2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜெயபாலனுக்கு ஹரீஸ் எம் பியின் பதில் மடல்

Editorial   / 2019 ஜூலை 21 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 நடிகரும் இலக்கியவாதியுமான ஜெயபாலன் தன்னுடைய முகலில்  கடந்த வாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸை  அமைச்சுப்பதவியை பொறுப்பேற்குமாறு கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தார். அந்தக் கோரிக்கைக்கு பதிலளித்த   நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் : எனது சமூகத்தை அடகுவைத்து என்னை அமைச்சராக அலங்கரிக்க வேண்டிய தேவை எனக்கில்லையென நினைக்கிறேன். அமைச்சர் பதவி எடுப்பதை விட போராட்ட களத்தில் திடமாக போராடி உரிமைகளை மீட்டெடுக்க விரும்புகிறேன்.என பதிலளித்துள்ளார். 

 'தமிழ், முஸ்லிம் மக்களின்  நல்லெண்ண உறவிலும்,   இரு சமூகத்திற்கான எனது அரசியல் பணியிலும் அக்கறையுடைய உங்களுடைய வேண்டுகோளுக்கு எனது பணிவான பதில்களை சமர்ப்பிக்கின்றேன் ஐயா! என அவரது பதிலில்,
நான் பதவி துறக்கபோவதாக வந்த சேதி அதிர்ச்சி தந்ததாக நடிகரும் எழுத்தாளருமான ஜெயபாலன் ஐயா கூறியுள்ளீர்கள்.
எங்கள் சமூகத்தின் தலைவர்களை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்ட இனவாத அலையில் எங்கள் சமூகம் மூழ்கி இறந்து விடும் என்ற அச்சத்தின் உச்சத்தால் கூட்டு இராஜினாமா எனும் முடிவை நான் வழிமொழிய எல்லோரும் ஆமோதித்து ,அந்த முடிவை இறுதிமுடிவாக எட்டினோம்.  அத்தகைய நிலைபாடு அன்று அவசரமாக எடுக்காமல் விட்டிருந்தால் இன்று எமது நாடு மீண்டும் உதிரம் எழுதிய காவியமாக மாறியிருக்கும்.
எனது முடிவால் எதிர்கால தமிழ், முஸ்லிம் உறவில் கறையாகி விடும். தயவு செய்து தங்கள் முடிவை கைவிடுங்கள் என கேட்டுள்ளீர்கள்.
பாலகனாக இருந்த நாள் முதல் இன்றுவரை ஒன்றாக பிணைந்து ஒரே வீதியில் உறவாடி தமிழ் உறவுகளை மதித்து பழகியவன் நான். எனது அமைச்சரவை நிதி ஒதுக்கீடு முதல் என் பிரதேச அரசியல் உரிமை வரை சகோதர தமிழ் மக்களின் பங்குகளை சரியாக பிரித்து, புரிந்துணர்வு கலந்து வழங்கிய ஏடுகள் இன்றும் ஆதாரமாகவுள்ளன. தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அண்ணன் காத்தமுத்துவை பிரதி மேயராக்கிய சம்பவம் முதல் இந்த வருடம் செய்து முடிக்கப்பட்ட நவீன மின்விளக்கு அலங்காரம் வரை அதன் தொடர்ச்சியாகவே எஞ்சியுள்ளது.

நீங்கள் மீண்டும் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டு கல்முனை, சாய்ந்தமருது கல்முனை வடக்கு தமிழ் மக்களுக்கு சேவை செய்யவேண்டும். இது எனது பணிவான வேண்டுகோள்  என்கிறீர்கள், அதனை நான் நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன். இருந்தாலும் எனது சமூகத்தை அடகுவைத்து என்னை அமைச்சராக அலங்கரிக்க வேண்டிய தேவை எனக்கில்லையென நினைக்கிறேன். அமைச்சர் பதவி எடுப்பதை விட போராட்ட களத்தில் திடமாக போராடி உரிமைகளை மீட்டெடுக்க விரும்புகிறேன்.

  ஒரு தலைவனாக யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு தோழர் ரவூப் ஹக்கீமுடனும் முஸ்லிம் காங்கிரசுடனும் இணைந்து முன்செல்லுங்கள் என்கிறீர்கள்.
 

எனது இந்த விடுதலை இயக்கம் முஸ்லிம்களின் உரிமைகளை போராடி வெல்ல உருவானது. சறுக்கல்கள் இருக்கிறது என்பதனால் அதுவே உண்மையாகிடாது. காலம் கனிந்து விடியல் உதிக்கும். ஆறுதலினால் சாதிக்க முடியும் என்பது ஜாம்பவான்கள் நிரூபித்து சென்ற பாதை.  அதில் என் பாதங்களை ஊன்றி பதித்துள்ளேன். தலைவர் ஹக்கீமின் தலைமைத்துவத்தில் நான் எப்போதும் நேராகவே பயணிக்கிறேன். எனது ஆலோசனைகள், கருத்துகளை பிரதித்தலைவராக எப்போதும் முன்வைப்பதில் நான் பின் நிற்பதில்லை.பெரும் தலைவர்  எம்.எச்.எம். அஷ்ரப், எங்களை சரியாக புரிந்து புடம் போட்டுள்ளார் என நம்புகிறேன்.

 கல்முனைத் தாயின் மூன்று பிள்ளைகளான கல்முனை, சாய்ந்தமருது முஸ்லிம்களுடனும் கல்முனை வடக்கு தமிழர்களுடனும் சமரசம் செய்து கொள்ளுங்கள் என்கிறீர்கள்.
நான் அவர்களுடன் தோழமையுடன் பழகும் ஒருவன். தொப்புள்கொடி உறவுகளுடன் சண்டையிட்டு ஆனபலன் எதுவுமில்லை. சிறந்த வர்த்தகர்களின் ஒருவராக இருந்த என் தந்தை என்னை சட்டத்தரணியாக அழகு பார்த்துள்ளார். அரசியலுக்கு நான் உழைக்க வரவில்லை. என்னுடைய கல்முனை மக்களுக்கும், இலங்கை முஸ்லிங்களுக்கும் பாதிக்கப்படும் தமிழ் மற்றும் மலையக மக்களுடைய உரிமைக்குரலாகவே நான் என்னுடைய அரசியல் பயணத்தை வழிநடத்தி செல்கிறேன். நன்றி என கருத்துரைத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பிரனர்  ஹரீஸ். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .