2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

Kogilavani   / 2017 செப்டெம்பர் 27 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.சி.அன்சார்

 

“சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையை, வெளிநாட்டு நிதி உதவிகளைக் கொண்டு சகல வசதிகள் கொண்ட வைத்தியசாலையாக நவீன முறையில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”  என சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம் தெரிவித்தார்.

 

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு,  சுகாதார அமைச்சின் 37 மில்லியன் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்படவுள்ள மருத்துவ விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு,  வைத்திய அத்தியேட்சகர் வை.எம்.அஸீஸ் தலைமையில், நேற்று நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே,  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, பழம்பெரும் வைத்தியசாலையாகும். இவ்வைத்தியசாலையை தரமுயர்த்தி அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென,  பல்வேறு தரப்பினராலும் நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

அதற்கமைய இவ்வைத்தியசாலை, ஏ தரத்திற்கு தரமுயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாணத்தில் மாத்திரம்,  13 ஆதார வைத்தியசாலைகள்  காணப்படுகின்றன. இவ்வைத்தியசாலைகள்,  வெளிநாட்டு நிதி உதவிகளைக்கொண்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

குறிப்பாக சம்மாந்துறை, மூதூர், கிண்ணியா, பொத்துவில், திருக்கோவில், தெஹியத்தகண்டிய ஆகிய வைத்தியசாலைகளை,  நவீன முறையில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வருகின்றன.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்ற வேளையிலும்,  நல்லாட்சி அரசாங்கம் சுகாதாரத்துறையின் அபிவிருத்திக்கென அதிகமான நிதியை ஒதுக்கீடு செய்வதால்,   சுகாதரத்துறை அபிவிருத்திக் கண்டு வருகின்றது.

2020ஆம் ஆண்டுக்குள்  சுகாதரத்துறையின் பாரிய குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கையினை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் இவ்வைத்தியசாலைக்கு மேலும் ஐந்து வைத்தியர்கள், சிறுபிள்ளை வைத்திய நிபுணர்களை நியமிக்கவுள்ளோம்.

எதிர்வருகின்ற காலங்களில் கல்முனை பிராந்தியத்திலுள்ள வைத்தியசாலைகளில் ஏதாவது விசேட பிரிவினை ஆரம்பித்து அபிவிருத்தி செய்ய நடவடிக்கையினை எடுக்கவுள்ளேன்.

இன்று நாட்டில் வைத்திய மற்றும் விசேட வைத்திய நிபுணர், தாதியர் பற்றாக்குறை அதிகம் காணப்படுகின்றன.

குறிப்பாக கிராமப்புரங்களில் உள்ள வைத்தியசாலைகளிலே அதிகமான வைத்தியர், தாதி உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றன.

தற்போது 8000 தாதி உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கான நியமனங்களை வழங்குவதன் மூலம் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவதோடு, எதிர்காலத்தில் மருத்துவ பீடத்துக்கு அதிகமான மாணவர்களைச் சேர்ப்பதற்கான நடவடிக்கினை மேற்கொள்ளவுள்ளோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .