2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘இனங்களுக்கும் இடையிலான தொடர்பு மீளக் கட்டியெழுப்பப்படும்’

பைஷல் இஸ்மாயில்   / 2018 ஜனவரி 01 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

“அம்பாறை மாவட்டத்தில் தமிழ் – சிங்கள மக்களுக்கிடையில் மிக அன்னியோன்னியமான உறவுகள் நிலவி வந்திருக்கின்றன. ஆயினும், கடந்த மூன்று தசாப்த கால யுத்தம்தான் எம்மை பிரித்து விட்டது. ஆனால், அம்பாறை மாவட்டத்தில் இரு இனங்களுக்கும் இடையிலான தொடர்பை மீள கட்டி எழுப்புகின்ற உறவு பாலமாக நான் எனது இராஜாங்க அமைச்சர் பதவியை பயன்படுத்துவேன்” என்று,  மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரும், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீயானி விஜேவிக்கிரம தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அண்மையில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட இவர், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி செயற்பாட்டாளர்களை, அவரது அம்பாறை இல்லத்தில் இன்று (01) சந்தித்து பேசியபோதே, இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அம்பாறை மாவட்ட தமிழர்களுக்கு பரந்துபட்டளவில் சேவையாற்றக் கூடிய மகத்தான வாய்ப்பு இப்போதுதான் முதன்முதலாக தனக்குக் கிடைத்துள்ளது.

“கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் மூத்த அமைச்சர்கள் பலர் இருந்துள்ளபோது, அக்காலப் பகுதியில் எனக்கு எவ்விதமான அமைச்சுப் பதவிகளும் இருக்கவில்லை. அதனால் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு பரந்து பட்டளவில் சேவை செய்கின்ற வாய்ப்புகளும் எனக்கு கிடைத்து இருக்கவில்லை.

“ஆனால், இப்போதுதான் எனக்கு ஓர் அமைச்சுப் பதவி கிடைத்துள்ளது. இதன்மூலம் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு என்னால் முடிந்தளவு சேவைகளை வழங்கவேண்டும் என்ற சிந்தனையில் இருக்கின்றேன்.

“அம்பாறை மாவட்டத்தில் தமிழ் – சிங்கள மக்களுக்கு இடையில் நின்று நிலைத்து நீடித்து வந்திருக்கின்ற மிக நெருக்கமான உறவின் அடையாளமாக காரைதீவு மண் விளங்குகின்றது.

“சிங்கள மக்களால், பத்தினி தெய்வம் என்று வழிபடப்படுகின்ற கண்ணகி அம்மன், காரைதீவு மண்ணின் காவல் தெய்வமாக அருள் பாலித்து வருகின்றார். அவருடைய அருளாசிகளுக்காக இறைஞ்சுகின்றேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .