2024 மார்ச் 28, வியாழக்கிழமை

புங்குடுதீவு மாணவி கொலை; வாக்குமூலங்களில் பரஸ்பர வேறுபாடு

Kogilavani   / 2017 ஜூலை 19 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கின் எதிராளிகள், பொலிஸாரிடம் வழங்கிய முதல் வாக்குமூலத்துக்கும் பின்னர், குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய வாக்குமூலத்துக்கும் இடையே வேறுபாடு காணப்படுவதோடு, பொலிஸ் வாக்குமூலமானது, குற்ற ஒப்புதல் வாக்குமூலமாகவே காணப்படுகிறது” என்று, எதிராளிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்தன, நேற்று (18) மன்றில் தெரிவித்தார்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணையின் இரண்டாம் கட்ட சாட்சிப் பதிவுகள், யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதியின் இரண்டாம் மாடியில், மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில், மேல் நீதிமன்ற நீதிபதிகளான அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில், நீதாய விளக்கம் (ட்ரயல் அட் பார்) முறைமையில், நேற்று (17) நடைபெற்றன.

நேற்றைய வழக்கு விசாரணைகளின் போது, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில், அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த், லக்சி டீ சில்வா மற்றும் சட்டத்தரணி மாலினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.

1,2, 3, மற்றும் 6ஆம் எதிராளிகள் சார்பில், சட்டத்தரணி மஹிந்த ஜயவர்த்தன, எம்.என்.நிஷாம் மற்றும் சட்டத்தரணி லியனகே, ஆகியோரும் 5ஆம் எதிராளியின் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதியும் 4, 7 மற்றும் 9ஆம் எதிராளிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோரும், மன்றில் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன், 8ஆம் எதிராளி சார்பிலும் ஒன்று தொடக்கம் 9 வரையிலான எதிராளிகள் சார்பிலும் மன்றினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலையாகி இருந்தார்.எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசிதரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்த், பழனி ரூபசிங்கம் குகநாதன், ஜெயதரன் கோகிலன், மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிராளிகளும், மன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, ஏழாம் நாள் சாட்சியப் பதிவுகள் ஆரம்பமாகின.   

குறித்த வழக்கில் மேலும் இரு சாட்சியங்களையும் மூன்று சான்றுப் பொருட்களையும், குற்றபகிர்வுப் பத்திரத்தில் இணைப்பதற்கு, மன்றின் அனுமதியை, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கோரி இருந்தார். அதற்கு, எதிராளிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜயவத்தன ஆட்சேபனை தெரிவித்து, மன்றில் விண்ணப்பம் செய்தார். அதனை மன்று ஏகமனதாக நிராகரித்து, குறித்த வழக்கின் தீர்ப்பு வெளிப்படுத்தப்படும் வரையில் குற்றப்பகிர்வுப் பத்திரத்தின் தேவைக்கேற்ப திருத்தங்கள் செய்வதற்கு, சட்டமா அதிபருக்கு உரித்துண்டு. அதன் பிரகாரம், புதிதாக இணைக்கப்பட இருக்கும் சாட்சியங்கள் இரண்டும் நிபுணத்துவ சாட்சியங்களையும் புதிதாக சேர்த்துக்கொள்ள, மன்று அனுமதி வழங்கியது.

அதன் பிரகாரம், 52ஆவது சாட்சியாக இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்கள சிரேஷ்ட அதிகாரியும் 53 சாட்சியாக ஜின்டெக் நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானியும் நிபுணத்துவ சாட்சியங்களாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். அதேவேளை, சான்றுப் பொருட்களாகப் பற்றுச்சீட்டுகள், இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கை, மரபணுப் பரிசோதனை அறிக்கை ஆகியவை, புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து, வழக்கின் 38ஆவது சாட்சியமான சண்முகலிங்கம் கார்த்தி சாட்சியமளிக்கையில் கூறியதாவது,
“நான் புங்குடுதீவைச் சேர்ந்தனான். படுகொலை செய்யப்பட்ட மாணவி, எனது அப்பாவின் மச்சானின் மகள். நான் பஸ் நடத்துநராகக் கடமையாற்றுகிறேன். கடந்த 2015 மே மாதம் 13ஆம் திகதியன்று, நான் வேலை முடிந்து வீட்டுக்குச் சென்றபோது, வித்தியாவைக் காணவில்லை என அறிந்துகொண்டேன். அதனையடுத்து, வித்தியா வீட்டுக்குச் சென்றபோது வித்தியாவின் அம்மம்மா மாத்திரம் வீட்டில் அழுதுகொண்டிருந்தார். வித்தியாவின் தாயும் அண்ணனும், முறைப்பாடு செய்வதற்காக, பொலிஸ் நிலையம் சென்றிருந்ததாக அறிந்தேன். நான் கொஞ்ச நேரம் வித்தியா வீட்டில் நின்றுவிட்டு, எனது வீட்டுக்குத் திரும்பி விட்டேன்.

மறுநாள் 14ஆம் திகதியன்று, வித்தியாவின் சடலம் கிடக்கின்றது. என அறிந்து, சடலம் கிடந்த இடத்துக்குச் சென்றேன். அங்கே வித்தியாவின் அம்மா அழுதுகொண்டிருந்தார். அண்ணன் மயக்கமாகி வீழ்ந்து இருந்தார். அவ்வேளை, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அவ்வேளை வித்தியாவின் அம்மா, என்னையே சடலத்தை பொறுப்பேற்று வைத்தியசாலைக்கு போய்வருமாறு கூறினார். அதனைத் தொடர்ந்து, நானும் சடலத்துடன் வைத்தியசாலைக்குச் சென்றேன்.

பிரேத பரிசோதனை முடிந்து சடலத்தை மீண்டும் எம்மிடம் ஒப்படைக்கும்போது, நள்ளிரவு 1 மணி இருக்கும். அதன் பின்னர், சடலத்தை புங்குடுதீவுக்கு எடுத்து வந்தோம். மறுநாள் 15ஆம் திகதி, இறுதிக் கிரியைகள் செய்து சடலத்தை நல்லடக்கம் செய்யும் வரையில், நான் அங்கே இருந்தேன்” என, சாட்சியம் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து, சாட்சியத்தைக் குறுக்கு விசாரணை செய்த  எதிராளிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜயவர்தன, “மாணவியின் இறப்புக்குப் பின்னர், புங்குடுதீவில் கலவரம் இடம்பெற்றதா” எனக் கேட்டதற்கு, “இல்லை. இறுதிக் கிரியைகள் நடைபெற்று அவர் படித்த பாடசாலைக்கு, சடலம் அஞ்சலிக்காக கொண்டுவந்த வேளையில், மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்” என்றார்.

“இறுதிக் கிரியை நடைபெற்றதற்கு முதல் நாள் (14ஆம் திகதி), போராட்டங்கள் நடைபெற்றனவா?” என்று கேட்டதற்கு பதிலளித்த சாட்சியம், “அது தொடர்பில் எனக்குத் தெரியாது. அன்றைய தினம் நான் சடலத்துடன் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்திருந்தேன். மீண்டும் புங்குடுதீவு செல்லும் போது, நள்ளிரவு 1 மணிக்கு மேல் என்பதால், அன்றைய தினம் என்ன நடந்தது என, எனக்கு எதுவும் தெரியாது” என்றார். “இறுதிச் சடங்கு முடிவடைந்த பின்னர், வன்முறைகள் நடைபெற்றனவா?” என, சட்டத்தரணி கேட்டதற்கு, “இல்லை” எனப் பதிலளித்த சாட்சியத்திடம், “எதிராளிகளின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதா?” என்றும் கேட்டார். அதற்கும், “தெரியாது” என, சாட்சியம் பதிலளித்தார்.

“நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள எதிராளிகளின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது தெரியாதா?” என, சட்டத்தரணி மீண்டும் கேட்டபோது, “இல்லை. தெரியாது. நான் என் வேலையைத் தவிர வேறு வேலைகளைப் பார்ப்பதில்லை” என்றார். “தீ வைக்கப்பட்டத்தைக் கண்டதே இல்லையா?” என்று சட்டத்தரணி கேட்டதற்கு, “இல்லை. பின்னர் கேள்விப்பட்டேன்” என்றார்.

“பாதையால் செல்லும்போது, எரிந்த வீடு ஒன்றினையும் கண்டதே இல்லையா?” என்று மீண்டும் கேட்டதற்கு, “இல்லை” என்றார்.
இதனைத் தொடர்ந்து, “எதிராளிகளின் வீடுகளுக்கு தீ வைத்த கும்பலுக்கு, நீரே தலைமை தாங்கிச் சென்றீர் என, எதிராளிகள் தரப்பில் கூறுகிறேன்” என, சட்டத்தரணி மஹிந்த ஜயவர்தன தெரிவித்தார். இருப்பினும், “நான் அதனை முற்றாக மறுக்கிறேன்” என, சாட்சியாளர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, சாட்சியத்தைக் குறுக்கு விசாரணை செய்த எதிராளிகள் தரப்பு சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி, “மாணவியின் அண்ணா மயங்கி வீழ்ந்து இருந்தார் என சாட்சியம் அளித்திருந்தீர். அவ்வாறு மயங்கி வீழ்ந்திருந்தவரை ஆசுவாசப்படுத்தி, அருகில் இருந்தவர்கள் தொடர்பில் குறிப்பிட முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு சாட்சியாளர், “ஆம், சந்திரஹாசன் என்பவர் (5ஆம் எதிரி) மயங்கி வீழ்ந்திருந்த வித்தியாவின் அண்ணாவை, தனது மடியில் சாய்த்து வைத்திருந்தார்” எனப் பதிலளித்தார்.

அதனைத் தொடர்ந்து, குறுக்கு விசாரணைகள் முடிவடைந்து குறித்த சாட்சியத்தின் சாட்சி பதிவுகள் முடிவுறுத்தப்பட்டு, வழக்கில் இருந்து, சாட்சியம் விடுவிக்கப்பட்டார்.

அதையடுத்து, குறித்த வழக்கின் 21ஆவது சாட்சியான உப பொலிஸ் பரிசோதகர் மறகல இரான் சாட்சியமளிக்கையில் கூறியதாவது,

“நான் தற்போது கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருகிறேன். சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தேன். அந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் பணிப்பின் பேரில், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் குறிகட்டுவான் பொலிஸ் காவலரணின் பொறுப்பதிகாரியாக பணிபுரிந்தேன்.
“2015 மே மாதம் 14ஆம் திகதியன்று காலை, குறிகட்டுவான் பொலிஸ் காவலரணில் கடமையில் இருந்தபோது, புங்குடுதீவு -ஆலடிச் சந்திக்கு அருகில், மக்கள் கூட்டமாக இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதனை அடுத்து, எனது பொலிஸ் குழுவுடன் அந்த இடத்துக்குச் சென்றேன். ஆலடிச் சந்தியில் இருந்து சிறிது தூரம் உள்ளே சென்றால், பற்றைகாடுகளுக்கு மத்தியில் பாழடைந்த கட்டடங்கள் உள்ள பகுதியில் மக்கள் கூட்டம் இருந்தது. அந்தப் பகுதியில், பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் காணப்பட்டது. நான் நின்ற இடத்தில் இருந்து சுமார் 15 மீற்றர் தூரத்தில் சடலம் காணப்பட்டது” எனத் தெரிவித்து, சடலம் காணப்பட்ட நிலையை மன்றில் விபரித்து கூறினார்.

அவ்வேளை, எதிராளிகள் தரப்புச் சட்டத்தரணி மஹிந்த ஜயவர்தன, “குறித்த பொலிஸ் சாட்சி, தகவல் புத்தகத்தைப் பார்த்து சாட்சியம் அளிக்காமல், தனது வாக்குமூலத்தைப் பார்த்து சாட்சியம் அளிக்கின்றார். அதனை அனுமதிக்கக் கூடாது” என மன்றில் கோரினார். அதனையடுத்து, சாட்சியத்திடம் வாக்குமூலத்தை பார்த்து சாட்சியம் அளிக்காமல், தகவல் புத்தகத்தைப் பார்த்து சாட்சியமளிக்குமாறு, மன்றினால் அறிவுறுத்தப்பட்டது. பின்னர், சாட்சியம் தனது சாட்சியத்தை தொடர்ந்தளித்தார்.

“நாம் அன்றைய தினம், சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டோம். பின்னர், எமது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குயிண்டஸ் குணால் பெரேரா (அப்போதைய ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி) தலைமையில், விசாரணைகளை முன்னெடுத்தோம். அதன்பிரகாரம், அன்றைய தினம் (14ஆம் திகதி) இரவு 10 மணியளவில், பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார் மற்றும் பூபாலசிங்கம் தவக்குமார் ஆகிய மூவரையும், அவர்களது வீட்டுகளுக்கு அருகில் வைத்துக் கைதுசெய்தோம்.

“மறுநாள் (15ஆம் திகதி), மாணவியின் இறுதிச் சடங்கு இடம்பெற்றது. அன்றைய தினம் காலை முதல், இறுதிச் சடங்கு முடிவடைந்து சடலம் நல்லடக்கம் செய்யப்படும் வரையில், நான் மாணவி கல்விகற்ற பாடசாலைக்கு அருகில், பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தேன்.

“அதன் பின்னர், 17ஆம் திகதி மாலை, எமது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, எம்மை புங்குடுதீவில் உள்ள நாதன் கடைக்கு முன்பாக வருமாறு அழைத்தார். நாம், அவ்விடத்துக்குச் சென்றோம். அந்தக் கடையில் இருந்து சுமார் 400 மீற்றர் தூரத்துக்கு அப்பால் உள்ள இடத்துக்கு வரச்சொன்னார். நாம் அங்கு சென்றபோது, மகாலிங்கம் சசிதரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்த், பழனி ரூபசிங்கம் குகநாதன் மற்றும் ஜெயதரன் கோகிலன் ஆகிய ஐந்து சந்தேகநபர்களையும் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைதுசெய்தோம். அவர்களைக் கைது செய்தபோது, அவர்களில் ஒரு சிலர், ஆலயத்துக்குச் செல்வதற்குத் தயாரான நிலையில் வேட்டியுடன் மேலங்கி இல்லாமல் நின்றிருந்தார்கள். அவர்கள் ஐவரையும் ஒரே இடத்தில் வைத்தே கைதுசெய்தோம்.

“கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை, எமது பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசெல்லவில்லை. ஏனெனில், சந்தேகநபர்களில் ஒருவரது நெருங்கிய உறவினர் ஒருவர், ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுவதனால், நாம் அவர்களை பொலிஸ் நிலையம் கொண்டுசெல்லாது, குறிகட்டுவான் பொலிஸ் காவலரணுக்கு, விசாரணைக்காக அழைத்துச் சென்றோம்.

“நாம் அவர்களை குறிகட்டுவான் பொலிஸ் காவலரணுக்கு கொண்டுசென்று வாக்குமூலங்களைப் பெற முயற்சிக்கும்போது, ஊரவர்கள் ஒன்று திரண்டு, சந்தே நபர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி, காவலரணைத் தாக்கினார்கள். அதனால், எமது பொறுப்பதிகாரி, மேலதிகாரிகளின் கவனத்துக்கு, இவ்விடயத்தைக் கொண்டுசென்று, கடற்படையின் உதவியுடன் சந்தேகநபர்களை கடல் வழியாக நீருந்து விசைப்படகு (வோட்டர் ஜெட்) மூலம், காரைநகர் கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து வட்டுக்கோட்டை பொலிஸாரின் உதவியுடன், சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றோம்.

“அன்றைய தினம் இரவு, சந்தேகநபர்கள் வாக்குமூலம் அளிக்கும் நிலைமையில் இல்லாத காரணத்தால், அவர்களை ஓய்வெடுக்க விட்டு, நாம் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்துக்கு திரும்பிவிட்டோம். பின்னர், மறுநாள் 18ஆம் திகதி அதிகாலை, மீண்டும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் சென்று, சந்தேகநபர்களின் வாக்குமூலங்களை, கோபி எனும் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தரின் உதவியுடன் பெற்றுக்கொண்டு இருந்தவேளை, வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க, என்னை தனது அலுவலகத்துக்கு வந்து சந்திக்குமாறு அழைத்தார்.

“அதனையடுத்து, நான் அவரது அலுவலகத்துக்குச் சென்றேன். அவ்வேளை, அங்கு யாழ்ப்பாண பிரதி பொலிஸ் மா அதிபர் பெரேரா, யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வீரசேகர, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் அப்போது கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் மற்றுமொருவர் சிவில் உடையில் இருந்தார். அப்போது சிவில் உடையில் இருந்தவர் யார் என்று தெரியாது. பின்னர், அவர் சட்டத்துறைப் பீடாதிபதி தமிழ்மாறன் என அறிந்துகொண்டேன்.

“அப்போது, வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், மாணவி கொலை வழக்கில் 17ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்கள் பற்றியும் என்னிடம் விசாரித்தார். பின்னர், இந்த வழக்குடன் தொடர்புடைய நபர் ஒருவர் உள்ளார் எனவும் அவர் சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்ல முற்படலாம், அதனால் சர்வதேச விமான நிலைய பொலிஸாருக்கு தகவல் வழங்கி, அவர் தப்பிச் செல்வதைத் தடுக்குமாறு கூறினார். அத்துடன், சுவிஸ் குமார் என அழைக்கபப்டும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரது கடவுச்சீட்டு இலக்கத்தைக் கூறி, அந்தத் தகவல்களை, சர்வதேச விமான நிலைய பொலிஸாருக்கு வழங்குமாறும் கூறினார். நான் அதனை எமது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கூறினேன்.

“அதன் பின்னர், நான் மீண்டும் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்துக்கு வந்து, அங்கு தடுத்து வைக்கப்ட்டிருந்த ஐந்து சந்தேகநபர்களிடமும் வாக்குமூலத்தினை பெற்று, அவர்களை யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி முன் முற்படுத்தி, மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர், அவர்களை அப்போதைய ஊர்காவற்துறை நீதிவானின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் முற்படுத்தினோம். அங்கு நீதிவானிடம் ஐந்து சந்தேகநபர்களையும் 48 மணிநேர பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு, அனுமதி கோரினோம். அதற்கு நீதவான் அனுமதியளித்தார்.

“ஒன்பதாவது சந்தேகநபரான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் தொடர்பில், எமக்கு எந்தத் தகவலும் தெரியாது. 18ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து முறைப்பாடு பதிவுசெய்த பின்னர், அவர் விடுவிக்கப்பட்டதாகவும் பின்னர் மறுநாள் 19ஆம் திகதி வெள்ளவத்தையில் வைத்து, மீளவும் கைது செய்யப்பட்டதாகவும், பின்னரே அறிந்துகொண்டேன்” என, அவர் சாட்சியமளித்தார்.

அதனைத் தொடர்ந்து அவரிடம் குறுக்கு விசாரணை செய்த சட்டத்தரணி மஹிந்த ஜயவர்தன, “சடலத்துக்கு அருகில் சைக்கிள் எதனையும் கண்டீரா?” என்று கேட்டதற்கு, “ஆம், பெண்கள் செலுத்தும் சைக்கிள் ஒன்றைக் கண்டேன்” என, பதிலளித்தார். அப்போது, “சடலத்துக்கும் துவிச்சக்கர வண்டிக்கும் இடையில் எவ்வளவு தூரம் இருந்தது?” எனக் கேட்டதற்கு, “நான் சடலத்தைக் கண்டதும் அதிர்ச்சியடைந்து விட்டேன். அதற்கு முதல், நான் இவ்வாறு ஒரு கொடூரக் கொலையைக் கண்டதில்லை. அதனால், மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தமையால், சடலத்துக்கும் சைக்கிளுக்கும் இடையிலான தூரம் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை” என்றார்.

அதனைத் தொடர்ந்து, “எதிராளிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்தன, “என்னுடைய கட்சிக்கார்கள், பொலிஸாருக்கு முதல் அளித்த வாக்குமூலத்துக்கும் பின்னர் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு அளித்த வாக்குமூலத்துக்கும் இடையில் வேறுபாடு உள்ளது. பொலிஸாருக்கு முதல் அளித்த வாக்குமூலம் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமாகும். அது தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்கவோ முரண்பாட்டை முன்வைக்கவோ எனக்கு தனியுரிமை உண்டு” என, மன்றில் விண்ணப்பம் செய்தார்.

அதற்கு மறுமொழியளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், “இது சட்ட முரணான விண்ணப்பம்” எனத் தெரிவித்து, அந்த விண்ணப்பத்தை நிராகரிக்குமாறு மன்றில் கோரினார். அதனையடுத்து, “எதிராளிகளால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட குற்றஒப்புதல் வாக்குமூலம், வழக்கின் சான்றாக இணைக்க முடியாது என, சட்டம் சொல்கின்றது. அவ்வாறு கொடுக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பில் கேள்வி எழுப்ப முடியாது என்பதால், எதிராளி தரப்பு சட்டத்தரணியின் விண்ணப்பத்தை, ஏகமனதாக நிராகரிக்கின்றோம்” என, மன்று அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து, சாட்சியத்திடம் தொடர்ந்தும் குறுக்கு விசாரணை செய்த சட்டத்தரணி மஹிந்த ஜயவர்தன, “சந்தேகநபர்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில், ஏதேனும் சான்றுப்பொருட்களைக் கைப்பற்றினீர்களா?” என்றார். அதற்குப் பதிலளித்த சாட்சியம், “வாக்குமூலத்தின் அடிப்படையில், கொல்லப்பட்ட மாணவியின் மூக்குக் கண்ணாடியை மீட்க நடவடிக்கை எடுத்தோம். ஆனால் அதை மீட்க முடியவில்லை” என்றார்.

அதற்கு சட்டத்தரணி, ”ஏன்?” என்று கேள்வியெழுப்பினார். பதிலளித்த சாட்சியம், “அன்றைய தினம் (18ஆம் திகதி) யுத்த வெற்றி நாள். அதனால், மக்கள் கூடுவார்கள். அன்று சந்தேகநபர்களை புங்குடுதீவுக்கு அழைத்துச் செல்வது நல்லதில்லை என, மேலதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதனால், அன்று அழைத்துச் செல்லவில்லை மறுநாள் நாம் விசாரித்ததில், புங்குடுதீவில் யுத்த வெற்றி நாளுக்காக எவரும் கூடவில்லை என அறிந்துகொண்டோம்.

“அதன் பின்னர், மூக்குக் கண்ணாடி உள்ளிட்ட சான்றுப் பொருட்களை மீட்க முயன்ற வேளை, சந்தேகநபர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு, அந்தப் பகுதிகளில் அசாதாரண சூழ்நிலை காணப்பட்டமையால், நாம் சந்தேகநபர்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும் முகமாக, அந்தப் பகுதிக்கு செல்லவில்லை” என்று பதிலளித்தார். “எதிராளிகளை அடித்துத் துன்புறுத்தி, சித்திரவதை புரிந்தே, அவர்களின் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளீர்கள் என, நான் எதிராளிகள் சார்பில் சொல்கிறேன்” என, சட்டத்தரணி தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த சாட்சியம், “நான் அதை முற்றாக மறுக்கிறேன்” என்றார்.

அதனையடுத்து, சாட்சியத்தைக் குறுக்கு விசாரணை செய்த எதிராளிகள் தரப்பு சாட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி, “எதிராளிகளை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தினீர்கள் தானே?” என்றதற்கு, “ஆம்” என்று பதில் கிடைத்தது. “அதில், எதிராளிகளின் உடலில் கீறல் காயங்களோ, வேறு காயங்களோ இருந்தாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்ததா?” என்று மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டபோது, “இல்லை. அவ்வாறு எந்தக் காயங்களும் சந்தேகநபர்களின் உடல்களில் இருக்கவில்லை” என்றார்.

அதனை அடுத்து, சாட்சியத்தைக் குறுக்கு விசாரணை செய்த எதிராளிகள் தரப்பு சட்டத்தரணி சின்னையா கேதீஸ்வரன், “4ஆம் மற்றும் 7ஆம் எதிராளிகளை, தலைகீழாகக் கட்டி, தூக்கி பொல்லால் அடித்துத் துன்புறுத்தியே, வாக்குமூலம் பெற்றீர் என கூறுகிறேன்” என்றார். அதற்கு சாட்சியளிப்பவர், “இல்லை. அதனை நான் முற்றாக மறுக்கிறேன்” என பதிலளித்தார்.

“9ஆவது சந்தேகநபர் தொடர்பில், உம்மிடம் எந்த சாட்சி ஆதாரமும் இல்லை எனக் கூறுகிறேன்” என்று சட்டத்தரணி கூறியதற்கு, “ஆம், என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை” என,  சாட்சியம் பதிலளித்தார். “9ஆவது சந்தேகநபர் தொடர்பில் எந்த சாட்சி ஆதாரமும் இல்லாதமையால் தான், அவர் யாழ்ப்பாண பொலிஸாரால்  விடுவிக்கப்பட்டார் எனக் கூறுகிறேன்” என, சட்டத்தரணி கூறியதற்கு, “அது தொடர்பில் எனக்குத் தெரியாது” என, அவர் மீண்டும் பதிலளித்தார்.

பின்னர், குறித்த சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு, வழக்கில் இருந்து சாட்சியாளர் விடுவிக்கப்பட்டார். குறித்த பொலிஸ் சாட்சியம், மன்றில் சுமார் 6 மணித்தியாலங்களாக சாட்சியமளித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X