2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

Startup Weekend Vanni: வெற்றியாளராகியது Kinder Med அணி

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் மூன்றாவதும், வடக்கு மாகாணத்தில் இரண்டாவதும் வன்னிப்பகுதியில் முதலாவதுமான தொழில்நுட்ப ரீதியிலான ஒரு நிகழ்வாக Startup Weekend Vanni நிகழ்வானது கிளிநொச்சியின் அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் பல்கலைக்கழகப் பதிப்பாக இடம்பெற்றிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை (16) முதல் ஞாயிற்றுக்கிழமை (18) வரை மூன்று நாட்களுக்கு இந்நிகழ்வு நடைபெற்றிருந்தது. இந்நிகழ்வுகளில், நுாற்றுக்கணக்கிலான தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையின் மூன்றாவது சர்வதேச Startup Weekend நிகழ்வு சம்பந்தமாக,  யாழ்ப்பாண நிகழ்வின்போதே திட்டமிடப்பட்டதன்படி போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் வன்னி மாவட்டங்களை ஒருங்கிணைத்து கிளிநொச்சியில் நடாத்த முடிவெடுக்கப்பட்டது. அதனை யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் பொறியில் பீடத்தில் நடாத்த முயற்சி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வை நடாத்துவது, அந்த பிராந்தியத்தில் Startup கலாச்சாரத்தினை வளர்த்து புதிய தொழில்முயற்சிகளைஆரம்பிப்பதற்கு வழிவகுக்கும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. அதற்கான அனுமதி பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்டதும் ஏற்பாடுகள் துரிதகதியில் முடுக்கிவிடப்பட்டன.

நிகழ்வுக்கு முன்னோடியாக, யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம், யாழ். பல்கலைக்கழகம் ஆகியவற்றில் அறிமுக நிகழ்வுகள் இடம்பெற்றன. கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் இடம்பெற்ற பிரதான நிகழ்வில், இலங்கையின் சகல பாகங்களில் இருந்தும் வந்த முன்னணி தகவல் தொழில்நுட்ப தொழில் முனைவோர், ஏனைய துறை தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள்,  தொழில்நுட்பவியலாளர்கள், குறிப்பாக கூடுதலாக பல்கலைக்கழக மாணவர்கள் என சகலதுறைகளில் இருந்தும் 120 பேர் வரையில் கலந்து கொண்டனர். Techstar சார்பாக, சென்னையிலிருந்து வளவாளராக அபிசேக் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில், அனுசரணையாளர்களாக 99Technologies, செலான் வங்கி, கொழும்பு மேற்கு றோட்டறிக் கழகம், ICTA, SLASSCOM, NICT, தமிழ்மிரர்,Readme, Shoutout ஆகிய நிறுவனங்கள் விளங்கின. வளவாளர்களாக, பின்வரும் முன்னணி நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சாமர பீரிஸ் (Yoho Bed), சகீவன் சச்சிதானந்தன் (Mystore.lk), சண்முகதாசன் பிரசாந்த (IT Signature), தர்மகுலசிங்கம் ஜெயந்தன் (SenzMate IoT Solutions), ஜோய் பெரேரா (Boost Metrics (Pvt) Ltd), சயந்தன் கனகநாயகம்(Atiral), பிரசாந்த் சுபேந்திரன் (BusSeat.lk), முகுந்தன் பத்தமநாதன் (IdeaBeam.com) ஆகியோரே இவ்வாறு கலந்துகொண்டிருந்தனர்.

நடுவர்களாக, ICTA  நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் சச்சிந்திர சமரரத்தின, Crowdisland அமைப்பின் தலைவர் சலிண்ட அபயகோன் கலந்துகொண்டு தீர்ப்பு வழங்கினர். ஏற்பாட்டாளர்களாக, பிரசாந்தன் (INNOVAYயின் நிறுவுநர்) தலைமையில் சரண்யன் (Extream SEOயின் நிறுவுநர்), சர்வேஸ்வரன் (Yarl IT Hub), தவரூபன் (Speed IT net), அமித கமகே(Quantum Leap) ஆகியோர் இருந்து நிகழ்வுகளை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

சிறப்பு பேச்சாளர்களாக ICTA இல் இருந்து அகமட், Yarl IT HUBஇன் இணை நிறுவுநர் சயந்தன் பாலதாசன், பொறியில் பீட பீடாதிபதி அற்புதராஜா ஆகியோர் சிறப்புரைகளை வழங்கினர்.

இதில் போட்டிக்காக, V Charge, Easy Park, Travel with Me, Insector, Kinder Med, Safe Crossing, Cheese, How Am I?, E-Toy, Press Me ஆகிய முன்மொழிவுகளின் 10 அணிகள் தெரிவு செய்யப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் Kinder Med முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டதுடன், E-Toy இரண்டாமிடத்தைப் பெற்றது. மூன்றாமிடத்தை How Am I? அணிகள் பெற்றது. சான்றிதழ் இன்றிய சிறந்த புத்தாக்க திட்டமாக Vcharge அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 12 ஆணிகள் களத்தில் இருந்தபோதும், இரண்டாம் நாளில் இரண்டு அணிகள் நீக்கப்பட்டு மற்றைய அணிகளுடன் கலக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முதலாவது இடத்தைப் பெற்றுக் கொண்ட Kinder Med அணி, திறன்பேசிகளில் சிறுவர்கள் விளையாட்டுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்கள் எடுக்க வேண்டிய மருந்துகள் தொடர்பாக நினைவுபடுத்துவதாகும். இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்ட E-Toy அணி, புத்தாக்கமான முறையில் சிறுவர்கள் மாதிரிக் கட்டடங்களை வடிவமைப்பதுக்கான அமைப்பொன்றை வடிவமைத்திருந்தது. மூன்றாம் இடத்தைப் பெற்ற How Am I? அணி, ஒரு ஆடையொன்றை வாங்குவதற்கு முன்னர் அதை எவ்வாறு அறிந்து கொள்வதென்பது குறித்த தகவல்களை வழங்கும் செயலியை வடிவமைத்திருந்தது. சிறந்த புத்தாக்க திட்டமாக அறிவிக்கப்பட்ட Vcharge, திறன்பேசியில் கதைத்துக் கொண்டிருக்போதே அதை எவ்வாறு மின்னேற்றுவது என்பது தொடர்பான அமைப்பை வடிவமைத்திருந்தனர்.

இறுதிநாள் நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியை வசந்தி அரசரட்ணம் கலந்து சிறப்புரையாற்றினார். தவிர, முதலாவது இடத்தினை பெற்றவர்களுக்கான சான்றிதழையும் வழங்கி கௌரவித்தார். இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கான சான்றிதழ்களை பொறியல் பீடாதிபதி கலாநிதி அற்புதராஜா வழங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களுக்கும், நடுவர்களுக்கும், Techstar வளவாளர் அபிசேக்குக்கும் ஏற்பாட்டுக் குழுவினரால்  நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டன.

துணைவேந்தர் தனதுரையில், இந்த நிகழ்வை குறிப்பாக கிளிநொச்சியில் நடாத்தியது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் அதற்காக ஏற்பாட்டாளர்களுக்கு நன்றியும் கூறினார்.இது போன்ற நிகழ்வுகள் அனைத்துப் பீடங்களையும் இணைத்துச்  செய்யப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மாணவர்களதும், அணிகளினதும் அளிக்கைத் திறமை குறித்து பாராட்டினார். நடுவர்களும் அணிகளின் திறமை குறித்தும் இறுதி அளிக்கைத் திறமை குறித்தும் சிலாகி்த்து பேசினார். வெற்றிக்காகத் தெரிவுசெய்யபட்ட அணிகள் தவிர, ஏனைய அணிகளும் வெற்றியாளர்களே என்றும் தெரிவித்தார். அவர்கள் மேலும் தமது புத்தாக்கம் குறித்து மேம்பாடுகளை செய்து வெற்றி அடைய வாழ்த்தினார்.

நிகழ்வு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் RB.பிரசாந்தனின் நன்றியுரையுடன், 2016ஆம் ஆண்டின் இலங்கையின் Startup Weekend பயணம் இனிதே நிறைவுற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .