2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்புளுவென்சா H1N1 இலிருந்து பாதுகாப்பது எப்படி?

Princiya Dixci   / 2015 ஜூன் 14 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்புளுவெனசா (Influenza) H1N1  என்பது புளு (Flu) காய்ச்சல் போன்ற நோயாகும். இந்நோய் ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு மூக்கிலிருந்து வெளியேறுகிற சளி மற்றும் இருமும் போது வெளியேறும் கிருமிகள் மூலம் தொற்றுகிறது. இந்நோய் முன்னர் 'பன்றிக் காய்ச்சல்' என்றழைக்கப்பட்டது. ஆயினும், இந்த நோய் பன்றிகளிலிருந்து தொற்றுவதில்லை என்ற  காரணத்தினால். இப்பொழுது 'பன்றிக் காய்ச்சல்' என்றழைக்கப்படுவதில்லை. இது ஒரு புதிய வகை வைரஸ் கிருமியினால் ஏற்படும் நோய் ஆகையால் பெரும்பாலன மக்கள் இந்நோய்க்கான எதிர்ப்பு சக்தியை கொண்டிருப்பதில்லை. ஆகவே, இந்நோய் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இது சிறு பிள்ளைகள்  மற்றும் இளம் வயதினர் மத்தியில் அதிகமாக பரவிவருகின்றது.

குணங்குறிகள் 

பொதுவாக இது ஒரு சாதாரண நோயாகும். ஆகவே, தேவையற்ற பாற்றம் அடையத் தோவையில்லை. பொதுவான குணங்குறிகள்: 

•    காய்ச்சல்
•    தலையிடி 
•    உடல் வலி 
•    தொண்டை வலி
•    இருமல்
•    மூக்கிலிருந்து சளி வடிதல்
•    சில வேளைகளில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும்.

இது சாதாரண தடிமன் போன்றது. ஆகவே, மற்றைய இன்புளுவென்சா காய்ச்சல் வகைகளிலிருந்து வேறுபடுத்தி இனங்காண்பது கடினமானது. இந்த நோய் சில நோய்களிலிருந்து நியூமோனியா காய்ச்சலாக மாறக்கூடிய வாய்ப்புண்டு. இவ்வாறு நியூமோனியா காய்ச்சலாக மாறுமிடத்து மூச்சு விடுதல் கடினமாக இருக்கும். மேலும், கடுங்காய்ச்சலாக காணப்பட கூடும் அல்லது காய்ச்சல் காணப்படாமலும் நோய் கடுமையாகும்.

மேற்கூறிய குணங்குறிகள் காணப்படின் செய்யவேண்டியவை

•    குணங்குறிகள் அகலும் வரை  நோயாளி  படுக்கையில்  ஓய்வெடுத்தல்.
•    சன நெருக்கடிமிகுந்த இடங்களைத் தவிர்த்தல். இது நோய் பரவுதலை தடுக்கும்.
•    போசாக்கு மிகுந்த உணவு வகைகளையும் அதிகளவு நீராகாரங்களையும் உட்கொள்ளுதல். 
•    குடும்ப வைத்தியரிடம் குணங்குறிகளுக்கான வைத்திய ஆலோசனைகளைப் பெறுதல். சாதாரண நோய்க்கு விசேட வைத்திய சோதனைகள் மற்றும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுதல் முதலியன தேவையில்லை.
•    சவக்காரம் கொண்டு கைகளை அடிக்கடி கழுவுதல். 
•    தும்மும் போதும் இருமும் போதும் கைக்குட்டையை உபயோகித்தல், பேப்பர் டிசு (Tissue) உபயோகிப்பின் அதை உரிய முறையில் அகற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் கைகளை உபயோகிக்கக் கூடாது. கைகளின் மூலம் மற்றைய இடங்களைத் தொடும் போது இவ் வைரஸ் மற்றைய இடங்களுக்கும் பரவக்கூடும்.
•    அரிதாக சிலரில் இந்நோய் முற்றி நியூமோனியாவாக மாறக்கூடும் அல்லது வலிப்பு ஏற்படக்கூடும். மேலும், தடுமாற்றம் மாறுப்பட்ட விழிப்புணர்வு ஏற்படக்கூடும்.

கீழ் காணப்படும் குணங்குறிகள் காணப்படின் வைத்திய ஆலோசனை பெற வேண்டும்.

•    கடுங்காய்ச்சல்
•    மூச்சுவிடுதல் கடினமாதல்
•    மாறுபட்ட விழிப்புணர்வு 
•    குணங்குறிகளின் கடுமை அதிகரித்தல்
•    உடல் சோர்வு

இந்நோய்க்கு சிகிச்சை உண்டா?

இந்த நோய் பற்றி ஆய்வுகள், நோயாளிக்கும் நோய் ஆபத்து சாத்தியக் கூறுகள் அதிகமானவர்களுக்கும் மட்டுமே அவசியமாகும். ஆகவே, எல்லோரும் பதற்றப்படவோ வைத்திய சோதனைகள் செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்நோய் கடுமையாகுமிடத்து அதை எதிர்கொள்ளத் தேவையான வளங்களும் மருந்துகளும் நம் நாட்டில் உண்டு. ஆகவே, இதைக்குறித்து கவலையடையத் தேவையில்லை.

அதிக கவனம் எடுக்க வேண்டியவர்கள் யார்?

•    கடுமையான நோய் வாய்ப்படக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளவர்கள்
•    2 வயதுக்கு உட்பட்டவர்கள்
•    65 வயதுக்கு மேற்பபட்டவர்கள் 
•    கர்ப்பிணிகள்
•    நீரிழிவு ஆஸ்மா, சிறுநீரக நோய் உள்ளவர்கள் பிரட்னிசலோன் (Prednisolone) மருந்து நீண்ட காலமாக பாவிப்பவர்கள்.

ஆகவே, நீங்கள் மேற்குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவராயின் அதிகம் கவனம் எடுக்க வேண்டும்;.

 இந்நோயிலிருந்து பாதுகாப்பது எப்படி?

•    சன நெருக்கடி மிகுந்த இடங்களைத் தவிர்த்தல்
•    சவரக்காரம் கொண்டு அடிக்கடி கை கழுவுதல்
•    வாய் மற்றும் மூக்கு பகுதிகளை தேவையின்றி தொடுவதைத் தவிர்த்தல்.
•    மூக்கால் நீர்/சளி வடியும் நோயாளிகளிடமிருந்து குறைந்தது 1 மீற்றர் தூரம் தள்ளி நிற்றல்
•    வீடுகளில் அலுவலங்களிலும் ஜன்னல்களை திறப்பதன் மூலம் காற்றோட்டத்தை அதிகரிக்கச் செய்தல்.
•    Mask உபயோகிப்பின் மூக்கையும் வாயையும் மூடக் கூடியதாக சரியான முறையில் அணியப்பட வேண்டும். தவறான உபயோகம் நோய் தொற்றும் சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும். 

நோய் தொற்றுதலை தவிர்க்க ஒரு சுகதேகி Mask அணிவதை பார்க்கிலும் நோயாளி நோய் பரவுதலை தடுக்க Mask அணிவது சிறந்தது.

'நோய் வருமுன் காப்போம்' 
மக்கள் சேவையில் யாழ். மத்திய சிகிச்சை நிலையம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X