2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இஸ்ரோ மீதும் சைபர் அட்டாக்? அதிர்ச்சி தகவல்

Editorial   / 2019 நவம்பர் 06 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய ரஷ்ய ஒத்துழைப்புடன் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இயங்கிவரும் அணுமின் நிலையத்தின் முக்கிய தகவல்கள் வடகொரியாவைச் சேர்ந்தவர்களால் ஹேக் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட இந்திய அணு மின்சாரக் கழகம் ஒக்டோபர் 30ஆம் திகதி வெளியிட்ட செய்தியில் இதை உறுதிபடுத்தியது.

இந்த நிலையில் இதே போன்றதொரு சைபர் அட்டாக் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் மீதும் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

தேசிய சைபர் ஒருங்கிணைப்பு மையத்துக்கு அமெரிக்க இணைய பாதுகாப்பு நிறுவனம் ஒன்றிடமிருந்து கூடங்குளம் அணுமின் உலை, இஸ்ரோ ஆகியவற்றில் சைபர் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கை செப்டம்பர் 4ஆம் திகதி அனுப்பப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கூடங்குளம் அணுமின் உலையில் சைபர் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

அணுமின் உலை மற்றும் இஸ்ரோ ஆகியவற்றில் முக்கிய தரவுகளை திருடும் நோக்கத்தோடுதான் இந்த சைபர் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட வாய்ப்பிருப்பதாக அந்த அமெரிக்க நிறுவனத்தின் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதை தேசிய அணுமின் கழகம் ஒப்புக்கொண்ட நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திலிருந்து இது குறித்து இஸ்ரோ நிர்வாகத்திடம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் எதுவும் வரவில்லை என்று, இன்று (நவம்பர் 6) வெளியிட்டுள்ள செய்தியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 23ஆம் திகதி ரஷ்யாவை சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனமான கஸ்பர்ஸ்கி என்ற நிறுவனம் இந்தியாவில் வங்கிகளையும் ஆராய்ச்சி நிறுவனங்களையும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று எச்சரிக்கை தகவல் வெளியிட்டிருந்தது.

இதனால், கூடங்குளத்தைத் தொடர்ந்து இஸ்ரோவிலும் சைபர் தாக்குதல்கள் நிகழ்த்தப்படக் கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. தேசப் பாதுகாப்பின் இரு முக்கியக் கூறுகளான அணு ஆராய்ச்சி, விண்வெளி ஆராய்ச்சி ஆகிய இரு துறைகளும் பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உறுதி செய்வதை வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .