2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நீங்கள் உடற்பருமன் அதிகம் உள்ளவரா..?

A.P.Mathan   / 2012 நவம்பர் 01 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


இன்று உலகில் வாழும் பலரும் எதிர்நோக்கும் ஒரு பாரிய பிரச்சினை தான் உடற்பருமன். சுகாதாரமாக வாழ விரும்பும் பலருக்கும் ஒரு வாழ்நாள் பிரச்சினையாகவே இது அமைந்து விடுகிறது. பொதுவாகவே மனித உடலின் வளர்ச்சியானது 25 தொடக்கம் 26 வயதுகளில் மட்டுப்படுத்தப்படுகிறது. அதனால் நாம் உண்ணுகின்ற உணவின் சக்தி முன்பை விடவும் அதிகமாக நமது உடலில் சேமிக்கப்படுகிறது. இதுவே எமது உடற்பருமனில் அதிகம் செல்வாக்கைச் செலுத்துகின்றது.

எனவே உணவு பழக்க வழக்கம் உட்பட எமது அன்றாட நடவடிக்கைகளும் உடற்பயிற்சியும் தான் எமது உடற்பருமனை தீர்மானிக்கின்ற முக்கியமான அம்சங்களாக விளங்குகின்றன. உடற்பருமனை எவரும் சாதாரணமாக எடைபோட்டு விடக்கூடாது. காரணம் அதன் பாதிப்புகள் எமது உயிருக்கே ஆபத்தாகி விடுகின்ற மாரடைப்பு, நீரிழிவு, இரத்த அழுத்தம், பித்தப்பையில் கல் உருவாதல் போன்ற நோய்களையும் மூட்டு வலி அதிலும் முக்கியமாக முழங்கால் வலி போன்ற உடற்பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடியது.

ஒருவருடைய ஆரோக்கியமான உடல் எடையை Body mass Index என்ற முறையின் மூலமே தீர்மானிக்கப்படுகின்றது. அதாவது குறித்த ஒருவரது உடல் நிறையை (கிலோ கிராமை) அவரது உயரத்தால் (மீற்றரை) வகுக்கும் போது கிடைக்கும் பெறுமானம் 18.5 இற்கும் 25 இற்கும் இடைப்பட்டதாக இருக்கும் பட்சத்தில் அவரின் உடல் எடை சாதாரண உடல் எடையாக கணிக்கப்படும். அதாவது ஆரோக்கியமான உடற்பருமனாக அது விளங்கும்.
 
25இற்கும் கூடுதலாக இருக்கும் பட்சத்தில் அது அளவுக்கதிகமான உடல் எடையாக கருதப்படும். இவ்வாறானவர்கள் சாதாரணமான உடற்பயிற்சிகளையும் உணவுக் கட்டுப்பாடுகளையும் கடைபிடிப்பதன் மூலமாக தமது உடற்பருனை பேணிப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

30 தொடக்கம் 45இற்கும் அதிகமாக அந்த பெறுமானம் இருக்கின்ற பட்சத்தில் அவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையுடன் தம்மை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி அதற்குரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.


இப்போது நாம் கவனிக்க வேண்டியது 45இற்கும் அதிகமான பெறுமானங்களைக் கொண்டவர்கள். இவர்களின் நிறை பெரும்பாலும் 100 தொடக்கம் 150 வரைக்குமானதாக இருக்கும். இவர்கள் சாதாரணமான உடற்பயிற்சியின் மூலமாகவோ அல்லது உணவுக் கட்டுப்பாட்டின் மூலமாகவோ தமது உடற்பருமனை பேணிக்கொள்வது பெரும்பாலும் முடியாத ஒரு காரியமாகும். இவர்கள் தங்களை ஓர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்திக்கொள்வது சிறந்ததொன்றாகும்.
 
அதாவது அவர்கள் தமது உடல் உணவின் அளவை தீர்மானிக்கின்ற இரைப்பையில் அறுவை சிகிச்சையொன்றை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலமாக இரைப்பையை சுருக்கி தாம் உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்துக்கொள்ள முடியும். அத்தோடு அந்த அறுவை சிகிச்சையை தொடர்ந்து வழங்கப்படும் வைத்திய ஆலோசனைகளை முறையாக பின்பற்றுவதோடு தகுந்த உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுபாடுகள் போன்ற முறைகள் மூலம் இவர்களாலும் தமது உடற்பருமனை தொடர்ந்தும் பேணிக்கொள்ள முடியும்.

-க.ஜெயகாந்தன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X