சாத்தியமானது.  

புத்திசாதுர்யமாக பொறுப்பைப் பகிர்தல்  

முயற்சியாளர்களின் மிகப்பெரிய பலவீனமே, அவர்களது கனவுக்கு, அவர்களே சகலவகையிலும் நிஜஉலகில் உருக்கொடுக்க வேண்டும் என நினைப்பதாகும். இது ஒவ்வொரு முயற்சியாளர்களுக்கும் பணிச்சுமையை அதிகரிப்பதுடன், ஓர் எல்லைக்கு அப்பால், தமது கனவுகளைப் புதுப்பித்துகொள்ள முடியாது போகவும் செய்கிறது. 

இது சந்தைப் போட்டிக்கு அமைவாக, முயற்சியாளர் தம்மைப் புதுப்பித்துகொள்ள முடியாமல், சந்தையை விட்டு, ஒரம்கட்டப்பட வேண்டிய நிலையை ஏற்படுத்தி விடுகிறது.  

எனவேதான், முயற்சியாளர்கள் தமது இலக்கை அடைந்துகொள்ளக் கூடியவகையில், அனைத்துச் செயல்பாடுகளையும் பொருத்தமான திறமையாளர்களை இனம்கண்டு, புத்திசாதுர்யமாகப் பகிர்ந்து அளிக்கவேண்டியது அவசியமாகிறது. இதன் மூலம், முயற்சியாளர் ஒருவருக்கு வணிகத்தை நிர்வகிக்க, மேலதிக நேரம் கிடைப்பதுடன், குறித்த வணிகத்தை, மேலும் அழுத்தமற்ற வகையில் விருத்தியடையச் செய்யவும் உதவுகிறது.  

இதன் காரணமாகத்தான், பெரும்பாலான வணிகங்களில், முயற்சியாளர்கள் அல்லது உரிமையாளர்கள் மூலோபாய முடிவுகளை எடுப்பவர்களாக இருக்க, நாளாந்தத் தீர்மானங்களை எடுப்பதற்குப் பொருத்தமான, திறனாளர்களை வைத்திருப்பார்கள். இது அவர்களது பணிச்சுமையைப் பெரிதும் குறைக்க உதவுகிறது.  

வினைதிறன் வாய்ந்த தொடர்பாடல் (Communicates effectively)  

முயற்சியாளர்களுக்கு இருக்கவேண்டிய மற்றுமொரு பிரதான தகுதிகளில் ஒன்று, தொடர்பாடல் ஆகும். எவருடனும், இலகுவாகத் தொடர்பாடலை ஏற்படுத்திகொள்ளக் கூடிய திறன் வாய்த்திருத்தல் இதன் அனுகூலமாகும்.   

தனியே, தனது எண்ணங்கள் சிந்தனைகளை மாத்திரம் ஏனையவர்கள் மீது திணிக்கின்ற ஒருவழி தொடர்பாடலாக இல்லாமல், ஏனையவர்களின் அறிவுரைகளையும் ஏற்றுக்கொண்டு, கலந்துரையாடல்கள் மூலம், தம்மை வளர்த்துக்கொள்ளக் கூடிய வினைதிறன் வாய்ந்த இருவழித் தொடர்பாடலாக அமைவதே சாலச்சிறந்தது ஆகும்.  

ஒரு முயற்சியாளர் தன்னை, ஒரு முயற்சியாளராக வெளியுலகுக்குக் காட்டிகொள்ள வெறுமனே, தனது திறமைகளை மட்டும் வெளிப்படுத்தினால் போதுமானதாக அமையாது. அத்துடன், அவர் சிறந்த தொடர்பாடல்வாதியாகவும் இருக்கவேண்டும். இல்லையெனில், எத்தகைய திறனுக்கும் சிறந்த அங்கிகாரம் கிடைக்கப்பெறாத நிலை ஏற்படும்.  

உதாரணமாக, போட்டிகள் நிறைந்த சந்தையில், மிகசிறந்த தொடர்பாடலை மேற்கொள்ளாதபோது, உண்மையான திறமையாளரைவிட, போட்டியாளர்களே வெளியுலகுக்கு அடையாளமாகத் தெரிவார்கள். இதற்கு  மிக முக்கிய காரணமே, தொடர்பாடல் முறைமையை வினைத்திறன் வாய்ந்த முறையில் பயன்படுத்தாமைதான் ஆகும். அதிலும், இன்றைய காலகட்டத்தில் எந்தவொரு வணிகமும் தனக்குரிய விளம்பரத் தொடர்பாடலை வாடிக்கையாளரைக் கவரக்கூடியவகையில் வழங்காதபோதே தோற்றுபோகத் தொடங்கிவிடுகின்றன. எனவேதான், ஒட்டுமொத்த முயற்சியாளர்களின் எண்ணங்களுக்கும் இறுதிப் பெறுபேற்றைப் பெற்றுதருவதாக இந்தத் தொடர்பாடல் முறைமை உள்ளது.  

மேற்கூறிய அனைத்துத் திறன்கள் மாத்திரமே ஒரு முயற்சியாளர்களை வெற்றியாளர்களாக அடையாளபடுத்துவதில்லை. மாறாக, இவை அனைத்துமே ஒவ்வொரு முயற்சியாளரும் வெற்றிக்கான பாதையில் பயணிக்கும்போது, தன்னகத்தே வளர்த்துகொள்ளவேண்டிய அல்லது கொண்டிருக்க வேண்டிய திறன்கள் ஆகும்.

நிஜ உலகில் ஒருவரைப்போல, இன்னுமொருவர் இருப்பதில்லை. ஒவ்வொருவருக்குமே, வெவ்வேறான திறமைகளும் திறன்களும் காணப்படும். ஆனால், வெற்றிபெற்ற எல்லா முயற்சியாளர்களையும் ஏறெடுத்துப்பார்க்கின், அனைவருக்கும் பொதுவான, அனைவர் இடத்திலுமே உள்ள திறன்களாக மேற்கூறியவை அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X