2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வணிகங்களின் தோல்விக்கு காரணம் என்ன ?

அனுதினன் சுதந்திரநாதன்   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆரம்பிக்கப்படும் எந்தவொரு வணிகமுமே, தோல்வியடைய வேண்டுமென்ற நிலைப்பாட்டிலோ அல்லது மிக விரைவாக இலாபத்தைப் பெற்றுக்கொண்டு, வணிகத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்கிற எண்ணத்திலோ ஆரம்பிக்கப்படுவதில்லை. மாறாக, அனைத்து வணிகங்களுமே சந்தையில் தங்களுக்கான அடையாளத்தை  ஏற்படுத்திக்கொண்டு, தமது தரத்தின் பெயரால் (Brand Name) பலகாலம் அறியப்படும் வணிகமாகின்ற நிலையில், வணிகத்தைக் கொண்டுநடத்தும் திட்டத்துடனேயே அவற்றை ஆரம்பிக்கின்றன.  

ஆனால், போட்டித்தன்மைமிக்க வணிகச்சூழலில் வெற்றிபெறுகின்ற வணிகங்களை, விரல்விட்டு எண்ணக்கூடியதாக இருப்பது வருத்தத்துக்குரியதாகவே இருக்கிறது. பெரும்பாலான வணிக முயற்சியாளர்களும் வணிக உரிமையாளர்களும், தமது வணிகத்தின் தோல்விக்குப் பெரும்பாலும் தாங்கள்தான் காரணம் என்பதை உணருவதில்லை. மாறாக, வணிகங்களின் தோல்விக்கு, பொருளாதாரச் சூழ்நிலை, வங்கிகளின் செயற்பால்பாடுகளென, முக்கியமற்ற காரணங்களை அடுக்கிக்கிக்கொண்டு தங்களை சீர்த்தூக்கிப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள். விளைவு, மற்றுமொரு வணிகத்தை ஆரம்பிக்கும்போதும், இந்தப் பரிதாபநிலை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

எனவே, வணிகமொன்றைக் கொண்டு நடத்திய அனுபவமுள்ளவர்களும் சரி, வணிகமொன்றைக் கொண்டுநடத்த விருப்பமுள்ளவர்களும் சரி, வணிகமொன்றின் தோல்விக்கானதும் வெற்றிக்கானதுான அடிப்படைக் காரணங்களை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

சந்தை ஆய்வை முழுமைப்படுத்தாமை

வணிகத்தை ஆரம்பிக்க விரும்புகின்ற எந்தவொரு வணிக முயற்சியாளருமே,  தமது வணிகத் திட்டத்துக்கு வழங்கும் முன்னுரிமையின் பாதியளவைக்கூட, சந்தை ஆய்வுக்கு வழங்குவதில்லை. பெரும்பாலான வணிக முயற்சியாளர்கள், தாங்கள் மிகக் கஸ்டப்பட்டு உருவாக்கிய வணிக முயற்சியை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்கிற ஆதீத நம்பிக்கையில், தமது வணிகத்தை மக்களிடத்தே அறிமுகம் செய்துத் தோற்றுப் போய்விடுகிறார்கள்.

உண்மையில், வணிக முயற்சியாளர்கள் வழங்குகின்ற அனைத்தையுமே, மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக, அவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கான தீர்வாகவுள்ள வணிகங்களை மாத்திரமே ஏற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். இதனால்தான், மிகப்பெரும் பிரபலமான, வெற்றியடைந்த வணிக முயற்சியாளர்கள்கூட, “சந்தை ஆய்வின் மூலமாக மக்களின் பிரச்சினைகளைக் கண்டறியுங்கள், பின்னர் அதற்கான தீர்வைச் சிந்தியுங்கள், அதனை வணிகமாக்குவதைப் பிற்பாடாகப் பார்த்துக்கொள்ளலாம் எனச் சொல்கிறார்கள்.

தற்போதைய நிலையில், வணிகங்களை முன்னெடுக்கவும் அவற்றைக் கட்டியமைக்கவும், சந்தை ஆய்வுகளும் அதனைச் சார்ந்த தரவுகளும், மிக முக்கியமானதாக அமைகின்றன. ஆனாலும், இதன் முக்கியத்துவத்தைப் பெரும்பாலான வணிக உரிமையாளர்கள் இன்னமும் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை என்பதே வருத்தத்துக்குரியதாக இருக்கிறது.

வணிகத்திலான ஈடுபாடு 

ஒரு வணிகத்தை ஆரம்பிக்கும் அந்த வணிகத்தின் உரிமையாளரிடம், அதற்கான ஈடுபாடு இல்லாமலா வணிகத்தை ஆரம்பிக்கிறார்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனாலும், வணிகத்தை ஆரம்பிக்கும்போது இருக்கின்ற ஈடுபாடு, அதைக் கொண்டு நடத்துவதில் தொடர்ச்சியாக இருக்கிறதா என்பதே மிகப்பெரும் கேள்வியாக இருக்கிறது. பெரும்பாலான வணிக உரிமையாளர்கள், தமது வணிகத்தை ஆரம்பிக்கும்போது வழங்குகின்ற ஈடுபாட்டை, வணிகத்தில் ஏதேனும் தொய்வுநிலை ஏற்படுகின்றபோது வழங்க முன்வருவதில்லை. அதேபோல, இலங்கை போன்ற போட்டித்தன்மைமிக்க நாடொன்றின் வணிகச் சூழலில், மேற்கத்திய நாடுகளிலும் பார்க்க அதீத ஈடுபாட்டை, வணிக உரிமையாளர்கள் வழங்கவேண்டியது அவசியமாகும். இதன்மூலமாகவே, வணிகத்தின் நீட்சியையும் அதுசார் வெற்றியையும் உறுதி செய்துகொள்ள முடியும்.

அதேபோல, வணிகங்களானவை இன்று ஆரம்பித்து நாளையே வெற்றியை வழங்குவதாக இருக்காது. அதற்கான காலமும் நேரமும் அமைய வேண்டும். எனவே, அந்தப் பொறுமை, வணிக உரிமையாளர்களிடம் இருக்கவேண்டியது அவசியமாகிறது. இந்தப் பொறுமையின்மை நிலையானது, வணிகத்தைப் பாதிப்பதாக அமையும். 

நிதியியல், முயற்சியாண்மைக் குறைபாடு 

 இலங்கையின் பெரும்பாலான வணிகங்களின் தோல்விக்கு, மேற்கூறிய நிதியியல் திறன் தொடர்பான குறைபாடே மிக முக்கியமாகிறது. காரணம், இலங்கையில் மிக மோசமாகவுள்ள திறன்களில், இந்த நிதியியல் திறனும் ஒன்றாகும். என்னதான் வணிகத்தைத் திட்டமிடவும் அதனைக் கொண்டு நடத்தும் திறனை உரிமையாளர்கள் கொண்டிருந்தாலும், தமது முதலீடுகளை மிகத் திறமையாகக் கையாண்டு, அவற்றைச் சிறப்பாகக் கொண்டு நடத்துவதில் தடுமாற்றத்தைக் கொண்டிருக்கிறார்கள். இது, நிதியியல் திறன் குறைப்பாட்டை வெளிப்படுத்துவதாக உள்ளது. 

குறிப்பாக, வணிகமொன்றைக் கொண்டு நடத்த தொழிற்பாட்டுக்கு, மூலதனம் அவசியமாகும். இந்த மூலதனம்தான், வணிகத்தின் நாளாந்தச் செயற்பாடுகளுக்கு அடிப்படையானதாகும். வணிகத்தின் வெற்றிக்கு இந்த மூலதனம் மிக இன்றியமையாததாகும். இந்த மூலதனம்தான், வணிகத்தைக் கொண்டு நடத்தப் பெரிதும் உதவியாக அமையும். ஆனால், பெரும்பாலான வணிக உரிமையாளர்கள், தமது வணிகத்தின் செயற்பாடுகளுக்காக, தனியே இந்தத் தொழிற்பாட்டு மூலதனத்தைக் கொண்டிருப்பதில்லை. இதன்காரணமாக, வணிகங்கள் தொடர்ச்சியாகச் செயற்படுவதில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகின்றன. பெரும்பாலும், வணிக உரிமையாளர்கள் தமது இலாபத்தையே தொழிற்பாட்டு மூலதனமாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால், இலாபம் எப்போதும் பண வடிவில் நம்மிடத்திலிருப்பதில்லை என்ற உண்மையை உணராதவராக இருக்கிறார்கள். இதன் காரணமாக, பெரும்பாலான வணிகங்களை தொடர்ச்சியாக நடத்திச்செல்லப் போதுமான நிதியின்மை காரணமாகத் தோல்வியைச் சந்திக்கின்றன.

இதேபோல, முயற்சியாண்மைக் குறைபாடும் ஒருவிதத்தில் வணிகங்களைப் பாதிக்கின்றது. குறிப்பாக, வணிகத்தைத்  திட்டமிட்டு அதனைக் கொண்டுநடத்தும் வணிக முயற்சியாளர்களில் பெரும்பாலானவர்களுக்கு, தமது வணிகத்தை முதலீட்டாளர்கள் மத்தியில் சமர்ப்பிக்கும் திறன் மிகக் குறைவாகக் இருக்கின்றது. இதன் விளைவாக, தமது வணிகத்துக்குக் கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த முதலீட்டு வாய்ப்புகளைக்கூடத் தவறவிட்டு, வணிகத் தோல்வியைச் சந்திக்க நேரிடுகிறது.

முதலீட்டுப் பற்றாக்குறை 

இலங்கையின் தொழில் முயற்சிகளுக்கு உள்ள மிகப்பெரும் தடைக்கல்லாக, முதலீடுகள் அமைந்துள்ளன. முயற்சியாளர்கள், மக்களுக்குத் தேவையான வணிகத்தை முன்னெடுக்கத் தயாராகவுள்ள நிலையிலும், பொருத்தமான முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை இலங்கையில் காணப்படுகிறது.

பெரும்பாலான முயற்சியாளர்கள், நிதியியல் ரீதியான இயலுமையைக் கொண்டிராத நிலையில், முதலீடு செய்ய வருகின்ற முதலீட்டாளர்களும், தமது முதலீட்டுக்கு அதிகமான வணிகப் பங்கை (Business Share) எதிர்பார்க்கிறார்கள். இதனால், பெரும்பாலான வணிக உரிமையாளர்கள், தமது வணிக உரிமையை இழக்க விரும்பாது, கடன் முதலீடுகளை நோக்கி நகர்கின்றார்கள். இதன்போது, சில வணிகங்கள் தம்மை நிலைநிறுத்திக்கொண்டு, கடன் பொறுப்புகளை மீளச்செலுத்தி முன்னேறிக்கொண்டிருப்பதுடன், பல வணிகங்கள், தமது கடன் பொறுப்புகளை மீளச் செலுத்த முடியாமல், தமது வணிகங்களை மூடிக்கொண்டிருக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த முதலீட்டாளர்களுக்கும் வணிகங்களுக்கும் இடையில் உருவாகியுள்ள இடைவெளியைக் குறைத்து, இந்த முதலீட்டுக் குறைப்பாட்டை நிவர்த்திக்க வேண்டியது அவசியமாகிறது.

மேற்கூறிய வணிகத் தோல்விக்கான காரணங்கள், அண்மைய காலத்தில் தொடக்கநிலை வணிகங்கள் தொடர்பில் SLASSCOM நடத்திய ஆய்வறிக்கையின் அடிப்படையில் பெறப்பட்ட தகவல்களாகும். தற்போதைய நிலையில், இலங்கையின் வணிகத்துறையில் வணிகங்கள் சந்திக்கும் மிகப்பிரதானமான தோல்விக்கு, இவையே காரணங்களாக அமைந்துள்ளன. எனவே, வணிக முயற்சியாளர்கள் இவற்றைக் கருத்திற்கொண்டு, தமது வணிகங்களை முன்னெடுத்துச் செல்வதானது, வர்த்தக ரீதியில் தங்களை நிலைநிறுத்தி, வணிகத்தை வெற்றிநிலைக்குக் கொண்டுசெல்ல உதவிபுரிவதாக அமையும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .