2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டார்’; தர்ஷன் மீது சனம் ஷெட்டி முறைப்பாடு

Editorial   / 2020 ஜனவரி 31 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தர்ஷனுடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், திருமணம் செய்யாமல் என்னை ஏமாற்றுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, நடிகை சனம் ஷெட்டி, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிரபலமானவர் தர்ஷன். இவரும், நடிகை சனம் ஷெட்டியும் காதலித்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே இது வெளியே வந்தது. இந்நிகழ்ச்சிக்குப் பின்னர், இருவரும் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருந்தனர். இந்நிலையில், தர்ஷன் மீது சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில், சனம் ஷெட்டி புகார் அளித்துள்ளார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2019 மே 12இல், எனக்கும் தர்ஷனுக்கும் இருவீட்டாரது குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்தது. ஜூன் மாதம் திருமணம் செய்யலாம் என்று இருந்தோம். ஆனால், பிக்பாஸ் வாய்ப்பு வந்ததால், திருமணத்தை தள்ளி வைக்கும்படி கூறினார். நானும் சரி என்றேன். நிச்சயதார்த்தம் நடந்ததைக்கூட வெளியே சொல்லக்கூடாது என்றார். நானும் அதைக் கடைபிடித்தேன்.

“பிக்பாஸ் நிகழ்ச்சி, அவருக்கு நல்ல பெயரை வாங்கி வந்தது. எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு விண்ணப்பம் அனுப்பியது முதல் தர்ஷன் புகழ் பெற்றது வரை என்னால்தான். அவருக்காக என் பணத்தை இலட்சக்கணக்கில் செலவு செய்துள்ளேன். அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு, ஆளே மாறிவிட்டார். திருமணத்தை நிறுத்தினார். பேச முயன்றால் அவமானப்படுத்தினார்.

“அவது பெற்றோரிடம் சென்று பேசினேன். தர்ஷனுக்கு அப்போது உன் மீது காதல் இருந்தது. இப்போது இல்லை என்கிறான். நீ உன் வாழ்க்கையைப் பார்த்துக்கொள் என்றனர். மீண்டும் சென்னை வந்த தர்ஷனை சமாதானம் செய்ய முயன்றேன். ஆனால், நான் படங்களில் நடிப்பதைக் காரணம் கூறி, என்னையும் சக நடிகர்களையும் இணைத்துத் தவறாகப் பேசி, மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். இந்தப் பிரச்சினையால், என் அப்பாவுக்கு மாரடைப்புப் பிரச்சினை கூட ஏற்பட்டது.

“நீ யாரிடம் வேண்டுமானால் போய் புகார் செய், உன்னை எப்படி வாயடைக்க வைப்பது என எனக்குத் தெரியும் என்று மிரட்டுகிறார். இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல் தான், இன்று அவர் மீது புகார் கொடுத்துள்ளேன். அவர் வளர நான் காரணமாக இருந்தேன். ஆனால் இன்று, நான் யார் என்றே தெரியாத மாதிரி நடந்து கொள்கிறார். நம்பிக்கைத் துரோகம் செய்து என்னை ஏமாற்றி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, சனம் ஷெட்டி கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X