2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’கோமாளி கிங்ஸ்’; இன்று வெளியீடு

Editorial   / 2018 பெப்ரவரி 23 , மு.ப. 11:37 - 2     - {{hitsCtrl.values.hits}}

பலதசாப்த இடைவெளிக்குப் பின்னர், முழுக்க முழுக்க இலங்கைக் கலைஞர்களின் தயாரிப்பில் வெளிவரும் 'கோமாளிகிங்ஸ்' முழுநீளத் தமிழ்த் திரைப்படம், இன்று (23) முதல், நாடெங்கும் திரையிடப்பட்டு உள்ளது. வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தலைநகர் கொழும்பு உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில், இத்திரைப்படம் காண்ப்பிக்கப்பட உள்ளது.

இலங்கை உட்பட உலகெங்கும் பரந்து வாழும் சகல தமிழ் சினிமா ரசிகர்களுக்காக, சகலரும் குடும்பத்துடன் சென்றுப் பார்த்து இரசித்து மகிழக்கூடிய ஒரு பொழுதுபோக்கு சித்திரமாக 'கோமாளி கிங்ஸ்'தயாரிக்கப்பட்டுள்ளது.

நகைச்சுவை, காதல், அதிரடி, த்ரில், சஸ்பென்ஸ் என, படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை, பார்வையாளர்களை கதையோடும் காட்சிகளோடும் ஒன்றிக்க வைக்கும் வகையில், இத்திரைப்படத்தின் கதைக்கரு வடிவமைக்கப்பட்டுள்ளது.

'கோமாளிகிங்ஸ்'இன் வரவு, இலங்கைத் தமிழ்த் திரைப்படத் துறையின் புனர்ஜென்மம் என்றுகூட அழைக்கப்படலாம்.

'கோமாளி கிங்ஸ்' திரைப்படத்திலுள்ள இன்னுமொரு சிறப்பம்சம் யாதெனில், இலங்கையில் பயன்படுத்தப்படும் பல்வேறு தமிழ் மொழி வழக்குகளை, இத்திரைப்படத்தின் பாத்திரங்கள் பேசி நடிக்கின்றனர். இலங்கையின் தனித்துவமான தமிழ் மொழிப் பாவனைக்கு, திரைப்படம் முக்கிய இடத்தை வழங்கியுள்ளது.

இதனால், இலங்கையின் சகல தமிழ் பேசும் பார்வையாளர்களும் மெய்மறந்து, இரசித்து, இத்திரைப்படத்தோடு ஒன்றிப் போவார்கள் என்பதில் ஐயம் ஏதுமில்லை.

தரமான கதைக்கரு, சிறந்த நடிப்புத்திறமை, ரசிகர்கள் மனதில் நிற்கும் பாடல் வரிகளும் இசையும் மற்றும் மிக நேர்த்தியான நெறியாள்கையும், தயாரிப்பும் கலந்து, இலங்கை கலைஞர்களும், உலகத் தரத்திலான சினிமாவை, படைக்க வல்லவர்கள் தான் என்பதை இத்திரைப்படம் நிரூபித்துள்ளது.

'கோமாளி கிங்ஸ்'திரைப்படத்தின், கதை, திரைக்கதை நெறியாள்கையை என்பவற்றை, கிங் இரட்ணம் கையாண்டிருக்கின்றார். மேலும், இலங்கையின் மூத்த கலைஞர்களான கலாபூசனம் ராஜா கணேசன் மற்றும் புகழ்பெற்ற நடிகர்களான தர்ஷன் தர்மராஜ், நிரஞ்சனி சண்முகராஜா, கஜன் கணேசன் ஆகியோருடன், இயக்குனர் கிங் இரட்ணமும் ஒரு பிரதான பாத்திரத்தை ஏற்று, இத்திரைப்படத்தின் கதையோட்டத்துக்கு உயிரேற்றியுள்ளனர்.

'கோமாளி கிங்ஸ்' பல தயாரிப்பாளர்களை உள்ளடக்கிய ஒரு குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை, “Picture This” தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து Arokya International> M-Entertainment  மற்றும் Wine Creative Networks தயாரித்து வழங்குகின்றது.

இத்தயாரிப்புக் குழுவுக்கு, ஈஸ்வரன் பிரதர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கணேஷ் தெய்வநாயகமும் சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவரும் வழக்கறிஞருமான செல்வஸ்கந்தனும் தலைமை தாங்குகின்றனர்.

மற்றும் திருமதி. தாரணி ராஜசிங்கமும் இத்திரைப்படத்தின் ஒரு பிரதான தயாரிப்பாளராவார். இலங்கையின் புகழ்பெற்ற, சிரேஷ்ட அறிவிப்பாளராகிய பி.எச்.அப்துல் ஹமீட், இத்திரைப்படத் தயாரிப்புக்கான கௌரவ வழிநடத்துனராக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 2

  • T.Nimalamurthy Saturday, 24 February 2018 09:55 PM

    முதன் முதல் திரை விமர்சனம் கேட்கும் பாக்கியம் சக்தி FM வாயிலாகக் கிடைத்தது. கிருஷ்ணா அவர்களின் விமர்சனம் மனதிற்கு பாலை வார்த்தது. ஜெயஸ்ரீ அவர்களின் விமர்சனம் மனதிற்கு பாலாபிஷேகமே செய்தது Congratulations – to the entire CREW.

    Reply : 0       1

    T.Nimalamurthy Saturday, 24 February 2018 10:02 PM

    நிரூபிப்போம் ஈழத்துக் கலைஞர்கள் எவருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை

    Reply : 0       1


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .