2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள்

Editorial   / 2018 மார்ச் 08 , பி.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாயில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி, கடந்த பெப்ரவரி 24ம் திகதி, ஹோட்டல் அறையில் திடீரென உயிரிழந்தார். மாரடைப்பால் தான் அவர் மரணமடைந்ததாக, முதலில் கூறப்பட்டது. ஆனால், குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாக, பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டது. இருப்பினும், ஸ்ரீதேவி எப்படி உயிரிழந்தார் என்பது, இன்னமும் மர்மமாகவே உள்ளது.

இந்நிலையில், ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள் குறித்து, அவரது கணவரும் சினிமாத் தயாரிப்பாளருமான போனி கபூர், மனம் திறந்து பேசி உள்ளார். பிரபல சினிமா விமர்சகர் கோமல் நத்தாவிடம் போனி கபூர் பேசியதை, கட்டுரையாக நத்தா வெளியிட்டுள்ளார்.

அதில் போனி கபூர் கூறியுள்ளதாவது,

“மகள் ஜான்விக்காக ஷொப்பிங் செய்ய, திருமண நிகழ்ச்சி முடிந்ததும், தொடர்ந்து 2 நாட்கள் டுபாயிலேயே தங்குவதற்கு, ஸ்ரீதேவி முடிவு செய்தார். பிப்ரவரி 22ஆம் திகதி, லக்னோவில் மீட்டிங் ஒன்றில் கலந்துகொள்வதற்காக நான் இந்தியா சென்றேன். அன்றைய தினம், ஸ்ரீதேவி தனது தோழியுடன் பேசி, பொழுதைக் கழித்துவிட்டு, ஹோட்டல் அறையில் ஓய்வெடுத்துள்ளார்.

“பிப்ரவரி 24ம் திகதி காலை, நான் ஸ்ரீதேவியுடன் பேசினேன். “நான் உங்களை மிகவும் மிஸ் பண்றேன்” என்றார். அப்போதும் அன்று மாலை நான் டுபாய்க்கு வருவதை அவரிடம் சொல்லவில்லை. கடந்த 24 வருடங்களில், ஸ்ரீதேவி இல்லாமல் 2 முறை மட்டும் தான் தனியாக வெளிநாடு சென்றுள்ளேன்.

“3.30 மணிக்கு, டுபாய் செல்லும் விமானத்தில் சென்றேன். டுபாய் நேரப்படி, மாலை 6.20க்கு, ஹோட்டல் அறைக்குச் சென்றேன். ஸ்ரீதேவிக்கு சர்ப்பரைஸ் கொடுப்பதற்காக, அவரிடம் சொல்லாமல் சென்றேன். என்னிடம் இருந்த டூப்ளிகேட் சாவியை வைத்து கதவைத் திறந்து, ஸ்ரீதேவியின் அறைக்குள் சென்றேன். ஆனால், நான் டுபாய் வருவேன் எனத் தெரியுமென, ஸ்ரீதேவி என்னிடம் கூறினார்.

“என்னைக் கட்டி அணைத்து முத்தமிட்ட ஸ்ரீதேவி, அரை மணிநேரம் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். பிறகு, ஷொப்பிங் போகலாம், தற்போது இரவு உணவிவுக்காகச் செல்லலாமெனக் கூறினேன். அதற்குச் சம்மதம் தெரிவித்த அவர், குளித்துவிட்டு வருவதாகக் கூறி, பாத்ரூமுக்குச் சென்றார். நான் அறையில் டி.வி பார்த்துக் கொண்டிருந்தேன்.

“15 - 20 நிமிடங்களுக்கு மேல் ஆனது. அன்று சனிக்கிழமை என்பதால், இரவு 8 மணிக்கு மேல் ஹோட்டலில் கூட்டம் அதிகமாகிவிடும் என்ற பதற்றத்தால், ஸ்ரீதேவியைக் கூப்பிட்டேன். நான் சத்தமாகக் கூப்பிட்டும், அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. வழக்கத்துக்கு மாறாக இருப்பதால், பாத்ரூம் கதவைத் தட்டினேன்.

அப்போது தான் பார்த்தேன், கதவின் உட்புறம், தாளிடாமல் இருந்தது. பதற்றமும் பயமும் அடைந்த நான், ஓடிச் சென்று பார்த்த போது, ஸ்ரீதேவியின் உடல் முழுவதும் குளியல் தொட்டிக்குள் மூழ்கி இருந்தது. அசைவற்று அவர் இருந்ததால், எனக்கு பயம் அதிகமானது. அவரை எழுப்ப முயன்றேன். ஆனால், அவர் எழவேயில்லை” என்று கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X