2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கேள்விக்குறியாகும் இலங்கைக் கிரிக்கெட்

Editorial   / 2017 ஓகஸ்ட் 22 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமல் சந்திரன்

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற மூன்று போட்டிகள் அடங்கிய தொடரில் இந்தியா அணி, மூன்றுக்குப் பூஜ்ஜியம் என்ற அடிப்படையில் இலங்கையணிக்கு வெள்ளையடிப்புச் செய்து தொடரை வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணி இலங்கையில் வைத்துப் பெற்ற மோசமான தோல்வியாக இது அமைந்துள்ளது. இதற்கு முன்னர் அவுஸ்திரேலியா அணியுடன் 2002/03 கிரிக்கெட் பருவகாலத்தில் இலங்கை அணி, 3 போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்திருந்தது. அதன் பின்னர் இலங்கை அணி மூன்று போட்டிகளிலும் தோல்விகளை இந்த தொடரில் சந்தித்துள்ளது.

அவுஸ்திரேலியா தொடரின் தோல்விகள் மிக மோசமாக அமையவில்லை. ஓரளவு இறுக்கமான தோல்விகளாக அமைந்திருந்தன. ஆனால் இந்தியா அணியுடனான இந்தத் தொடர் தோல்வியில், போட்டிகளிலும் மிக மோசமாக இலங்கை அணி தோல்விகளைச் சந்தித்துள்ளது. இலங்கை அணியின் டெஸ்ட் வரலாற்றில் சந்தித்த மோசமான தோல்விகளில் ஒன்றாகவும் இதனைக் கூற முடியும்.

1993/94 கிரிக்கெட் பருவகாலத்தில் இலங்கை அணியை இந்தியா அணி மூன்று போட்டிகளிலும் இந்தியாவில் வைத்து வெற்றி பெற்றதன் பின், இரண்டாவது தடவையாக ஒரு தொடரின் சகல போட்டிகளையும் இலங்கை அணிக்கெதிராக இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது. அந்தத் தொடரே இந்தியா அணியின் சிறந்த வெற்றியாக அமைந்துள்ளது. மூன்று போட்டிகளிலும் இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றுக் கொண்டார்கள்.

இந்தியா அணி துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டு பகுதிகளிலும் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டு வெற்றிகளைப் பெற்றுக்கொண்டது. இலங்கை அணி இரண்டு பகுதிகளிலும் மிகவும் மோசமாகவே செயற்பட்டது. வீரர்களின் தொடர்ச்சியான மாற்றங்கள், உபாதைகள் இலங்கை அணியின் மோசமான தோல்விக்குக் காரணமாகக் கூறலாம். ஆனால், தோல்விக்கான காரணங்களாக இவற்றை மட்டுமே கூறிவிட முடியாது. இலங்கை அணியின் பந்து வீச்சு மோசமாகவே அமைந்தது. பந்துவீச்சு வெற்றிக்கு முக்கியமானது. துடுப்பாட்டம் தோல்வியில் இருந்து தப்புவதற்கு முக்கியமானது. துடுப்பாட்ட வீரர்கள் நல்ல முறையில் துடிப்பாடினால் தோல்வியில் இருந்து தப்பிச் சமநிலை முடிவுகளைப் பெறலாம். இந்தத் தொடர் முழுவதும் 6 இனிங்ஸில் துடிப்பாடிய இலங்கை அணி, தன் சொந்த மண்ணில் ஒரு தடவைதான் 300 ஓட்டங்களைத் தாண்ட முடிந்தது. இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசை இதுதான். அசேல குணரட்ன மாத்திரமே இல்லை. நல்ல துடுப்பாட்ட வீரர்களான இவர்களால் ஏன் துடுப்பாட முடியாமல் போனது?

இந்தியா அணியின் பந்துவீச்சாளர்கள், இலங்கையின் துடுப்பாட்ட வீரர்களுக்குப் பரீட்சயமானவர்களே. இலங்கைக்குச் சாதகமான ஆடுகளங்களைத் தயார் செய்தால் அது இந்தியா அணிக்கும் சாதகமா அமைந்து போகின்றது. பந்துவீச்சில் ரங்கன ஹேரத் சிறப்பாகப் பந்துவீசுபவர். அவரின் பந்துகளையும் இந்தியா அணி சிறப்பாக எதிர்கொண்டது. இந்தியாவின் துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தும் வகையில் பந்துவீசவில்லை. நுவான் பிரதீப், முதல் போட்டியில் 6 விக்கெட்களை கைபற்றிக்கொண்டார். உபாதை காரணமாக இரண்டாவது போட்டியில் பந்துவீச முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். இலங்கை அணிக்கு இதுவும் பின்னடைவைத் தந்தது. தொடர்ச்சியான வீரர்களின் உபாதைகள் இலங்கை அணிக்குப் பின்னடைவைத் தந்துள்ளதை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஏன் இந்த நிலை? போதுமான உள்ளூர் போட்டிகள் இல்லாமையே இதற்கு முக்கிய காரணம். இதனை இலங்கை கிரிக்கெட்டும் கண்டுகொள்வதாக இல்லை. ஆனால் வீரர்கள் போதியளவு உடற்தகுதியாக இல்லை. நாங்கள் என்ன செய்வது போன்ற கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கை அணியின் முக்கிய வீரர்களான அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால் ஆகியோர் தொடரில் முழுமையாகக் கைவிட்டனர். மத்தியூஸ் தனது துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தவென தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினார். ஓர் அரைச்சதத்தை மாத்திரமே அவரால் பெறமுடிந்தது. 6 இன்னிங்ஸில் 182 ஓட்டங்களையே மொத்தமாகப் பெறமுடிந்தது. உபாதை காரணமாக முதற் போட்டியில் விளையாடாத சந்திமால், 4 இன்னிங்ஸில் 96 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டார். நம்பிக்கையான வீரர்களே இவ்வாறு துடிப்பாடினால் மற்றையவர்கள் என்ன செய்வார்கள்?

இந்தியா அணியின் பந்து வீச்சு பலமானது. ஆனாலும் அவர்களை எதிர்கொள்ள முடியாதளவுக்கு இலங்கையின் துடுப்பாட்ட வீரர்கள் பலவீனமானவர்களா? இதே துடுப்பாட்ட வீரர்களே அவுஸ்திரேலியா அணியைக் கடந்த வருடம் வெற்றி பெற்றவர்கள். இவற்றை எல்லாம் பார்க்கும் போது இது திறமையைத் தாண்டி வேறு காரணிகளின் தாக்கமா என்ற கேள்வி எழுகின்றது. அணிக்குள் குழப்பமா அல்லது இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழப்பமா அல்லது இரண்டும் இணைந்த குழப்பமா? இவற்றுக்குத் தீர்வு காணாவிட்டால் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நிலை இலங்கை அணிக்கும் ஏற்படும். இனி ஏற்படுமா அல்லது ஏற்கெனவே ஏற்பட்டுவிட்டதா?

இந்தியா அணி, மிகப் பலமாகத் தொடர்ந்தும் வளர்ந்து வருகின்றது. குறிப்பாக மீள் நிரப்புகை வீரர்கள் நல்ல முறையில் செயற்படுகின்றனர். சிகார் தவான், இந்தத் தொடரின் முதற் தெரிவு அணியில் இடம் பிடித்திருக்கவில்லை. முரளி விஜய், உபாதையடைய அணிக்குள் இடம் பிடித்தார். அப்போது கூட அபினவ் முகுந்த். லோகேஷ் ராகுல் ஆகியோரே முதற் போட்டியில் விளையாடுவார்கள் என்ற நிலை இருந்தது. காய்ச்சல் காரணமாக ராகுல் விளையாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட அணிக்குள் வந்தவர் சதமடித்து அணியில் நிரந்தர இடத்தைப் பிடித்தார். அரைச்சதம் அடித்தும் கூட அபிநவ் முகுந்த், அணியில் தொடரமுடியவில்லை. இப்போது டெஸ்ட் அணியின் நிரந்தர வீரராக இருந்த முரளி விஜய்யின் இடம் காலி. விராத் கோலியிடம் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஓய்வெடுங்கள் என கேட்க, “இல்லை நான் விளையாடவேண்டும்” எனக் கூறிவிட்டாராம். ரோஹித் ஷர்மாவுக்குத் தலைமைப் பொறுப்பும், இன்னுமொரு வீரருக்கு அவரின் இடமும் போனால், கோலி சிலவேளைகளில் மீண்டும் அணிக்குள் வரப் போராட வேண்டி வருமோ என்ற பயம் கூடக் காரணமாக இருக்கலாம். அவர்களின் நிலை அது. எங்கள் அணியின் நிலையோ???

பந்துவீச்சில் ரவீந்தர் ஜடேஜா தடை செய்யப்பட அணிக்குள் வந்தவர் குல்தீப் யாதவ். 4 விக்கெட்களைக் கைப்பற்றி, அணிக்குக் கைகொடுத்தார். அணியாக அவர்களின் நெருக்கம், ஒற்றுமை ஆக்ரோஷமாக விளையாடும் தன்மை, அவர்களின் தயார்படுத்தல்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. மைதானத்தில் நேரடியாக இரண்டு அணிகளையும் பார்க்கும்போது துடிதுடிப்பான அணியாக இந்தியாவும், சோம்பேறி அணியாக இலங்கை அணியும் தென்படுகின்றது. பிறகு எவ்வாறு இலங்கை அணியால் சிறப்பாக விளையாட முடியும்?

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் உப்புல் தரங்க, ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகத் தேவைதானா என்ற நிலை உள்ளது. 2016ஆம் ஆண்டு மீள் வருகையின் பின்னர் சிம்பாவே, பங்களாதேஷ் அணிகளுடன் துடுப்பாட்டத்தில் பிரகாசித்துள்ளார். இந்தியா அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் பெற்ற 64 ஓட்டங்கள் இந்த தொடரின் கூடிய ஓட்டங்கள். மோசமான ஆரம்பம். திமுத் கருணாரட்ன, இந்தத் தொடரில் இலங்கை அணி சார்பாக கூடிய ஓட்டங்களைப் பெற்றவர். முதலிரு போட்டிகளிலும் சிறப்பாகத் துடுப்பாடிய போதும் இறுதிப் போட்டியில் கைவிட்டார். குசல் மென்டிஸ், இலங்கையின் தற்போதைய நம்பிக்கை நட்ச்சத்திரம். இரண்டாவது போட்டியில் பெற்றுக்கொண்ட சதம் மாத்திரமே.

சதமடித்துவிட்டால் குறைந்தது இரண்டு வருடங்களுக்காவது இந்தியா அணியில் இடத்தை தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற காலமிருந்தது. அதே நிலை எமது நாட்டுக்கும் வந்துவிட்டது. முச்சதம் அடுத்தவருக்கு அணியில் இடம் இல்லை என்ற நிலை இந்தியா அணியில். நான்காமிடத்தில் அணித் தலைவர் சந்திமால். மிகவும் மோசமாக ஏமாற்றிவிட்டார். 6 வருடமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றார். இலங்கையில் வைத்து இந்தியா அணியை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி போனார். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அணியில் இடமில்லை. முன்னேற்றம் தேவை. இல்லாவிட்டால் அணியில் இடம் இல்லாமல் போகும் அபாயமும் உண்டு.

அஞ்சலோ மத்தியூஸ், இலங்கை அணியின் தூண். தலைமைப் பொறுமைத் தனது துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தவெனத் துறந்தார். பந்துவீச்சும் இல்லை. ஆனால், தொடரில் பெற்றுக் கொண்ட ஓட்டங்கள் 182. ஓர் அரைச்சதம் மாத்திரமே. சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தியா அணியுடன் S.S.C மைதானத்தில் அடித்த சதத்தின் பின்னர் இன்னமும் சதமடிக்கவில்லை. அந்த போட்டியின் பின்னர் விளையாடிய 17 போட்டிகளில் 32 இன்னிங்ஸில் 5 அரைச்சதங்களை மாத்திரமே பெற்றுள்ளார். இவர் மீதான அழுத்தம் குறைவடைந்துள்ளது. அடுத்தடுத்த தொடர்களில் சிறப்பாகப் பிரகாசிக்க வேண்டும். இல்லாவிட்டால் அணியால் விலக்க வேண்டும். ஆனால், எங்கள் தெரிவுக்குழுவினரிடம் வேறு யாரும் தயாராக இல்லையே. பிறகு எப்படி முடியும்?

நிரோஷான் டிக்வெல்ல, ஆறாமிடத்தில் சராசரியாகத் துடுப்பாடியுள்ளார். விக்கெட் காப்பாளராக இந்த இடத்தில் துடுப்பாடுபவரிடம் இதற்கு மேல் எதிர்பார்க்க இயலாது. ஆனால், மற்றைய அணிகளில் இந்த இடத்தில் களமிறங்குபவர்களும் மிகவும் சிறப்பாகச் செயற்படுகின்றனர். அடுத்த இடம் இலங்கை அணிக்குப் பிரச்சினை கொடுத்த இடம். அசேல குணரட்ன முதற் போட்டியில் கை விரல் முறிவுடன் வெளியேற, ஒரு துடுப்பாட்ட இடம் இல்லாமல் போனது. அடுத்த போட்டியில் தனஞ்சய டி சில்வா அணிக்குள் சேர்க்கப்பட்டார். அவர் பிரகாசிக்கவில்லை. மூன்றாவது போட்டியில் அவர் நீக்கப்பட்டு மேலதிகப் பந்துவீச்சாளருடன் களமிறங்கினர். ஆனால், டில்ருவான் பெரேரா இறுதிப்போட்டியில் பந்துவீசியது வெறும் 8 ஓவர்கள் மாத்திரமே. இதற்கு தனஞ்சய டி சில்வாவை விளையாட வைத்திருக்கலாம்.

பந்துவீச்சாளர்களில் டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியை அண்மைக்காலங்களில் காப்பாற்றி வந்தவர் ரங்கன ஹேரத். ஆனால், அவரால் மிகப்பெரியளவில் சோபிக்க முடியவில்லை. முதற் போட்டியில் 1 விக்கெட்டை மாத்திரமே கைப்பற்ற முடிந்தது. இரண்டாவது போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் நிலவிய வேளையில், விளையாடி 4 விக்கெட்களை கைப்பற்றிக்கொண்டார். இறுதிப்போட்டியில் ஓய்வு வழங்குவதாக கூறி அணியால் நீக்கினார்கள். டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடி வரும் ஹேரத்துக்கு ஓய்வு தேவைதானா? நுவான் பிரதீப், இரண்டாவது போட்டியின் போது உபாதையடைந்தார். 17.4 ஓவர்கள் பந்துவீசிய நிலையில் மைதானத்தை விட்டு வெளியேறினார். இலங்கை அணி இரண்டாவது போட்டியிலும் 10 வீரர்களுடன் விளையாடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. நுவான் பிரதீப் உபாதையடைந்தமை இலங்கை அணிக்கு ஓரளவு இளப்பெனக் கூற முடியும். கண்டியில் இவரின் பந்துவீச்சு நிச்சயம் இலங்கை அணிக்குக் கைகொடுத்திருக்கும். டில்ருவான் பெரேரா, இலங்கை அணியின் இரண்டாம் நிலை சுழற் பந்துவீச்சாளர். முதற் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசவில்லை. ஆனால், இரண்டாவது போட்டி வாய்ப்பு நியாயமானது. இரண்டாவது போட்டியில் சிறப்பாகப் பந்துவீசவில்லை. பிறகேன் மூன்றாவது போட்டியிலும் வாய்ப்பு?

விஸ்வ பெர்ணான்டோ, இந்தத் தொடரின் நல்லதொரு கண்டுபிடிப்பு. பல தடவைகள் அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்துள்ளார். ஆனால், கிடைத்த வாய்ப்பில் 2 விக்கெட்களைக் கைப்பற்றி, தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். இவரின் பந்துவீச்சுச் சிறப்பாகவே இருந்தது. இவருக்கான வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்படவேண்டும். வழங்குவார்களா என்பது கேள்வியே? லஹிரு குமார, இலங்கையின் எதிர்கால வேகப்பந்துவீச்சாளராக வளர்க்கப்பட வேண்டியவர். முதற் போட்டியில் நான்கு விக்கெட்களைக் கைப்பற்றிய போதும் அடுத்த போட்டியில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டும் என இவரை நீக்கினார்கள். இறுதியில் வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாமலே அந்தப் போட்டி நிறைவடைந்தது. கண்டியில் தனது சொந்த மைதானத்தில் இவரால் சிறப்பாகப் பந்து வீச முடியாமல் போனது இவரின் துரதிர்ஷ்டம். இலங்கை அணிக்கு இரண்டு சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் கிடைத்துள்ளனர். இவர்களையாவது வீணடிக்காமல் சரியாக வளர்த்தால், வேகப்பந்து வீச்சில் இலங்கை அணி பலம் பெறும்.

நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் மாலிந்த புஸ்பகுமார, இலங்கை அணியில் இடம் பிடித்தார். 552 முதற் தர விக்கெட்களைக் கைப்பற்றி 31ஆவது வயதில் அறிமுகம் கிடைத்துள்ளது. 11 வருடமாக முதற் தர போட்டிகளில் விளையாடி வருகின்றார். இரண்டு போட்டிகளில் 5 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். லக்ஷன் சண்டகன், மூன்றாவது போட்டியில் 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இருவரும் தமக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பாவித்துள்ளனர். ஆனால், இருவருமே இடது கர சுழற் பந்துவீச்சாளர்கள் என்பது யாராவது ஒருவருக்கே விளையாடும் வாய்ப்புகள் என்பதை வெளிக்காட்டுகிறது. ரங்கன ஹேரத், விளையாடும் காலத்தில் இவர்களில் ஒருவரை அவரின் ஜோடியாக வளர்க்க வேண்டும். ஆனால், டில்ருவான் பெரேராவை ஒரு தொடரை வைத்து அணியால் நீக்கிவிட முடியுமா? ரங்கன ஹேரத், ஓய்வு பெறும்போது இவர்களில் ஒருவர் முழுமை இடம் பிடிப்பார்கள் என நம்பலாம்.

விளையாடிய அணி என்று பார்க்கும் போது இலங்கை அணியின் பந்துவீச்சு மோசமாகவே இந்த தொடரில் இருந்துள்ளது. அனுபவமற்ற பந்துவீச்சாளர்கள். ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால், எதிர்கால பந்துவீச்சு என்பது இலங்கை அணியைப் பொறுத்தளவில் சிறப்பாக வரும் என்ற நம்பிக்கையைத் தருகின்றது. ஆனால், துடுப்பாட்டம் நிச்சயமாகச் சீர் செய்யப்படவேண்டும். குறிப்பாக சிரேஷ்ட வீரர்கள் அபாய வலயத்துக்குள் கொண்டுவரப்பட வேண்டும். இவற்றின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்திடலாம். ஆனால், விளையாடும் இறுதி அணியை தெரிவுக்குழுவினர், வீரர்களின் அறைக்குள் இருந்து தெரிவு செய்யும் வரை இலங்கை அணியின் முன்னேற்றம் நிச்சயம் தடைப்படும். அசங்க குருசிங்க முகாமையாளர் மற்றும் தெரிவுக்குழு உறுப்பினர். அநேக போட்டிகளில் சனத் ஜெயசூரியா அணியுடன் உள்ளார். வெளிநாட்டுப் போட்டிகளிலும் கூட. வீரர்கள் எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதை அவர்கள் பார்க்க வேண்டுமே தவிர அணித் தெரிவிலோ வீரர்களின் விடையங்களிலோ தலையிடுவது அவர்களுக்கான அழுத்தங்களைத் தரும். கிரஹாம் போர்ட்டின் வெளியேற்றத்துக்குத் தான் காரணமல்ல என குருசிங்க கூறிவருகிறார். ஆனால், இவரின் பல விடயங்கள், பல கோணங்களில் ஊடகங்களில் உலா வருகின்றன.

இலங்கை கிரிக்கெட் மற்றும் அணி முகாமைத்து நிலையில் இருக்கும் அதிகாரப் போட்டியும் அடக்கி ஆள நினைக்கும் மன நிலையும் இல்லாமல் போகும் வரை, இலங்கை கிரிக்கெட்டின் நிலை கேள்விக்குறியே.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .