2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கோழிக் கூண்டிலிருந்து மாணவனின் சடலம் மீட்பு

பைஷல் இஸ்மாயில்   / 2017 நவம்பர் 30 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிந்தவூர், 09ஆம் பிரிவைச் சேர்ந்த 6ஆம் தர மாணவன் ஒருவர், அவரது வீட்டிலுள்ள கோழிக் கூண்டிலிருந்து, நேற்று (29) சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

முகம்மது பாயிஸ் முகம்மது நிஹாஜ் (வயது 11) எனும் மாணவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நிந்தவூர் அல்-மினா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற குறித்த மாணவன், நேற்று இறுதியாண்டுப் பரீட்சை எழுதி விட்டு காலை சுமார் 11.30 மணியளவில் வீடுச் சென்று, வீட்டிலுள்ள ஏனைய பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், பகலுணவு வேளையில் காணாமல் போயுள்ளாரென, உறவினர்கள் தெரிவித்தனர்.

இறுதியில் அவரது வீட்டுக் கிணற்றடியில் அமைக்கப்பட்டுள்ள கோழிக் கூண்டில் பார்த்த போது, அங்கு மாணவனின் உடல் மீட்கப்பட்டதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவனின் தாயும் தந்தையும் வெவ்வேறு திருமணங்கள் முடித்துக் கொண்டு, பிரிந்து வாழ்வதால் மாணவன், தனது அம்மம்மா வீட்டில் வளர்ந்து வந்துள்ளாரென, சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஏ.எம்.நசீல், சம்மாந்தறை பொலிஸார் சகிதம் வருகை தந்து, சடலத்தைப் பார்வையிட்டார்.

அத்தோடு, மாணவனின் வீட்டுக்கும் சென்று, கோழிக் கூட்டையும் பார்வையிட்டதன் பின்னர் உறவினர், அயலவர்களையும் விசாரணை செய்த பின்னர், சடலத்தை பிரேத பரிசோதனை செய்யுமாறும், நீதிபதி உத்தரவிட்டார்.

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X