2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’சஜித், கோட்டாவின் முகாம்களில் திருடர்களே உள்ளனர்’

Editorial   / 2019 ஒக்டோபர் 25 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா,  எம்.ஏ.றமீஸ், எஸ்.எம்.இர்ஷாத்

ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ, கோட்டாபாய ராஜபக்ஷ ஆகியோரின் முகாம்களில், திருடர்களும் இனவாதிகளுமே உள்ளனர் என்றும் அவர்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவதால் நாடும், நாட்டு மக்களும் பாரிய ஆபத்தையே எதிர்நோக்க நேரிடும் என்றும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் வியாழக்கிழமை இரவு (24) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்  கலந்தகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், 

“இன்று நாட்டில் கேள்விக்குறியாகவுள்ள தேசியப் பாதுகாப்பு,  மக்கள் பாதுகாப்பு என்பன முறையானத் திட்டமிடலுடன் சீரமைப்பதற்கான வழிவகைகளை நாம் கொண்டு வருவோம். இந்த நாட்டில் இனி யுத்தமும் வேண்டாம், முரண்பாடுகளும் வேண்டாம். எமது குழந்தைகள் நிம்மதியாகவும் ஒற்றுமையுடனும் ஐக்கியத்துடனும் வாழக் கூடிய சுதந்திர தேசமொன்றை கட்டியெழுப்புவதே, எமது பிரதான நோக்கமாகும்.  

“ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலின் பின்னர், நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமாக அதிக அக்கறை செலுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கின்ற இவ்வேளையில், எதிரணியில் இருக்கின்ற இரு பிரதான வேட்பாளர்களும் ஆட்சி அதிகாரத்தைக் கோரி நிற்கின்றார்கள். இவர்களும் இவர்களின் குடும்பத்தினரும்தான், கடந்த 71 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆட்சி செய்து வந்தார்கள்.

“இந்த நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் சமூக நல்லிணக்கமும் சமூகப் புரிந்துணர்வுடன் கிறிஸ்தவ, தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒற்றுமையாகவும், சம அந்தஸ்துடனும் வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும். இந்த நாட்டில் மிகப் புனிதமான சேவையை செய்து வருகின்ற இலங்கை பெலிஸார், அவருடைய சேவைகளை திறம்படச் செய்வதற்கு அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கின்ற காரணத்தால் சரிவர செய்ய முடியாமல் திணறுகிறார்கள்.

“மிகத் திறமையான பொலிஸ் திணைக்களம் எமது நாட்டில் இருக்கின்றது. அவர்களுடைய வேலைகளை சரிவர செய்ய முடியாமல் இருப்பதற்கு பிரதான காரணம் ஊழலில் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட அரசியல்வாதிகளும் அரசியல் தலைவர்களுமே. வசீம் தாஜுதீனின் கொலை, சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, எக்னெலிகொட ஆகியோரின் கொலை பொலிஸ் திணைக்களத்தினால் கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கு பிரதானமான காரணம் அரசியல்வாதிகளின் தலையீடே” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .