2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

உங்கள் குழந்தைகளின் கண் பார்வை சரியாக இருக்கின்றதா?

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 30 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஒவ்வொரு மனிதனுக்கும் கண்களின் பார்வை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். வயது வந்தவர்களுக்கு கண் தெரியவில்லை என்றால் அவர்களால் வாய் திறந்து சொல்ல முடியும். ஆனால் குழந்தைகளுக்கு பார்வையில் பிரச்சினை இருந்தால் அவர்களால் அதனை வெளிப்படுத்தவே முடியாது. ஏன் அவர்களுக்கு தமது பார்வையில் பிரச்சினை இருக்கின்றது என்பதை உணர்ந்துகொள்ள கூட தெரியாது.

ஆனால் ஒரு தாயால் இதனை சரியாக இனங்கண்டு கொள்ள முடியும். எனவே ஒவ்வொரு தாயும் குழந்தைகளின் பார்வை விடயத்தில் மிகவும் அக்கறையுடன் இருப்பார்களேயானால் பார்வை இழந்த குழந்தைகளுக்கு மிகவும் இலகுவாக மீண்டும் பார்வையை கொடுக்க முடியும்.

ஆமாம் குழந்தை பிறந்து ஒன்று அல்லது இரண்டு மாததிற்குப் பின்னர் அதன் பார்வையை ஒரு தாயால் பரிசோதிக்க முடியும். நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.

உங்கள் குழந்தை உங்கள் முகத்தைப் பார்த்து சிரிக்கின்ற அதேவேளை ஏதாவது வெளிச்சத்தைக் காட்டும் போது அதனை நோக்கிப் பார்க்கின்றதா? என்பது தான் முதல் பரிசோதனை. 

அத்துடன் ஒரு பொருளை சத்தம் செய்யாமல் அதன் கண்களில் தெரியும் படி காட்டி, குறிப்பிட்ட ஒரு திசையை நோக்கி கொண்டு செல்லும்போது அப்பொருளை நீங்கள் காட்டும் திசையை நோக்கி திரும்பி பார்க்கின்றதா? என்பதையும் அவதானிக்க வேண்டும்.

ஏன் பொருளை சத்தம் செய்யாமல் காட்ட வேண்டும் என்றால், சிலவேளைகளில் சத்தத்தினை செவிமடுத்து சத்தம் வருகின்ற திசையை நோக்கி கூட அது பார்க்கலாம், அதனை கொண்டு நாம் குழந்தையின் பார்வை சரியாக இருக்கின்றது என்ற தீர்மானத்திற்கு வர முடியாது.


இது குழந்தை பிறந்து சுமார் இரண்டு மாதத்திற்குப் பின்னர் நீங்கள் அவர்களின் பார்வை தொடர்பாக செய்ய வேண்டிய சோதனைகள். இச்சோதனைகளை செய்யும்போது குழந்தைகளின் பார்வையில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக கண் வைத்தியரை நாடுங்கள்.

சரி இனி 4 அல்லது 5 வயதிற்குப் பின்னர் உங்கள் குழந்தைகளின் கண் பார்வையில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை எவ்வாறு நீங்கள் அறிந்துக் கொள்ளலாம் என்பதை இப்போது பார்ப்போம்.

பொதுவாக அவர்கள் தொலைக்காட்சி, கணினி போன்றவற்றை மிகவும் அருகில் சென்று பார்ப்பதுடன், புத்தகங்களையோ, பத்திரிகைகளையோ தொடர்ச்சியாக வாசிக்கும்போது கண் எரிகின்றது, கண்களிலிருந்து நீர் வருகின்றது, கண் வலிக்கின்றது எனச் சொல்வார்களேயானால் அவர்களின் கண்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்துவதுடன் உடனே ஒரு கண் வைத்தியரை நாடுவதே மிகவும் சிறந்தது.

ஏன் இதனை நாம் இவ்வளவு அழுத்தமாக சொல்கின்றோம் என்றால், குழந்தைகளைப் பொறுத்த வரைக்கும் அவர்களின் கண் நரம்புகள் 12 அல்லது 13 வயதிற்குப் பின்னர் வளர்ச்சியடைவதில்லை.
குறிப்பிட்ட அந்த வயதுக்குப் பின்னர் புதிதாக கண் நரம்புகள் வளராமல், ஏற்கனவே வளர்ச்சியடைந்த நரம்புகளே அதன் அளவில் பெருத்துக் கொண்டு போகும்.


எனவே கண் நரம்புகள் புதிதாக வளர்ச்சியடைகின்ற காலப்பகுதிக்குள் அதாவது ஆகக் கூடியது 13 வயதிற்குள், உங்கள் குழந்தைகளின் கண்களின் பார்வையில் ஏதேனும் குறைபாடு இருக்குமாயின், அதனை நிவர்த்தி செய்து கொள்வதுடன் அவர்களுக்கு மீண்டும் பார்வையை பெற்றுக் கொடுப்பது மிகவும் இலகுவானதாக இருக்கும்.

அதுவரை காலமும் நீங்கள் கவனிக்காமல் விட்டிருந்தால் பிற்காலத்தில் பார்வையை பெறுவதற்காக அவர்கள் பெரும்பாடு பட வேண்டியிருக்கும்.

ஆகவே உங்கள் குழந்தைகளின் கண்களுக்கு ஒளியூட்டி அவர்களுக்கு பிரகாசமான ஒரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களான உங்களின் பொறுப்பாகத் தான் இருக்கின்றது.

பார்வை சரியாக இருந்தால் தான் எம்மால் மிகச் சரியாக இயங்க முடியும். எனவே குழந்தைகளின் கண்களில் அதிகம் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தைப் பருவத்திலேயே அவர்களின் கண்களை சரியாக அவதானித்து வருவீர்களேயானால், இளம் பராயத்திலேயே குழந்தைகள் தம் பார்வையை இழக்கும் பேராபத்தை தடுத்து நிறுத்தலாம்.

-தம்பி

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .