2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

“உள்ளூராட்சி மன்றக் கோரிக்கைக்கு தடையாக இருக்கமாட்டேன்”

Editorial   / 2018 ஜனவரி 19 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா, அஸ்லம் எஸ்.மௌலானா

“சாய்ந்தமருது மக்களின் உள்ளூராட்சி மன்றக் கோரிக்கைக்கு நான் ஒருபோதும் தடையாக இருக்கமாட்டேன். அதேவேளை கல்முனை, சாய்ந்தமருது ஆகிய இரு பிரதேச மக்களையும் நிரந்தர பகையாளர்களாக பிரித்து வைக்கின்ற அந்த பெரும் துரோகத்துக்கும் நான் துணை போக மாட்டேன்” என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் மக்கள் சந்திப்பு, சாய்ந்தமருது பேர்ல்ஸ்கூட்ட மண்டபத்தில், வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சாய்ந்தமருது பிரதேசத்துக்கான அமைப்பாளர் எம்.ஐ.எம்.ஜமால் தலைமையில், வியாழக்கிழமை (18)  நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். இங்குத் தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,  

“சமூக நோக்குடனேயே எனது அரசியல் பயணம் செல்கிறது. ஏனையத் தலைவர்களைப் போன்று, மக்களை கூறுபோட்டு, சமூகத்தை ஏமாற்றுபவனாகவும்  ஊடகங்களில் பிரபல்யம் தேடுபவனாகவும் ஒரு போதும் இருப்பதில்லை.

“வாக்குறுதி வழங்கிவிட்டு சாய்ந்தமருது  மக்களை நான் ஏமாற்றுவதாக நினைக்கின்றார்கள். அவ்வாறு நான் ஒருபோதும் செயற்படுவதில்லை. இங்கு ஒன்றினையும், வேறு இடத்தில் இன்னொன்றையும் கூறி அரசியல் செய்யும் கலாசாரம் என்னிடம் இல்லை. உண்மையில் இப்பிராந்தியத்தில் இருக்கும் பிரச்சினைகள், பிரதேசங்களின் கட்டமைப்புகள் பற்றி நான் அறிந்து கொள்ளவில்லை. 

“இந்த ஊர்மக்களின் வேண்டுதலின் பேரில் நானும் அமைச்சர் றிசாட் பதியுதீனும் இங்கு வந்து உள்ளூராட்சி மன்றத்தை வழங்குவதற்கு ஆதரவு வழங்கி இருந்தோம். ஆனால், கல்முனை பிரதேசத்தின் எல்லைகள், சனப்பரம்பல் மற்றும் வேறு பிரச்சினைகள் பற்றி பிரதி அமைச்சர் ஹரீஸ் எங்களிடம் எடுத்துக் கூறி இருந்தார். அதனாலேயே அந்த நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டது.

“கல்முனை, சாய்ந்தமருது மக்களை நிரந்தர பகையாளர்களாக மாற்றுவதற்கு நான் ஒருபோதும் தயாரில்லை. இங்குள்ள அரசியல் தலைமைகள் ஒன்று பட்டு ஒருமித்த கருத்தை தெரிவிப்பார்களாயின் சாய்ந்தமருது பிரதேசத்துக்கான உள்ளூராட்சி மன்றத்தை மிகவிரைவாக ஜனாதிபதியுடன் கதைத்து அதனை வழங்க தயாராகவுள்ளேன்.

இந்த மக்களையும், சமூகத்தையும் ஏமாற்றுபவர்களை தொடர்ச்சியாக  வாக்களித்தனுப்பியவர்கள் நீங்களே ஆகும். கொழும்பில் கோட்டும் சூட்டும் போட்டுக் கொண்டு பெரும் ஹொட்டல்களில் உல்லாசம்புரிபவர்கள் இங்கு வந்தவுடன் சாறனும், சாலிவையும், தொப்பியும் அணிந்து பாசாங்கு செய்து அரசியல் செய்கின்றனர்.

இவர்களின் போலித்தனத்தை புரிந்து கொள்ளாமல் இந்த மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருவது பெரும் கவலையளிக்கின்றது. இவ்வாறான தலைவர்களுக்கு உங்களது வாக்குப் பலத்தின் மூலமே பாடம்புகட்ட வேண்டும் என நான் வினையமாக வேண்டிக் கொள்கின்றேன்.

சாய்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றம் தொடர்பில், ஜனாபதியும் என்னிடம் கலந்துரையாடியுள்ளார். இந்த மக்களின் கோரிக்கை, நீண்டகால அபிலாசைகள் தொடர்பிலும் நான் விரிவாக எடுத்துக் கூறியிருக்கின்றேன். இதனை வழங்குவதற்கே ஜனாதிபதியும் விருப்பம் கொண்டுள்ளார் என்ற தகவலையும் உங்களுக்கு வழங்கிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X