2024 மார்ச் 28, வியாழக்கிழமை

முன்பள்ளிகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்திக்க பணிப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 25 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

சாய்ந்தமருது பிரதேசத்தில் இயங்கி வருகின்ற முன்பள்ளிப் பாடசாலைகள் சிலவற்றில் நிலவும் சுகாதாரக் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கல்முனை மாநகர சபை பணித்துள்ளது.

இன்று (25) மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனை நடவடிக்கையின்போது, முன்பள்ளிப் பாடசாலைகளின் சுற்றாடல், வகுப்பறை இட வசதி, காற்றோட்டம், கொரோனா தொற்று பாதுகாப்பு ஏற்பாடு, மலசல கூட வசதி, சுகாதார நடைமுறைகளில் நிலவும் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்து, மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபின் அறிவுறுத்தலின் பேரில், கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர் தலைமையில், சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான எஸ்.தஸ்தகீர், வருமானப் பரிசோதகர்களான எம்.சலீம், என்.புவனேந்திரன் உள்ளிட்டோர் இப்பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, பிள்ளைகளுக்குத் தீங்கு ஏற்படும் வகையில், சில முன்பள்ளிகளில் அவதானிக்கப்பட்ட குறைபாடுகள் யாவும் ஒருவார காலத்துக்குள் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமென அவற்றின் பொறுப்பாளர்களுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டதுடன், தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவை மூடப்படும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதாக, மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன் தெரிவித்தார்.

அதேவேளை, கல்முனை மாநகர சபை, கிழக்கு மாகாண சபையின் முன்பள்ளிப் பணியகம் என்பவற்றின் அனுமதி பெறப்படாமல் சில முன்பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றமை இதன்போது கண்டறியப்பட்டதாகவும் அவற்றை உடனடியாகப் பதிவு செய்துகொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X