2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’’தாய்ப்பால் எனும் வரம்’’

Piriyadharshini   / 2018 ஓகஸ்ட் 05 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

Dr.நி.தர்ஷனோதயன்

MD (S) (Reading) 

ஓகஸ்ட் 01 முதல் 07 ஆம் திகதி வரையான ஒருவாரக் காலம் ‘உலக தாய்ப்பால் வாரம் எனக் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால் பற்றிய மகத்துவம், நீடித்து, முறையாக அதை தருவதால் தாய்- சேய்க்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பான குறித்த, விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தவே இந்த வாரம் கொண்டாடப்படுகின்றது.

தாய்ப்பாலுக்கு, வேறு எந்த பாலும் மாற்றாகாது. 'தாய்ப்பாலில் இருக்கும் சத்துகள் அனைத்தும் எங்கள் நிறுவன பால் பவுடரில் இருக்கின்றன...' என்று கதை கதையாய் அளந்து விட்டாலும் தாய்ப்பாலுக்கு இணையாக எதையும் குறிப்பிட முடியாது.

சீம்பால்:

 

தாய்க்கு முதலில் சுரக்கும் சீம்பாலில் (Colostrums) இருக்கும் சத்துகள் வேறு எந்த உணவிலும் குழந்தைக்குக் கிடைக்காது. குழந்தைகளுக்கு சீம்பாலைக் கட்டாயமாக கொடுப்பது அவசியம். சீம்பாலை தவிர்க்க வேண்டும் என்ற தவறான கருத்தும் ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. குழந்தை பிறந்த சில மணிநேரத்தில்... 'பால் கொஞ்சமாகத் தான் சுரக்குது. குழந்தைக்குப் போதாது போல, அழுதுகிட்டே இருக்குது பாரு... அந்த பவுடர் பாலையும் சேத்து கொடுமா...' இப்படிப்பட்ட தவறான அறிவுரைகள் அதிகம் பிரசவ அறையில் நிகழ்கின்றன.

முதல் மூன்று நாளைக்கு சிறிதளவு சீம்பாலே குழந்தைக்குப் போதுமானது. குழந்தை அழுவதற்கு பசி மட்டுமே காரணம் கிடையாது. புதிய சூழ்நிலைக்கு தன்னை தகவமைத்துக்கொள்ள சிறிது சிரமும் இருக்கலாம். இதைப் புரிந்துகொள்ளாமல் செயற்கை பவுடர்களை எக்காரணத்தைக் கொண்டும் குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடாது.

முதல் ஆறு மாதம்:

முதல் ஆறுமாதம் தாய்ப்பால் தவிர வேறு எந்த உணவுமே தேவையில்லை. ஏன் தண்ணீர்கூட அவசியமில்லை. குழந்தைக்குத் தேவையான நீர்ச்சத்து முதல் பல்வேறு ஊட்டச்சத்துகள் தாய்ப்பாலில் உள்ளன. வெகு சமீபத்தில் நடைபெற்ற தாய்ப்பால் குறித்த ஆய்வின் படி 'தாய்ப்பால் மற்றும் மார்பு காம்புப் பகுதியில் உள்ள சில பாக்டீரியாக்கள் குழந்தையின் குடலுக்கு நன்மை செய்யக்கூடிய ஆரோக்கியமான நுண்ணுயிர்க் கூட்டத்தை அதிகரிப்பதாக' தெரிவித்துள்ளது. தாய்ப்பால் சிறிதும் குடிக்காமல் வளரும் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே உடற்பருமனும் நீரிழிவும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. பிறந்த குழந்தையின் செரிமானத்துக்கு ஏற்ற உணவு தாய்ப்பால் மாத்திரம் தான் என்பதில் எவ்வித ​ஐயமும் தேவையில்லை.

தாய்ப்பாலின் நன்மைகள்:

குழந்தைக்குத் தேவையான புரதம், கொழுப்புச் சத்து, விற்றமின்கள் என அனைத்தும் தாய்ப்பாலில் தேவையான அளவு இருக்கின்றது. அதே போன்று நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடும் திறன் தாய்ப்பாலில்அதிகளவில் காணப்படுகின்றது. 'நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள், ஒவ்வாமை பிரச்சினைகள் என்பன பிற்காலத்தில் ஏற்படாது' என்கின்றது மருத்துவ ஆய்வுகள்.

குழந்தை பிறந்த உடன் அடிக்கடி  தாய்ப்பால் கொடுப்பதற்காக தாயின் உடலில் 'ஒக்ஸிடோசின்' (Oxytocin),  எனும் ஹோர்மோன் சுரப்பு அதிகரிக்கும். இதனால், குழந்தைப் பெற்ற பின்னர் ஏற்படும் அதிக இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதுடன்,கருப்பை வீக்கத்தையும் விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கு உதவுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X