2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்தில் மாற்றம்

பைஷல் இஸ்மாயில்   / 2017 டிசெம்பர் 17 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரியாலயமாக மாற்றப்பட்டுள்ளதாக, முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் உச்சபீட உறுப்பினரும் அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்து கொண்டவருமான மௌலவி எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயத்தை, மக்கள் காங்கிரஸின் பிராந்தியக் காரியாலயமாக மாற்றி, கடந்த வெள்ளிக்கிழமை மாலை அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவும் அக்கரைப்பற்று மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவும் கடந்த காலங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து நாம் பணியாற்றிய போதும் அதில் ஏமாற்றமே கிடைத்தது.

“எமக்கு வழங்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதிகளும் இதுவரையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினாலேயோ அல்லது தலைவரினாலேயோ நிறைவேற்றப்படவில்லை.

“இந்நிலையிலேதான் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமயிலான மக்கள் காங்கிரஸ் அங்கம் வகிக்கும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் நாம் இணைந்து பணியாற்ற முடிவெடுத்தோம்.

“முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று மத்திய குழு உறுப்பினர்களான எம்.ஏ.மொஹிடீன், எச்.என்.நளீம், எம்.பி.அமீன், எஸ்.எம்.எம்.ஜெமீல் ஆகியோரும் இந்தத் தூய பயணத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.

“அக்கரைப்பற்று மக்கள் காலாகாலமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அவற்றில் புரையோடிப்போய்க் கிடக்கும் வட்டமடு பிரச்சினை, அக்கரைப்பற்று நுரைச்சோலை வீடமைப்புத் திட்டம் ஆகிய பல்வேறு பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல்  இழுத்தடிக்கப்படுகின்றன.

“அரசாங்கத்தின் பலமான அமைச்சரான ரிஷாட் பதியுதீன் வழியாக சமூகத்துக்கான எமது பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க முடியுமென நாம் திடமாக நம்புகின்றோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X