2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இமை மூடியது 'இயக்குநர் சிகரம்'

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 23 , பி.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

100 படங்களை இயக்கிய 'இயக்குநர் சிகரம்' கே. பாலசந்தர் (வயது 84) உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலமானார். 'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தருக்கு அண்மையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த திங்கட்கிழமை அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல்கள் பரவின.

இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்து வந்தனர். அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பாலசந்தர் காலமானர். 

பாலசந்தர் வாழ்க்கை குறிப்பு 
1930 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடியில் பிறந்தவர் பாலசந்தர். பள்ளிப் பருவத்தில் நாடகங்களை நடத்தி வந்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து சென்னைக்கு அரசு பணிக்காக வந்தார். அப்போது நாடகத்துறையில் கால் பதித்தார். 1965ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அழைப்பை ஏற்று தெய்வத்தாய் படத்துக்கு கதை, வசனம் எழுதினார். பின்னர் நீர்க்குமிழி படத்தை இயக்கி, இயக்குநரானார். அபூர்வ ராகங்கள், எதிர்நீச்சல், அவள் ஒரு தொடர் கதை, வறுமையின் நிறம் சிவப்பு, புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி உட்பட 100 படங்களை இயக்கியவர் பாலசந்தர். இவர் இயக்கிய கடைசி படம் பொய். இதில் பொய் படத்தில் கதாநாயகனாக நடித்தார். 

அபூர்வ ராகங்கள் படம் மூலமாக நடிகர் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியதும் இயக்குநர் கே. பாலசந்தர்தான். நடிகர் கமலஹாசன் புகழ்பெறுவதற்கும் காரணமாக இருந்தவரும் பாலசந்தர்தான். அத்துடன் எஸ்.வி.சேகர், மெளலி, ஒய்.ஜி. மகேந்திரன், பிரகாஷ்ராஜ், ராதாரவி, சுஜாதா, ஷோபா, சரத்பாபு, மேஜர் சுந்தரராஜன் உள்ளிட்ட பிரபலங்களை தமிழ்த் திரை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் பாலசந்தர். மேலும் ரெட்டைச் சுழி படத்தில் இயக்குநர் பாரதிராஜாவுடன் சேர்ந்து நடித்தார். அவர் கடைசியாக நடித்த படம் கமலஹாசனின் உத்தம வில்லன். விரைவில் இந்த திரைப்படம் வெளிவர இருக்கிறது. 

மனித உறவுகள் மற்றும் சமூக பிரச்சினைகளை மையமாக வைத்து திரைப்படங்களை இயக்கியவர். இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை, வசனகர்த்தா என பல முகங்களைக் கொண்டவர் பாலசந்தர். 1987ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 2010ஆம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதையும் பாலசந்தர் பெற்றார். மனைவி பெயர் ராஜம். மகள் புஷ்பா கந்தசாமி. பாலசந்தருக்கு இரண்டு மகன்கள். இதில் மூத்த மகன் கைலாசம் சமீபத்தில் காலமானார். (தட்ஸ்தமிழ்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X